being created

கம்போங் சுங்கை நிப்பா நிகழ்வு

From Tamil Wiki
Revision as of 07:37, 23 February 2023 by Saalini (talk | contribs) (Created page with "1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் இரண்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் இரண்டுக்கும் முதன்மை தரும் விதத்திலேயே அரசாங்க வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒரு குடிசைப் பகுதியோ அல்லது ஒரு கிராமமோ கையகப்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் குடியிருப்போர் அரசு அதிகாரிகளுடன் கைகலப்புகளில் ஈடுபடுவர். அவ்வாறு நிகழ்ந்த நிகழ்வுகளில் ஒன்றுதான் கம்போங் சுங்கை நிப்பா கிராமம் நிகழ்வு.

பின்னணி

நகர்ப்புறத்தில் உள்ள வீட்டின் நிலை

மலேசியாவில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்காக மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டுள்ளது. அத்துடன், கிராமப்புற மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான தீர்வுகளைக் காண்கிறது. ஏழ்மையிலிருந்து கிராமப் புற மக்களை விடுதலை பெறச் செய்ய அவர்களுக்கு உதவி செய்வதில் அரசு உறுதியாக நிற்கிறது.

அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் நிலை

நகர்ப்புற கிராமங்களிலும் குடிசைப் பகுதிகளிலும் நிலைமை மிகவும் வேறுபட்டிருந்தது. அதிகாரமட்டத்தில் இப்பகுதிகளில் உள்ள மிக மோசமான நிலைமைகள் குறித்து அரசாங்கம் மிகச் சிறிய அளவிலேயே ஆய்வு நடத்துகிறது. அரசாங்கத்தின் எவ்வித உதவியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. குடிசைப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதிலிருந்து இவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்களுக்கென சொந்த வீடு வாங்கிக் கொள்ளக்கூடிய அளவு வசதி இல்லாததால் தொடக்கக் காலங்களில் நகரின் குடிசைப் பகுதிகளில் குடியேறினர். படிப்படியாக, குடிசைப் பகுதிகளே அவர்களது நிரந்தர வாழ்விடமாக மாறிப்போனது. அடிப்படை வசதிகள் ஏதுமற்ற மிக மோசமான நிலைமையில் வாழ்ந்தனர். குடிசைப்பகுதி மக்கள் தொகையில் 16.1% இந்தியர்களாவர்.

இவ்வாறு நகர்ப்புறங்களில் கிராமங்களிலும் குடிசைப் பகுதியில் வாழ்பவர்கள் தீ விபத்து, மழை, வெள்ளம் போன்றவற்றின் இன்னல்களுக்கு ஆளாகி தங்களின் உடமைகளை இழக்கின்றனர். அதோடு, மலேசியா அரசாங்கம் வளர்ச்சித் திட்டத்திற்காக இவர்கள் வாழும் சில குடிசை பகுதிகளையும் கிராமப் பகுதிகளையும் கையகப்படுத்தினர். கம்போங் தாமான் சிட்டி, கம்போங் செலாயாங் பஹாகியா, கம்போங் தாமான் ஷாமிலின், கம்போங் சுங்கை நிப்பா, செந்தூல் ரத்னம் பிள்ளை கிராமம் போன்ற பகுதிகள் வளர்ச்சித் திட்டத்திற்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளாகும்.

கம்போங் சுங்கை நிப்பா

கோலாலம்பூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் சுபாங் என்ற இடத்தில் சுங்கை நிப்பா கிராமம் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இங்கு வாழ்ந்தனர்.

நிகழ்வு

பெட்டாலிங் ஜெயா

பெட்டாலிங் ஜெயா நகர மன்றம் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாற்று இருப்பிட ஏற்பாடு எதுவும் அவர்களுக்குச் செய்து தரவில்லை. மார்ச் 5, 1999 அன்று சுங்கை நிப்பா கிராமத்தில் உள்ள வீடுகள் இடித்துத் தள்ளப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டது. ஷா ஆலாமில் உள்ள உயர்நீதிமன்றத்தில் இடைக் காலத் தடை கோரி கிராமமக்கள் விண்ணப்பித்தனர். உயர்நீதிமன்றம் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது. 2000ஆம் ஆண்டில் ஜூன் மாதம் காலையில் சுமார் 400 கிராம மக்கள் திரண்டு தங்கள் வீடுகளை இடிப்பதைத் தடுத்தனர்.

பெட்டலிங் ஜெயா நகர மன்றம் வீடுகளை இடிப்பதற்காகக் காவல்துறையையும் கூட்டரசின் சிறப்புப் படைப்பிரிவையும் (FRU) கொண்டு வந்து இறக்கியது. மக்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை எச்சரித்தது. மக்கள் அதற்கு இணங்காததால் அவர்களைக் கலைக்கத் தண்ணீர் பீச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தியது. கிராம மக்களையும் தன்னார்வ அமைப்பினரையும் காவல்துறை கைது செய்தது. இறுதியில் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. வாழ்விடமின்றி சுங்கை நிப்பா கிராமமக்கள் நிராதரவாக விடப்பட்டனர்.

சர்ச்சைகள்

ஏப்ரல் 24, 2001 அன்று, சுங்கை நிப்பா கிராமம், பத்து தீகா சன்வே கிராமம் ஆகியவற்றைச் சேர்ந்த குடிசைவாழ் மக்கள் தாமான் சுங்கை மேவாவிலும் லோ  சுபாங் ஜெயாவிலும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் குடியமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. வீடொன்றின் விலை 42,000 ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை

  • மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை(2006)- மா. ஜானகிராமன்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.