under review

கம்பார் கனிமொழி

From Tamil Wiki
Revision as of 09:59, 18 June 2022 by Saalini (talk | contribs) (Created page with "thumb|411x411px|''கம்பார் கனிமொழி'' கம்பார் கனிமொழி (கனிமொழி குப்புசாமி) மலேசியா எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கடித இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசை ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கம்பார் கனிமொழி

கம்பார் கனிமொழி (கனிமொழி குப்புசாமி) மலேசியா எழுத்தாளர்களில் ஒருவர். இவர் கடித இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசை பாடல்கள் போன்ற படைப்புகளை எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

கம்பார் கனிமொழி மார்ச் 22, 1943 அன்று, பேராக் மாநிலத்தில் உள்ள தெலுக் இந்தானில் வீரப்பன் – லட்சுமி இணையருக்குப் பிறந்தவர். இவர் குடும்பத்தில் ஒரே பிள்ளையாவார். இவர் தம் தொடக்கக் கல்வியைத் தெலுக் இந்தானில் உள்ள ஹெம்பர்லாக் தோட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் தொடங்கினார். கம்பாரில் உள்ள தனியார் பள்ளியில் இடைநிலை கல்வியைப் பெற்றார். பின்னர், தமிழகத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை இலக்கியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

இவர் ஆரம்பக் காலத்தில் ஈயச் சுரங்கங்களில் உடல் உழைப்பாளராக வேலை செய்துள்ளார். பிறகு, துணி, அலமாரி போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மனைவியின் பெயர் திருமேனி. இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

கம்பார் கனிமொழி 2.jpg

8.8.1988 ஆம் அன்று மலேசிய வானொலி ஒலியலை ஆறின் வட மலேசிய வட்டார ஒலிபரப்பில், பினாங்கு நிலையத்திலிருந்து ஒலியேறி வந்த ‘குடும்ப நிகழ்ச்சியில்’ இவருடைய அன்புக் கடிதங்கள் என்ற தொடர் வழி இவரின் இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. அன்புக் கடிதங்கள் என்ற தொடரை எழுதி தாமே வானொலியில் படித்து வழங்கினார். பின் 1991ஆம் ஆண்டு வட்டார ஒலிபரப்பு நிறுத்தப்பட்டவுடன் கோலாலம்பூர் நிலையத்தில் ஒலியேறிய ‘வண்ணக்கோவை’ நிகழ்ச்சிக்காக அன்புக் கடிதங்கள் எழுதி வழங்கினார். பின்னர், வானொலியில் வலம் வந்த அன்புக் கடிதங்கள் நூலாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. மலேசிய கடித இலக்கியங்களில் அன்புக் கடிதங்கள் குறிப்பிடத்தக்ககூடிய நூலாகும்.

தமிழ் இயக்கப் பாடல்கள் என்ற தலைப்பில் இசை பாடல் தொகுப்பை இவர் எழுதினார். இதுவே இவரின் முதல் நூலாகும். இவர் பாரதிதாசனின் குடும்ப விளக்கை நாடகமாக எழுதியுள்ளார். அந்த நாடகம் மின்னல் பண்பலை ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பானது. நாடகம் ஒலியேறி வரும் காலக்கட்டத்தில், மலேசிய நண்பனின் ஞாயிறு பதிப்பில் இந்நாடகத் தொடர் வெளியிடப்பட்டது. பின்னர், ‘குடும்ப விளக்கு நாடகம்’ என்ற தலைப்பில் நாடகம் புத்தக வடிவில் அச்சிடப்பட்டது. தொடர்ந்து, கவிதைகள், அகராதிகள், பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய விளக்க நூல்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். அகராதி துறையில் இவர் எழுதிய மயங்கொலி சொற்பொருள் அகராதி குறிப்பிடத்தக்க முயற்சி ஆகும்.

மேலும், இவர் கல்விக் கனிகள், கம்பார் கனிகள் முதற் தொகுதி, கம்பார் கனிகள் இரண்டாம் தொகுதி என தலைப்புகளில் பாடல் வரிகளை எழுதி மூன்று குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளார். இப்பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இவர் மு. வரதராசன், பாரதிதாசன், பாரதியார் போன்றவர்களின் நூல்களை விரும்பி வாசிப்பார். சங்க இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த ஈடுபாடு அடிப்படையில்தான், ஆறாம் படிவம் மாணவர்களுக்கு இலக்கிய வகுப்புகள் நடத்தி இலக்கியம் கற்பித்தார்.

இலக்கிய செயல்பாடு

கம்பார் கனிமொழி நாடு தழுவிய நிலையில் இலக்கிய வகுப்புகளை நடத்திக் கொண்டு வருகின்றார். திருக்குறள், யாப்பு போன்றவற்றை இலக்கிய வகுப்புகளில் இவர் கற்பிக்கின்றார். இவர் இலக்கண இலக்கிய பயிற்சிகளையும் இலக்கிய வகுப்புகளில் வழங்குகின்றார். எழுத்துப் படிவங்களில் (புத்தக வெளியீடு) அதிக ஈடுபட்டுள்ளார்.

இலக்கிய இடம்

நாடளாவிய நிலையில் பலருக்கு இலக்கணம், மரபிலக்கிய பயிற்சிகளைத் தமது வகுப்புகளின் மூலம் வழங்கி வருவது இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகும்.

விருதுகள், பரிசுகள்

  • இலக்கியச் செல்வர் – திராவிடக் கழகம் (1992)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – உப்சி பல்கலைக்கழகம் (2017)

நூல்கள்

  • அன்புக் கடிதங்கள் (1994)
  • இனிய வாழ்வுக்கு மு.வ அறிவுரை (2008)
  • இனிய வாழ்க்கை (2000)
  • தேன்தமிழ்க் கனிகள் (2019)
  • பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு ஓராய்வு (2019)
  • குடும்ப விளக்கு நாடகம் (2010)
  • கம்பார் கனிகள்
  • இளைஞர் எழுச்சி இசைப் பாடல்
  • கல்விக் கனிகள்

வாழ்க்கை வரலாறுகள், ஆவணப்படங்கள்

தமிழ்ப்பெருந்தகையோர் கவிஞர் கம்பார் கனிமொழி குப்புசாமி (வாழ்வும் படைப்பும்) – உசாராணி சாமிநாதன், மனோன்மணி தேவி அண்ணாமலை (2016)

உசாத்துணை

உசாராணி, சா & மனோன்மணி தேவி, அ. (2016). தமிழ்ப்பெருந்தகையோர் கவிஞர் கம்பார் கனிமொழி குப்புசாமி (வாழ்வும் படைப்பும்), சென்னை: கலைஞன் பதிப்பகம்.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.