கன்னித் தீவு
கன்னித் தீவு: (1960) தினத்தந்தி நாளிதழில் வெளியாகும் படக்கதை. இந்தத் தொடர் உலகில் நெடுநாட்களாக வெளிவரும் படக்கதை எனப்படுகிறது. 1960ல் தொடங்கிய இந்த தொடர் இன்னும் வெளிவருகிறது.
வெளியீடு
தினத்தந்தி நாளிதழ் 1960 வடிவ மாற்றம் அடைந்தபோது கன்னித்தீவு தொடங்கப்பட்டது. கன்னித்தீவு சித்திரக்கதை 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் தினத்தந்தியில் வெளிவரத் தொடங்கியது. இந்தச் சித்திரக்கதையை கனு என்கிற கணேசன் என்பவர் முதன்முதலாக வரைந்தார். 1958 இல் வெளியான எம்.ஜி.ஆர் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படத்தில் ஒரு தீவு இடம்பெற்றிருந்தது. அதற்கு கன்னிதீவு என பெயரிட்டிருந்தனர். அப்பெயரையே சித்திரக் கதைக்கு வைக்க தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனார் கூறியுள்ளார்.
ஓவியர் கணேசனுக்கு உடல்நலவுக்குறைவு ஏற்பட்ட போது ஓவியர் தங்கம் கன்னித் தீவு சித்திரக் கதையை தொடர்ந்தார். நான்கு மாதம் கழித்து சித்திரக்கதையை தொடர்ந்தார் கணேசன். பின்னர் பாலன் இத்தொடரை வரைந்தார்.
கன்னித் தீவின் மூலக்கதை அரபுகதையான ஆயிரத்தொரு இரவுகள் சிந்துபாத் கதையை தொடர்புடையது.
மூசா என்ற மந்திரவாதி உலகில் சிறந்த அழகிகளை கடத்தி ஒரு தீவில் சிறைவைக்கிறார். அந்த தீவு கன்னிதீவு என அழைக்கப்படுகிறது. லைலா என்ற இளவரசியை வழமையான பாணியில் அணுகும் போது ஏற்படுகின்ற இடஞ்சலால் மந்திரவாதி லைலாவை சிறியதாக மாற்றி விடுகிறார்.
அந்த அரசின் தளபதியாகிய சிந்துபாத் லைலாவின் உருவத்தை பெரியதாக்கும் வேலையைப் பெறுகிறார். அதற்காக மந்திரவாதியை தேடி சிந்துபாத் பயணப்படுகிறார்.
15 செப்டம்பர் 2013 ஆம் நாள் கன்னித் தீவின் 18921 இடுகை முழு வண்ண நிறத்தில் வெளியானது.