ஒட்ட நாடகம்

From Tamil Wiki
Revision as of 22:56, 3 March 2022 by Navingssv (talk | contribs) (ஒட்ட நாடகம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஒட்ட நாடகம்

ஒட்ட நாடகம் ஒட்டர் என்னும் சாதியினரால் நிகழ்த்தப்படுகிறது. இந்நாடகத்தில் மரபு வழியான ஒரு கதை நடித்துக் காட்டப்படும். இக்கலை ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது.

நடைபெறும் முறை

ஒட்டக்கூத்து சேலம், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. மாரியம்மன் கோவில் விழாக்களில் தெருக்கூத்தாக அரவாண் களப்பலி நாடகம், அரிச்சந்திர நாடகம், மாடுபிடி சண்டை நாடகம் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன. அதனுடன் சேர்ந்து ஒட்ட நாடகமும் நிகழ்கிறது.

கி.பி. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டு முகலாய அரசர்களின் ஆட்சியும், அதனால் சிதைந்த சமூகப் பிரச்சனைகளுமே ஒட்ட நாடகப் பின்னணிக் கதையாக உள்ளது. ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் இசைப் பாட்டாக நிகழ்கிறது. இந்த நாடகத்தில் உரையாடல் பகுதி குறைவாகவே இடம்பெறும். எனவே இதனை இசை நாடகம் என்றும் கூறலாம். விருத்தம், தரு, தாலாட்டு, ஒப்பாரி, குறம் போன்ற பாடல் வகைகள் பெருமளவு இடம் பெறுகின்றன.

இந்நாடகக் கலைஞர்கள் சங்கீதத்தை முறையாகப் படித்திருக்கின்றனர். பலர் சேர்ந்து குழுவாகப் பாடுவது இந்நாடகத்தின் தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களே பாடல்களைப் பாடி நடிப்பர்.

முதலில் இக்கதை கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்தது. பின்னாளில் இது ‘சித்திரவல்லி நாடகம்’ என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது. இது நகர்ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் கூத்தாகவும் நகர்புறங்களில் நாடகமாகவும் நடிக்கப்படுகிறது. கிராமங்களில் முழுக்கதையும் நிகழ்த்தப்படும். நகரங்களில் நாடகத்தின் சில பகுதிகளே நடிக்கப்படுகின்றன. இக்கலையின் இடை நிகழ்ச்சியாக பாலியல் நகைச்சுவை உரையாடலும் இடம்பெறும்.

அச்சு பிரசுரம்

இந்த நாடகம் ‘நூதன பெரிய ஒட்ட நாட்டார் நாடக அலங்காரம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நிகழ்த்தும் சாதிகள்

இக்கலையை ஒட்டர் என்னும் சாதியினர் நிகழ்த்துகின்றனர். ஒட்டர் சாதியினரைப் ‘போயர்’ எனவும் அழைப்பர். இவர்கள் ஒரிசாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவர்கள் என்ற கருத்து உள்ளது. இச்சாதியினர் கல் உடைத்தல், கிணறு வெட்டுதல் போன்ற கடினமான உடல் வேலைகளைச் செய்பவர்கள்.

நிகழும் ஊர்கள்

இக்கலை சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில் விழாக்களில் நடைபெறுகிறது.

நடைபெறும் மாதம்

மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் பங்குனி, சித்திரை மாதத்தில் நடைபெறுவதால் இக்கலையும் இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

காணொளி