standardised

ஒட்டக்கூத்தர்

From Tamil Wiki
Revision as of 16:16, 20 April 2022 by Tamaraikannan (talk | contribs)
ஒட்டக்கூத்தர்

ஒட்டக்கூத்தர் பொ.யு. 11-12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர்.

பிறப்பு

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள மலரியில் (இன்றைய திருவெறும்பூர்) பிறந்தார். செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரபைச் சேர்ந்தவர். கூத்தர் முதலியார் இவரது இயற்பெயர். ஒட்டம் (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்றழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர். கம்பரின் பிறந்த நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ளதால் கம்பர் இவரது காலத்துக்கு முந்தையவர் என்று கருதப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் இவரைப் பேணியவர். பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாளின் அருளைப் பெற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி கோவிலில் உள்ள ஒட்டக்கூத்தர் சிலை

அரசவைப் புலவர்

விக்கிரமச் சோழனின் (பொ.யு. 1120 - 1136) அவையில் அரசவைப் புலவராக இருந்தார். விக்கிரமனின் மகன் இரண்டாம் குலோத்துங்கனின் (பொ.யு. 1136 - 1150), அவையில் தலைமை அவைப்புலவராக இருந்தார். அவரின் மகன் இரண்டாம் ராஜராஜனின் (பொ.யு. 1150 - 1163) காலம் வரை தலைமை அவைப்புலவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல். ஒட்டக்கூத்தர் எழுதிய கலிங்கப் பரணி விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னனான வீமனை வென்றதைப் பாடுகிறது. இந்நூல் கிடைக்கவில்லை.

கலிங்கப் பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக் கோவை, எதிர்நூல் போன்ற நூல்கள் மறைந்த நூல்களாகக் கருதப்படுகின்றன. கண்டன் கோவை, கண்டன் அலங்காரம், தில்லை உலா, ஈட்டி எழுபது, எழுப்பெழுபது என்னும் நூல்களும் ஒட்டக்கூத்தர் பாடினார் என்று கூறுகின்றனர். ஆனால் இந் நூல்கள் இவரால் இயற்றப்பட்டன என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

இலக்கிய இடம்

  • 'பிள்ளைத் தமிழ்' இலக்கிய வகைக்கு இலக்கிய வடிவத்தினை முதலில் தந்தவர்
  • ஒட்டக்கூத்தர் பாடியுள்ள நூல்களில் அரிய வரலாற்றுச் செய்திகள் பலவும் பொதிந்திருப்பதாகவும் வரலாற்றுணர்வு வாய்ந்த புலவராகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணப்படுவதாகவும் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் 'பிற்காலச் சோழர் சரித்திரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பட்டங்கள்

  • கவிச்சக்கரவர்த்தி
  • கவிராட்சதன்
  • சக்கரவர்த்தி
  • காளக்கவி
  • கௌடப் புலவர்
  • சருவஞ்ஞன கவி
  • ஊழுக்குக் கூத்தன்
தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் அமைந்துள்ள ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி

மறைவு

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் ஒட்டக்கூத்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

நூல் பட்டியல்

  • காங்கேயன் நாலாயிரக் கோவை
  • மூவர் உலா
  • குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
  • ஈட்டியெழுபது
  • அரும்பைத் தொள்ளாயிரம்
  • தக்கயாகப் பரணி
  • எழுப்பெழுபது
  • நாலாயிரக் கோவை
  • சி. சுப்ரமணியன் ஒட்டக்கூத்தர் பற்றி எழுதிய புத்தகம்
    கம்பராமாயணத்தில் உத்திரகாண்டம் பகுதி
  • கலிங்கப் பரணி
  • எதிர் நூல்
  • கண்டன் கோவை
  • தில்லையுலா
  • செங்குந்தர் பிரபந்தத் திரட்டு

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்

  • 'ஒட்டக்கூத்தரின் ஈட்டியெழுப்பது' புலவர் பெ.வேலு - 1981
  • புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம் - 1987
  • நான் கண்ட ஒட்டக்கூத்தர், ஸ்ரீநிவாச ரங்கசுவாமி - 2004.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.