ஏழாம் உலகம் (நாவல்)

From Tamil Wiki

‘ஏழாம் உலகம்’ (2007) எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல். பிச்சை எடுப்பதற்காக வாங்க, விற்கப்படும் உடற்குறைபாடுடைய விளும்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை சித்தரித்தது. இந்து மதத்தில் ‘ஏழு கீழ் லோகங்கள்’ என்ற அமைப்பில் ஏழாம் உலகமான பாதாளத்தை இந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு உவமையாக்கி தலைப்பாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் திருவண்ணாமலையில் காவி உடுத்தி வாழ்ந்த நாட்களில் கண்ட நேரடி வாழ்க்கை இந்த நாவலுக்குப் பின்புலம். இந்த நாவலின் அப்பட்டமான யதார்த்தச்சித்தரிப்பும் பல்குரல்தன்மையும் விமர்சகர்களால் பேசப்பட்டது. கொடிய சூழலிலும் கதைமாந்தரிலிருந்து தொடர்ந்து மனிதத்துவம் (humanity) வெளிப்படும் இடங்கள் நாவலின் உக்கிரத்தை மீறி மானுட உள்ளத்தின் வெளிச்சத்தை காட்டுபவை என்று வாசகர்கள் கருதுகிறார்கள். 2009-ல் இந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ என்ற திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியானது.

பதிப்பு

ஆசிரியர்

கதைச்சுருக்கம்

போத்திவேலு பண்டாரம் பிச்சையெடுப்பதற்காக உடற்குறையுடைய மனிதர்களை [இவர்கள் “உருப்படிகள்” என்று நாவலுக்குள் அழைக்கப்படுகிறார்கள்] வாங்கி, விற்கும் தொழிலை செய்து வருகிறார். மனைவியும், மூன்று மகள்களுடனும் வசிக்கிறார். முருக பக்தனாகவும், குடி, பெண்கள், கேளிக்கை என்றும் ஒரே சமயம் இருக்கிறார்.

இவருடைய ‘உருப்படிக’ளில் ஒருத்தியான முத்தம்மைக்கு குழந்தை பிறக்கிறது. ஒரு கண்ணும், கையும், காலும் மட்டுமே கொண்டுள்ள, சப்பைத்தலையுடைய முத்தம்மையை பண்டாரம் அவளைப்போலவே உடற்குறையுடைய மனிதர்களுடன் இணையவிட்டு குழந்தைகளைப் பெறச் செய்கிறார். பிறக்கும் குழந்தைகளும் பிச்சைத்தொழிலுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இது அவளுக்கு ***-ஆவது பிரசவம். முதல் பிரசவத்தில் ஒற்றை விரலுடன் பிறந்த குழந்தையைத் தவிர வேறெதையும் தனக்கு ஞாபகம் இல்லை, எல்லாம் விற்றுப்போய்விட்டன என்று முத்தம்மை சொல்கிறாள்.

குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் பண்டாரம் முத்தம்மையையும் மற்ற சில ‘உருப்படிக’ளையும் தை பூசத்துக்கு பழனிக்குக் கொண்டுபோய் பிச்சையெடுக்க வைக்கிறார். பண்டாரம் தன்னுடைய முதல் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியதால் பணம் வேண்டிய சூழலில் இருக்கிறார். ஆகவே தொரப்பு என்ற கண்ணில்லாத கூனரை - இவர் முத்தம்மையின் குழந்தையின் தந்தை - உடலுறுப்பு விளைச்சலுக்காக விற்றுவிடுகிறார். வேறு சிலரையும் விற்கிறார். அப்போது மாங்காடி சாமி என்ற கைகால் முடமான, பேசாத, புன்னகைக்கவும் பாடவும் மட்டுமே செய்யக்கூடிய சித்தர் போன்றவரையும் விற்க நேர்கிறது.

மாங்காடி சாமி விற்றுப்போனதும் பண்டாரத்துக்கு இறங்குமுகம் தொடங்குகிறது. திரும்ப ஊருக்கு வந்ததும் அவர் மூத்த மகள் சுப்பம்மைக்கு ஒரு வரன் வருகிறது. திருமணம் நிச்சயமானதும் வரனின் வேலை நிரந்தரமானதல்ல என்று தெரிய வருகிறது. மகளின் எதிர்காலம் குறித்து பண்டாரம் அலைக்கழிகிறார். இதற்கிடையே அவருடைய இரண்டாம் மகள் வடிவம்மை ஓடிப்போகிறாள். அவள் மிகக் கீழ்த்தனமான வாழ்க்கைக்குள் விழுந்துவிட்டதை ஒரு கட்டத்தில் அவர் அறிந்துகொள்கிறார். எப்படியோ மூத்த மகளின் திருமணத்தை முடித்து வைக்கிறார். இதை அடுத்து அவருக்கு இருந்த பெண் தொடர்புகளினால் மோசமான நோய் தாக்கியிருப்பது தெரியவருகிறது.

மாங்காடி சாமி திரும்பவும் அவரிடமே வந்து சேர்கிறார். முத்தம்மையை இன்னொரு பிரசவத்துக்கு ஆளாக்கினால் இழந்த லாபத்தை ஈட்டிவிடலாம் என்று நினைக்கிறார். அவளுடன் இணைய விட உடல் சிதைந்த பேச்சு வராத முரடனான இளைஞனை தேர்ந்தெடுக்கிறார். இரவில் பாலத்துக்கடியில் முத்தம்மை மீது அவனைக் கொண்டு போடும்போது அவனுடைய ஒற்றை விரலைக்கொண்டு அவன் தன்னுடைய முதல் மகன் என்று கண்டடைகிறாள். அவளுடைய கதறல்களுக்கு யாரும் செவிமடுக்காமல் அந்தச் சம்பவம் நேர்கிறது.

நாவலின் இந்த மையக்கதைத்திரிகளுடன் பிச்சை எடுக்க வைக்கப்படும் மனிதர்களின் கதைகளும் ஊடாடுகின்றன. பெரும் அழகியம் ஈடுபாடுடன் உலகத்தை கவனிக்கும் குஷ்டரோகியான ராமப்பன், தனக்கும் முத்தம்மைக்கும் பிறந்த குழந்தையை ஒரு நொடித் தொட வேண்டும் என்று காற்றில் விரல் தவிக்கும் குருடரான தொரப்பு, ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டி வருவதற்க்காக கழுத்தில் தாலி கட்டிய மாதவப்பெருமாளை அதன் பிறகு தன் கணவனாகவே வரிக்கும் எருக்கு, ஓட்டலில் பண்டங்களெல்லாம் கலக்காமல் தனித்தனியாக வைத்து 'ஸ்பெஷல் மீல்ஸ்; விருந்து சாப்பிட விரும்பும் குய்யன், பத்திரிக்கை வாசிக்கும் அகமதுகுட்டி, என்று தனித்தன்மை கொண்ட பல கதாபாத்திரங்களின் சித்திரம் அளிக்கப்படுகிறது. தான் யாருக்கும் எந்தத்தவறும் செய்தவரல்ல என்று உறுதியுடன் நம்பும் ஏக்கியம்மை, தான் வாங்கி-விற்கும் மனிதர்களை 'தோழர்' என்று அழைக்கும் கம்யூனிஸ்ட் கொச்சன், நாயகர், போத்தி என்று மேலும் பல வண்ணமயனான கதாபாத்திரங்கள் நாவலில் இடம்பெருகின்றனர்.

கதைமாந்தர்

போத்திவேலு பண்டாரம் - உடற்குறையுடைய மனிதர்களை பிச்சையெடுக்க வாங்கி, விற்பவர்.

ஏக்கியம்மை - அவர் மனைவி

சுப்பம்மை - அவர் மூத்த மகள்

வடிவம்மை - அவர் இரண்டாம் மகள்

மீனாட்சி - அவர் கடைசி மகள்

போத்தி - அங்கே கோயில் போத்தி. பண்டாரத்தின் நண்பர்

முத்தம்மை - *** குழந்தைகளின் தாய். பலருடன் இணைய விட்டு விற்பதற்க்காக குழந்தைகளை பெற்றெடுக்க வைக்கப்படுபவள். ஒரு கண், கை, கால் முடமானவள், பெரிய உடல் கொண்டவள்.

மாங்காடி சாமி

ராமப்பன்

குய்யன்

எருக்கு

தொரப்பன்

குருவி

ரஜினிகாந்த்

மாதவபெருமாள்

வண்டிமலை

அகமதுகுட்டி

கொச்சன்

நாயக்கர்

ராமானுஜன்

பின்புலம், உருவாக்கம்

இலக்கிய இடம், மதிப்பீடு

விவாதங்கள்

திரைப்படம்

உசாத்துணை