எஸ். செந்தில்குமார்

From Tamil Wiki
Revision as of 10:46, 18 January 2022 by Logamadevi (talk | contribs) (முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வசிக்கும் எஸ். செந்தில்குமார் (பிறப்பு: நவம்பர் 20,1973), 1999 முதல் தமிழ் இலக்கிய சூழலில் இயங்கி வருபவர். தேனி மாவட்டத்தின் மரபான மக்கள், அதன் உயிர்த்தன்மை, களம் என ஆழ அகலமாக வேரூன்றி நிற்பவர்.காமம் வஞ்சம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை, அடித்தள வாழ்க்கைப் பின்னணியில் நேரடியாக எழுதுபவர்களின் வரிசையில் முக்கியமானவர். பேசும் புதியசக்தி மற்றும் பொம்மி மாத இதழின் பொறுப்பாசிரிராக தற்போது திருவாரூரில் பணிபுரிகிறார். 2009ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான ‘சுந்தரராமசாமி விருது’ பெற்றவர்.

பிறப்பு,கல்வி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கா.சுப்பிரமணியன், சு.முருகேஸ்வரி ஆகியோருக்கு மகனாக 1973 நவம்பர் 20 ஆம் நாள் பிறந்தார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஐ.கா.நி. ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை போடிநாயக்கனூரிலுள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் முடித்தார்.


தனிவாழ்க்கை

மலர்விழியை நவமபர் 16, 2005’ல் மணம் புரிந்தார். ஒரே மகள் மஞ்சுளா காதம்பரிக்கு 15 வயதாகிறது.

இலக்கிய வாழ்க்கை

முதல் கவிதை கனவு இதழில் 1996 ல் வெளியானது. முதல் சிறுகதை ’காணாமல் போனவர்கள்’ கணையாழியில் வெளியானது.

எஸ்.செந்தில்குமாரின் கதைகள் நுண்ணிய தகவல்களை தொடர்ச்சியாக அடுக்கி விரிந்த நிலக்காட்சியை, மானுடமுகங்களை உருவாக்கி ஒரு நிகர்வாழ்க்கையை காட்டுகின்றன. இவரது கதைகளில் காமமும் வஞ்சமும் கொம்புகளும் நச்சுப்பற்களும் கொண்டு மூர்க்கமாக மோதிக்கொள்கின்றன.சகமனிதனின் மீதான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகளின் தொகுப்பான மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி வெகுவாக கவனம் பெற்றது. இந்தக் கதைகள் நிலம் சார்ந்து தேனி போடி பகுதிகளில் நிகழ்ந்தாலும் வேறுவேறு வகையான வாழ்க்கைகளை உணர்வுகளை கையாள்வது இந்த நூலின் முக்கியமான பலம். இக்கதைகளின் கதாபாத்திரங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தையும் காலத்தையும் கூடவே அதன் தன்மைகளையும் பிரதிபலிக்கின்றன. அடித்தள மக்களின் வாழ்க்கைப்புலத்தை சொல்லுகையில் அவர்களின் இயல்பான விலங்கியல்புகளில், ஆழத்து உணர்வுகளில் அதற்கான காரணங்களைத் தேடும் கதைகள் இவருடையது. இதுவரை ஆவணப்படுத்தப் படாத வரலாறை களமாக கொண்ட, வெறும் ஆவணங்களாக இல்லாமல் கலைத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும் இவரது கழுதைப்பாதை சமீப காலங்களில் வெளிவந்த குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று. தனது இலக்கிய செயல்பாட்டிற்கு உத்வேகமாக எழுத்தாளர் அசோகமித்திரனை குறிப்பிடுகிறார்.

நூல்பட்டியல் (இதுவரை)

  • ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்

& முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்

  • நீங்கள் நான் மற்றும் மரணம் 2010 தோழமை பதிப்பகம்
  • காலகண்டம் 2013 உயிர்மை பதிப்பகம்
  • மருக்கை 2016 உயிர்மை பதிப்பகம்
  • கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்

சிறுகதை

  • மைக்கேல் சகோதரர்களின் இரட்டை பேனா
  • காணாமல் போனவர்கள்
  • சாபத்தின் நிழல்
  • லீலா மற்றும் லீலாவின் கதைகள்

சிறுகதைத் தொகுப்பு

  • வெயில் உலர்த்திய வீடு 2006 உயிர்மை பதிப்பகம்
  • சித்திரப்புலி 2008 உயிர்மை பதிப்பகம்
  • மஞ்சள் நிற பைத்தியங்கள் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • விலகிச்செல்லும் பருவம் இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி இரண்டாம் பதிப்பு ஜீரோ டிகிரி பதிப்பகம் 2021
  • அலெக்ஸாண்டர் என்கிற கிளி 2015 உயிர்மை பதிப்பகம்
  • அனார்கலியின் காதலர்கள் 2016 உயிர்மை பதிப்பகம்
  • சிவப்புக்கூடை திருடர்கள் 2019 உயிர்மை பதிப்பகம்

கட்டுரைத்தொகுப்பு

  • சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்) 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்

கவிதைத் தொகுப்பு

  • குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள்
  • சமீபத்திய காதலி
  • முன்சென்ற காலத்தின் சுவை (கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியிடு)

விருதுகள்

  • 2009ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான ‘சுந்தரராமசாமி விருது’
  • 2013ஆம் ஆண்டிற்காக SRV பள்ளி நிறுவனத்திலிருந்து வழங்கிய படைப்பூக்கத்திற்கான தமிழ் விருது.
  • 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா அறக்கட்டளையிலிருந்து வழங்கிய சுஜாதா சிறுகதை விருது.
  • 2018ஆம் ஆண்டிற்கான கோவை வாசகர் வட்டமும் விஜயா பதிப்பகமும் இணைந்து வழங்கிய கவிஞர் மீரா விருது.
  • 2018ஆம் ஆண்டிற்கான Sparrow இலக்கிய விருது.

இணைப்புகள்