எல். சாமிக்கண்ணு பிள்ளை

From Tamil Wiki

எல். சாமிக்கண்ணு பிள்ளை (L. Samikannu Pillai, பிப்ரவரி 11, 1865- செப்டம்பர் 10, 1925) தமிழறிஞர், பன்மொழி அறிஞர், தமிழ் வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், உரைநடையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், வானியலாளர், அரசுச் செயலாளர் மற்றும் அரசியல்வாதி. சென்னை மாகாண சட்டமன்ற அவைத்தலைவர், சென்னை மாகாண தலைமைச் செயலாளர் பதவியில் இருந்தார்.

தனிவாழ்க்கை

கொங்குநாட்டில் சோமனூர் தாலுகாவைச் சார்ந்த ஞானப்பிரகாசம் லூயிஸ் பிள்ளை மற்றும் சிலுவை முத்தம்மா தம்பதியினருக்கு மகனாக பிப்ரவரி 4, 1865ம் ஆண்டு சென்னையில் சாமிக்கண்ணு பிறந்தார். பிரெஞ்சு மொழி அறிந்த லூயிஸ் பிள்ளை வருவாய்த் துறையில் குமாஸ்தாவாக இருந்தார். கத்தோலிக்கரான லூயிஸ் தன் மகன் சாமிக்கண்ணுவிற்கு மறுமலர்ச்சி கிறிஸ்தவரின் சர்ச்சில் ஞானஸ்நானம் கொடுத்தது பிடிக்காததால் அவரின் மனைவி தன் அண்ணன் ராயப்பனின் உதவியுடன் கொங்கு நாட்டுக்கு குடும்பத்தை அழைத்துவந்துவிட்டார்.

கல்வி

சாமிக்கண்ணு மாமாவின் தயவில் ஊட்டியில் படித்தார். லூயிஸ் செலவாளி என்பதால் கடன்தொல்லை இருந்தது. சாமிக்கண்ணுவின் படிப்புப் பொறுப்பை நாகப்பட்டினம் சேசு சபையினர் ஏற்றுக்கொண்டனர். சாமிக்கண்ணு நாகப்பட்டினம் சூசையப்பர் பள்ளியிலும், கல்லூரியிலும் மெட்ரிக்குலேசன். ஏஃப்.ஏ., பி.ஏ. எனப் படிப்பை முடித்தார் (1881). அப்போது ஆங்கிலம், பிரெஞ்சு இத்தாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். எம்.ஏ.யில் ஆங்கிலம், லத்தீன் மொழிகளைப் படித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழி சட்டப்படிப்பும் முடித்துவிட்டு, லண்டன் கல்விநிலையம் நடத்திய எல்.எல்.பி. தேர்விலும் வெற்றி பெற்றார்.

பணி

1883ல் சூசையப்பர் (St. Joseph's College) கல்லூரி நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. இக்கல்லூரியில் முதல் ஆங்கில விரிவுரையாளராகச் சேர்ந்த சாமிக்கண்ணு அங்கு 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1888ல் இரத்தின சிரோன்மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஐந்தாம் ஆண்டில் ஒரு பிரசவத்தில் மனைவி இறந்தார் (1892). அடுத்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இரண்டு மனைவிகளுக்கும் 16 குழந்தைகள்.

மொழிப்புலமை

சாமிக்கண்ணு 16க்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுள்ளார். ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் மட்டுமல்லாது சமஸ்கிருதத்திலும் பயிற்சி உண்டு. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி மொழிகளைப் பேசும் அளவுக்குத் தெரிந்திருந்தார். கிரீக், ஹீப்ரு, மொழிப் புத்தகங்களை படித்துப் புரியும் அளவுக்குத் திறன் உண்டு.

ஆட்சிப்பணி மற்றூம் அரசியல்

1890ல் சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதித் தோற்றார். 1891ல் இவரது மதிப்பெண், பொது அறிவுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இ கலெக்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சென்னை அரசுச் செயலகத்தில் பதிவாளர் (1893) துறை உதவிச் செயலர் (1895), இதே துறை செயலர் (1906) எனப் பல பதவிகளில் பணியாற்றிவிட்டு 1917-ல் தன் 52 வயதில் நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஆனார். இங்கு இவர் பணி செய்த காலத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தொடர்ந்து நெல்லூரிலும் இந்து முஸ்லிம் கலவரம் நடந்தது. இக்காலங்களில் இவர் நடுநிலையுடன் செயல்பட்டிருக்கிறார். இவர் கர்நூலில் துணை கலெக்டர் ஆக இருந்தபோது நடந்த மதக் கலவரத்தை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தாமல், நேரடியாகவே இரண்டு பக்கத்தாரையும் அழைத்துப் பேசினார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. இங்கு இரண்டு வருடங்கள் பணி. இவர் வருவாய்த்துறையில் பணியாற்றியபோது அரசு சார்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார் (1903). அப்போது வெர் ரோமில் போப்பைச் சந்தித்தபோது லத்தீன், ஹிப்ரூ மொழிகளில் பேசினார் என்ற செய்தி அன்று பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறது.

1920இல் சென்னை ராஜதானி அரசுச் செயலர். 1921ல் சட்டசபைச் செயலர் எனப் பதவி உயர்வு பெற்றார். சிபி. ராமசாமி அய்யரின் பாராட்டைப் பெற்றார். சென்னை சட்டசபை மேம்பாட்டுச் செயல்படுத்தலுக்காக 1922இல் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் பெற்ற அனுபவத்தைச் சென்னைச் சட்டசபையில் செயல்படுத்தினார். முக்கியமாகத் தமிழ்நாடு சட்டசபையில் இன்று உள்ள பெரிய நூலகம் உருவாகக் காரணமாக இருந்தவர் இவர். 1920-25 காலகட்டத்தில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார். 1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று பெப்ரவரி 1925 – செடம்பர் 10, 1925 அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் அவரே. அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார். பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார். சாமிக்கண்ணு சட்டசபையில் செய்த மாற்றங்களை அப்போது சுயராஜ்யா பத்திரிகை விமர்சித்திருக்கிறது (1924 ஏப்ரல் 1). இவ்விதழில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி இவரை அரசாங்க ஆளாகவே விமர்சித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சாமிக்கண்ணு மாணவப் பருவத்தில் லத்தீனில் பாடல்கள் எழுதியிருக்கிறார். திருச்சி கல்லூரியில் வேலையை விட்டதும் சென்னை சட்டசபை மொழிபெயர்ப்பாளராக ஆனார். அந்த வேலையை விட்டு சென்னை ராஜதானிக் கல்லாரியில் லத்தீன் பேராசிரியர் ஆனார்.

சட்டசபைப் பேச்சுகளையும் பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுகளையும் குறிப்பெடுக்க ஆங்கிலச் சுருக்கெழுத்து அவசியம் என்று உணர்ந்து மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் எளிதாகப் படிப்பதற்கென்றே சுருக்கெழுத்து நூலை வெளியிட்டார். (Phonetic Shorthand) இது ஐந்து தொகுதிகளாக வந்தது (1908). பிட்மனின் நூலைக் கற்பதில் உள்ள சிரமம் இதில் இல்லை.

இவர் எழுதியவையாக 17 ஆங்கில நூல்களும் ஆறுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களும் திருச்சி புனித ஜோசப் கல்லூரி இதழில் எழுதிய பல கட்டுரைகளும் உள்ளன. இவற்றில் இந்தியப் பஞ்சாங்கம் குறித்து Indian Chronology, Solar Lunar and Planetary (1911), Indian Ephemeris (1922) போன்ற நூல்களே இவருக்குப் பெருமையைத் தேடித்தந்தவை. 1890ல் சாமிக்கண்ணுவின் காலக்கணக்கு ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதிக்கப்பட்ட செய்தியைத் திருச்சி புனித ஜோசப் கல்லூரி மலர் வெளியிட்டிருக்கிறது.

மொழிபெயர்ப்பு

இவர் சட்டசபையில் பிரெஞ்சு, லத்தீன் மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்தபோதே அவரது எழுத்துப்பணி ஆரம்பமாகிவிட்டது. இக்காலத்தில் தமிழ்நாடு பேராயரின் வேண்டுகோளுக்காக அர்ச் பெர்னாடு என்பவர் லத்தீன் மொழியில் எழுதிய 'சிலுவையில் ஏசுநாதர்’ என்ற கவிதை நூலை ஆங்கிலத்தில் கவிதை நடையிலே மொழிபெயர்த்தார். அபு டுபே எழுதிய The Hindu Manners and Customs என்ற பிரெஞ்சு நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது சாமிக்கண்ணு உதவி இருக்கிறார்.

இதன்பிறகு இவரது எழுத்துப் பணி தீவிரமாயிருக்கிறது. இவர் கத்தோலிக்க மதப் பணியாளர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரெஞ்சு, இத்தாலி மொழிகளிலிருந்து மதம் தொடர்பான நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். The Secret of Memory (1909) என்ற இத்தாலி நூலின் பெயர்ப்பு. Catholic Action என்ற பிரெஞ்சு நூலின் பெயர்ப்பு (1910) எல்லாம் இப்படி வந்தவைதாம்.

வானவியல் ஆய்வாளர்

நண்பர் அம்புரோஸ் என்பவரின் தூண்டுதலால் சாமிக்கண்ணு 1875-1900 காலகட்டத்தில் வானநூல் படிப்பில் தீவிரமாக இருந்தார். இவரது இதற்கு ஒரு காரணம். Indian Review இதழில் (1900) இவர் திதிகள், நட்சத்திரங்கள் பற்றி எழுதிய கட்டுரை இவரை ஆய்வாளராக அறிமுகப்படுத்தியது.

இந்தியப் பஞ்சாங்கம்

1910இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.சுப்பிரமணிய பிள்ளை நினைவுச் சொற்பொழிவிற்காக வேதாந்தச் சோதிடப் பஞ்சாங்கம் என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு, சென்னைத் தமிழ் அறிஞர்களிடம் இவரை முதலில் அறிமுகப்படுத்தியது. சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியப் பஞ்சாங்கத்தை விரிவாக ஆராய்ந்து வெளியிட இவரை வேண்டிக் கொண்டது. இவர் 1919-22ஆம் ஆண்டுகளில் உழைத்த உழைப்பின் பலன்தான்3000 பக்கங்களுக்கு மேல் உள்ள Indian Ephemeris என்ற நூல்.

இந்த நூலில் 1300 ஆண்டுகளுக்குரிய பஞ்சாங்கம் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழக்கில் உள்ள விக்கிரம, கலி போன்ற 60 வருடங்கள் பற்றிய காலக்கணிப்புக் குறிப்பு இதில் உள்ளது. இக்காலத்து வரலாற்றாசிரியர்களுக்கும் கல்வெட்டுக் களைப் பதிப்பித்தவர்களுக்கும் இது வரப்பிரசாதமாக இருந்தது.

தமிழகத்தின் காலக் கணிதத்தை அறிமுகப்படுத்திய சுவல், தீட்சிதர் போன்றோரைவிட இவர் ஒரு படி மேலானவர் என்று பெருவிதாங்கூர் தொல்பொருள் துறையிலிருந்த கோபிநாதராவ் பிற்காலத்தில் கூறியுள்ளார். சாமிக்கண்ணு பிள்ளை முறையாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தவரல்லர். இந்தியப் பஞ்சாங்கத்தை ஆராய்ச்சி செய்த போது தமிழக வரலாற்று நூல்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ் இலக்கியங்களையும் படித்தார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் இவருக்கு உதவியிருக்கின்றனர்.

வரலாற்றாய்வாளர்

திருச்சி புனித ஜோசப் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பாக இவர் பேசிய பேச்சு (1914) அந்த ஆண்டு ஓர் இதழில் வெளிவந்தது. பன்னிரு ஆழ்வார்களில் சிலர், இரண்டாம் குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள் போன்றோர்களின் காலங்களை வானிலைக் கோள்களின் அடிப்படையில் கணித்துப் பேசிய இந்தப் பேச்சு அப்போது திருச்சி தமிழ் அபிமானிகளான சிலரிடம் சலசலப்பை உண்டாக்கினாலும் இவருக்கு ஆதரவாகவும் சிலர் இருந்தனர். இவர் இலக்கியங்களில் வரும் கோள்களின் போக்கு பற்றிய செய்திகளின் அடிப்படையில் காலங்களைக் கணிக்க ஆரம்பித்தபோதுதான் அச்சில் வந்த கல்வெட்டுகளைப் படிக்க ஆரம்பித்தார். பாண்டியர் கல்வெட்டுகளில் வரும் கோள்களின் போக்கு பற்றிய செய்திகளின் அடிப்படையில் ஜடாவர்மன் ஸ்ரீவல்லபன் 1291இல் அரசப் பதவி ஏற்றான். பாண்டியன் குலசேகரன் 1166 ஜூலை 26-ஆம் தேதி முடிசூடினான் என்னும் முடிவுகளையும் முன்வைத்தார். சாமிக்கண்ணு பிள்ளையைத் தமிழறிஞராக அடையாளப் படுத்தியது அல்லது தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணித்தவர்களில் முக்கியமானவர் என இனம் காட்டியது பரிபாடலின் காலம் பற்றி இவர் கூறிய கருத்துதான். பரிபாடலைப் பற்றிய குறிப்பிற்காகவே இவரது இந்தியப் பஞ்சாங்கம் நூலைத் தமிழறிஞர்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர்.

பரிபாடலின் 11ஆம் பாடலை மட்டும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பதிப்பித்து, இதில் வரும் சோதிடக் குறிப்பை வெளியிட்டபோது, தஞ்சை சமஸ்கிருதப் பண்டிதர் சுப்பிரமணிய சாஸ்திரி பொத்தாம்பொதுவாகத் தமிழர்களுக்குச் சோதிட அறிவு கிடையாது என்று ஒரு பத்திரிகையில் எழுதினார். இதற்காகவே சாமிக்கண்ணு பரிபாடலின் 11ஆம் பாடலைத் தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். இதற்கு அவர் உவேசா பதிப்பித்த (1918) நூலையே ஆதாரமாகக் கொண்டார்.

மதுரையில் வெள்ளம் வந்ததாகப் பரிபாடலில் குறிப்பிடப் படும் இடத்தில் கோள்களின் போக்கு பற்றிய செய்தி வருகிறது. இது 14 வரிகளில் கூறப்படுகிறது.சந்திரகிரணம் தோன்றிய நாள் காலையில் வானத்தில் கார்த்திகை உச்சம் அடையும்போதும் செவ்வாய் மேஷத்திலும் குரு மீனத்திலும் நிற்கத் தனுசிலிருந்து சனி மகரத்திற்குச் செல்லும்போது சுக்கிரன் இடபத்திலும் புதன் மிதுனத்திலும் நிற்கவும் வைகையில் வெள்ளம் வந்தது என்பது பரிபாடல் செய்தி. பரிபாடலின் உரையாசிரியரான பரிமேலழகர் வெறும் ஊகத்திலேயே இந்த வரிகளுக்கு உரை எழுதினார். வாய்ப் பாடுகளால் இக்காலத்தைக் கணிக்கவில்லை என்று விளக்கினார் சாமிக்கண்ணு. மதுரையில் வெள்ளம் பெருக்கெடுத்தது க. 634ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி (பௌர்ணமி) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு என்று துல்லியமாகக் கணித்திருக்கிறார்.

காலம் பற்றிய இந்தக் கணிப்புச் செய்தியின் மொழிபெயர்ப்பு செந்தமிழ் (தொகுதி 22) இதழில் வந்தது. தமிழர்கள் ஜைனரிடமிருந்து வான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டார்கள் என்றும் இந்தியாவின் பிற பகுதிகளைவிடத் தமிழர்களின் கணிதமுறை புராதனமானது என்றும் காரணகாரியங்களுடன் இக்கட்டுரையில் நிரூபித்திருக்கிறார்.

தமிழ் நூல்களின் காலஆராய்ச்சி

தமிழ் இலக்கியங்களின் காலத்தை முன்னே கொண்டுசெல்வதால் மொத்தத் தமிழ்ப் பண்பாட்டிற்கு உலகளாவிய மரியாதை வந்துவிடும், இந்திய மொழிகளின் மத்தியில் தனியான அந்தஸ்து உருவாகும் என்ற இலக்கிய அரசியல் நிலவிய காலத்தில்தான் வையாபுரிப்பிள்ளை தமிழ் நூல்களின் காலத்தை அறிவியல் ரீதியாகக் கணித்துப் பின்னே கொண்டுவந்தார். தமிழ் மரபை மிகப்பழங்காலத்துக்குக் கொண்டுசெல்வது என்பது உணர்வுபூர்வமான விஷயமே என நம்பிய தமிழறிஞர்களில் வையாபுரிப்பிள்ளை முன்னணியில் நின்றவர். இவர் தம் கால ஆராய்ச்சிக்கு வடமொழி வரலாற்றாசிரியரான விண்டர் நீசையும் வானியல் கோள்களின்படி இலக்கியக் காலத்தைக் கணித்த சாமிக்கண்ணு பிள்ளையையும் மேற்கோள் காட்டுகிறார்.

இலக்கிய இடம்

சாமிக்கண்ணு பிள்ளை வாழ்ந்த காலத்தில் தமிழக வாலாற்றறிஞர்களால் அவர் கண்டுகொள்ளப்படவில்லை. முறையாகத் தமிழ் பயிலாத தமிழ்மொழியில் எழுதாத ஆனால் ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்படும் அறிஞர் சாமிக்கண்ணு. பிற துறைகளிலிருந்து தமிழ் ஆராய்ச்சிக்கு வந்தவர். இவர் தமிழக வரலாற்றாசிரியர்களாலும் புறந்தள்ள முடியாதவர்.

படைப்புகள்

  • Panchang and Horoscope.
  • An Indian ephemeris, A. D. 1800 to A. D. 2000. -1922
  • Indian Chronology. 1911.

Solar Lunar and Planetary Phonetic Shorthand 1908

மொழிபெயர்ப்பு

  • சிலுவையில் ஏசுநாதர் - லத்தீனிலிருந்து ஆங்கிலம்
  • The Secret of Memory (1909) இத்தாலியிலிருந்து ஆங்கிலம்
  • Catholic Action பிரெஞ்சிலிருந்து ஆங்கிலம்

விருதுகள்

  • இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி சென்னை அரசாங்கம் ராவ்பகதூர் (1905),
  • திவான் பகதூர் (1909).
  • 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் (Order of the Indian Empire) இடம் பெற்றார்.

இறுதிக்காலம்

தன் அறுபது வயதில் அரசுப்பணியில் இருக்கும் போதே வாதநோயால் பாதிப்படைந்து 1925இல் சென்னை ராயபுரத்தில் காலமானார்.

உசாத்துணை

அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்