எமிலி டிரீ கிளேஷேர்
எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) (திருமதி பௌர்ன், பௌர்ன் சீமாட்டி) (1858- செப்டெம்பர் 18, 1954) இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ஓவியர். கல்வியாளர் ஆல்பர்ட் பௌர்னின் மனைவி.
தனிவாழ்க்கை
ஆல்பர்ட் பௌர்ன் எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) ஐ 1888-ல் மணந்துகொண்டார். அவர்களுக்கு ரே என்னும் மகனும் லோரா என்னும் மகளும் பிறந்தனர். தன் ஆசிரியரான ரே லங்காஸ்டரின் நினைவாக ஆல்பர்ட் பௌர்ன் மகனுக்கு ரே என பெயரிட்டார். ரே இந்திய வனத்துறையில் பயிற்சி எடுத்து பின்னாளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைப் பேராசிரியராக ஆனார். லோரா இந்திய வனத்துறை அதிகாரியான ஸ்டீபன் காக்ஸ் ( Stephen Cox) ஐ மணந்தார்.
பணிகள்
எமிலி புகழ்பெற்ற தாவரவியல் நிபுணர். ஓவியரும்கூட. கொடைக்கானலில் தாவரவியலில் ஆய்வுசெய்த பிலிப் ஃபைசனுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடைய ஓவியங்களை பிலிப் ஃபைசன் தன்னுடைய நீலகிரி மற்றும் பழனி மலைகளின் தாவரங்கள் ( The Flora of the Nilgiri and Pulney Hill-tops) என்னும் நூலில் பயன்படுத்தியிருக்கிறார். பிலிப் பைசனின் மாணவரான மா. கிருஷ்ணன் தன் நினைவுகளில் எமிலி டிரீ கிளேஷேர் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆல்பர்ட் பௌர்ன் மண்புழுக்களைப் பற்றி வண்ணப்படங்களுடன் ஓர் ஆய்வுநூலை வெளியிட்டார். அந்நூலுக்கான ஓவியங்களை எமிலி பௌர்ன் வரைந்தார்.
மறைவு
எமிலி ட்ரீ கிளேஷர் செப்டெம்பர் 18, 1954-ல் மறைந்தார்.
உசாத்துணை
- A Forgotten Biologist of Madras: Alfred Gibbs Bourne
- ஆல்பர்ட் பௌர்ன் ராயல் சொசைட்டி
- ராயல் சொசைட்டி ஆல்பர்ட் பௌர்ன் வாழ்க்கை வரலாறு
✅Finalised Page