என் பெயர் சிவப்பு (நாவல்)
என் பெயர் சிவப்பு(1998), துருக்கிய மொழியில் எழுத்தாளர் ஓரான் பாமுக் எழுதிய நாவல். தமிழில் ஜி.குப்புசாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, காலச்சுவடு பதிப்பகத்தால், 2009ஆம் ஆண்டு வெளியானது. 2006 ஆம் ஆண்டு ஓரான் பாமுக் நோபல் பரிசு பெற்றார். இந்த நாவல், 14ம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை, தென்கிழக்கு ஐரோப்பா, மேற்காசியா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளை ஆண்ட, ஓட்டாமன் பேரரசின் 1591 ஆம் ஆண்டின் காலக்கட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டது. நுண்ணோவியர்கள், எழுத்தோவியர்கள், மெருகோவியர்கள் ஆகியோரைக் கொண்டு ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவுக்கான மலரை தயாரிக்க முற்படும் சூழலை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட நாவல்.
பதிப்பு
என் பெயர் சிவப்பு தமிழில் முதல் பதிப்பு டிசம்பர் 2009 ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு 2013 ஆம் ஆண்டு வெளியானது.
ஆசிரியர்
துருக்கிய மொழியில் இந்த நூலை எழுதிய ஓரான் பாமுக், துருக்கிய குடும்பத்தில் இஸ்தான்புல்லில் பிறந்தார். இளமையில் ஓவியக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக இஸ்தான்புல் தொழிற் பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலை பயின்றார். பிறகு எழுத்தார்வம் காரணமாக இதழியல் பயின்றார். தனது 22வது வயதில் நாவல் எழுத முயன்றார். முதல் நாவல் செவ்தெத் பேயும் பிள்ளைகளும் 1982இல் வெளியானது. தொடர்ந்து எட்டு நாவல்களும், இஸ்தான்புல் நகரத்தை பற்றிய நினைவுப் பதிவு நூலும் வெளியானது. 1998இல் எழுதிய என் பெயர் சிவப்பு நாவல் இண்டர்நேஷனல் இம்பாக் டப்ளின் லிட்டரரி பிரைஸ் உட்படப் பல விருதுகளை வென்றது. 2006 ஆ ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார் ஓரான் பாமுக்.
என் பெயர் சிவப்பு நாவலை தமிழ் மொழியில் எழுதிய ஜி.குப்புசாமி, அயல்மொழி இலக்கிய மொழிப்பெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு, முக்கியமான சம கால எழுத்தாளர்களின் பல நாவல்களை தமிழாக்கம் செய்துள்ளார். ஜான் பான்வில்லின் கடல் என்ற நாவலை மொழிபெயர்ப்பதற்காக அயர்லாந்து நாட்டின் கலாச்சாரப் பிரிவான ILEஇன் Translators Bursary இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ்மொழியில் மொழிபெயர்க்கும்போது, கூடியவரை தமிழ்மொழிக்கு நெருக்கமாக இந்த படைப்பை எழுதியுள்ளார்.