எனது பர்மா வழி நடைப் பயணம்
பர்மாவில் வசித்து வந்த வெ.சாமிநாத சர்மா, இரண்டாம் உலகப் போரின் போது தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மாத காலம் பயணம் செய்து இந்தியா வந்தடைந்தார். அந்த அனுபவக் குறிப்புகளைப் பின்னர் எழுத்தாளர் பெ.சு.மணியிடம் கையளித்திருந்தார். மணியின் முயற்சியால் அந்தக் குறிப்புகள் 1978 முதல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளியாகின. பின்னர் அது நூலாக்கம் செய்யப்பட்டது. அது திருமகள் நிலையத்தாரால் ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது.
எழுத்து, வெளியீடு
‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1979-ல் வெளியான இந்த நூலின் விலை ரூ. 11.00.
உள்ளடக்கம்
“பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்தது அல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை” என்கிறார், நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் ம.பொ.சிவஞானம்.