ஊடறு றஞ்சி
ஊடறு றஞ்சி (றஞ்சினி பத்மநாதன்) (பிறப்பு: நவம்பர் 22, 1964) ஈழத்துப் பெண் எழுத்தாளர், இதழாசிரியர், இலக்கிய, பெண்ணியச் செயற்பாட்டாளர். ஊடறு என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ்ப் பெண்களின் படைப்புகளை வெளிக்கொணர்ந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஊடறு றஞ்சியின் இயற்பெயர் றஞ்சினி. ஊடறு றஞ்சி இலங்கை மலையகம், பல்மோறல் எஸ்டேட்டில் சிவனடியான், புவனேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்துக்குப் புலம்பெயர்ந்தார். ஊடறுவை தோற்றுவித்ததினால் 'ஊடறு றஞ்சி' என்றும் அழைக்கப்பட்டார்.
அமைப்புப் பணிகள்
- 1991 முதல் 1994 வரை 'சுவிஸ் மனிதம்' அமைப்பினருடன் இணைந்து செயல்பட்டார்.
- சுவிஸ்பெண்கள் அமைப்புகளில் இணைந்து செயற்பட்டார். சுவிற்சர்லாந்தில் 1995, 1997, 2003-ம் ஆண்டுகளில் பெண்கள் சந்திப்புக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். ஜெர்மன், லண்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்புகளிலும் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து தனது பங்களிப்புக்களை செலுத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கள் பற்றிய குறிப்புக்களை 'சக்தி 'சஞ்சிகையிலும் மற்றும் ஊடறு, பதிவுகள், திண்ணை, கீற்று போன்ற இணையத்தளங்களில 'றஞ்சி சுவிஸ்' என்ற பெயரில் எழுதி பதிவும் செய்துள்ளார். அதே போல் 1995- 2004, 2005 ஆண்டின் பெண்கள் சந்திப்பு மலரை தொகுத்தார். 1993- லிருந்து 2010 வரை புலம்பெயர்ந்த ஐரோப்பிய தமிழ் பெண்கள் சந்திப்பை நடத்துவதற்காகத் தனது பங்களிப்பைச் செலுத்தினார்.
- சுவிட்சர்லாந்தில் உள்ள பல்லின நாட்டின் பெண்கள் அமைப்பான பெமில் குளோபல் FEMME GLOBAL- என்ற அமைப்பின் உறுப்பினர், செயற்பாட்டாளர்
- சுவிஸ் இரண்டாம் தலைமுறையினருடன் இணைந்து தொடர்ந்து நடைபெற்று வரும் 'சுவிஸ் வாசிப்பும் உரையாடலும்' என்ற அமைப்பின் வேலைதிட்டங்களில் பங்கெடுத்து அவ்வுரையாடலை ஒழுங்கமைக்கும் பொறுப்புகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்
ஊடறு
2005-ல் றஞ்சி உலகளாவிய தமிழ்ப் பெண்களுக்கான முதலாவது இணையத்தளமான ஊடறுவை நிறுவினார். ஊடறு பெண்கள் சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்தினார். 2014-ல் சென்னை, 2015-ல் இலங்கை மலையகம், 2016-ல் மலேசியாவின் பினாங்கு, 2017-ல் மும்பை, 2018-ல் இலங்கையின் மட்டக்களப்பு, 2019-ல் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் ஊடறு பெண்கள் சந்திப்புகளை ஒழுங்கமைத்தார். ஊடறுவில் 3600க்கு மேற்பட்ட பெண்களின் படைப்புக்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 67 பெண்கவிஞர்களின் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுமல்லாது அவர்களின் கவிதைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. பெண் ஆளுமைகளின் சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், பதிவுகள், அறிவிப்புகள், வேண்டுகோள்கள், குறும்படங்கள், நூலகம், காணொளிகள் என அனைத்துத் தளங்களிலும் பெண்களின் படைப்புகளை வெளிக்கொணர்ந்தார்.
இதழியல்
ஊடறு றஞ்சி 1997முதல் 2000-ம் ஆண்டு வரை நார்வேயிலிருந்து வெளிவந்த 'சக்தி' இதழின் இணை ஆசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
றஞ்சி விமர்சனம், புத்தக அறிமுகம், கட்டுரைகள், நேர்காணல்கள் நிகழ்வுக் குறிப்புகள் எழுதினார். ஊடறு நூல்களின் தொகுப்பாளர். றஞ்சியின் எழுத்துக்கள் இலங்கை, ஜெர்மன், நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், லண்டன், தமிழ்நாடு உள்ளிட்ட நாடுகளிலுள்ள சிற்றிதழ்களில் வெளிவந்தன. திண்ணை, வார்ப்பு, ஆறாம்திணை, தோழிகள், கீற்று, ஊடறு ஆகியவற்றிலும் இவரின் படைப்புகள் வெளிவந்தன. புகலிட இலக்கிய சந்திப்புகளிலும் பேச்சாளாராக உரையாற்றினார். முதன் முதலில் உலகளாவிய தமிழ்ப்பெண்களின் படைப்புக்களை தொகுத்து 2002-ம் ஆண்டு ஊடறு தொகுப்பை வெளியிட்டார். 'என் கவிதைக்கு எதிர்த்தல்', 'மை', 'இசைபிழியப்பட்ட வீணை', 'பெயரிடாத நட்சத்திரங்கள்', 'சங்கமி பெண்ணிய உரையாடல்களின் தொகுப்பு' ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர் பெண்களின் சிறுகதைத்தொகுப்பான 'புதுஉலகம் எமை நோக்கி' என்ற தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவர்.
விருதுகள்
- சுவிட்சர்லாந்தில் உள்ள அமைப்பான ”des Tamilischen Elternvereins Burgdorf” ஊடறு றஞ்சியின் சேவையை பாராட்டி 2016-ம் ஆண்டு விருது கொடுத்து கௌரவித்தது
நூல் பட்டியல்
தொகுப்பாசிரியர்
- ஊடறு தொகுப்பு 2002 (உலகளாவிய தமிழ்பெண்களின் படைப்புக்கள்)
- என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு (2006) (பெண்ணியாவின் கவிதைகளின் தொகுப்பு)
- மை (2007) (ஊடறு இணையத்தளத்தில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு)
- இசைபிழியப்பட்ட வீணை (2007) (இலங்கை மலையகப் பெண்களின் கவிதைகள் தொகுப்பு)
- பெயரிடாத நட்சத்திரங்கள் (2011) (ஈழப்பெண்போராளிகளின் கவிதைப் தொகுப்பு)
- சங்கமி (பெண்ணிய உரையாடல்களின் தொகுப்பு)
உசாத்துணை
- ஆளுமை:ஊடறு றஞ்சி: noolaham
- சங்கமி பெண்ணிய உரையாடல்கள்: தினமணி
- ஈழத்தின் அரங்கியல் துறையினர் எமது முயற்சிகளை உதாசீனம் செய்தார்கள் - ஊடறு றஞ்சி
- சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்: சிவானந்தம் நீலகண்டன்
✅Finalised Page