being created

உழவாரப்பணி

From Tamil Wiki
Revision as of 12:20, 23 December 2022 by Vikram (talk | contribs)

ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணி. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் பக்தர்களால், தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணி. ஆலயங்களை, அவற்றின் பகுதிகளை, அவற்றின் குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களை தூய்மை செய்வது, தேவையற்ற புதர்களைக் களைவது, புற்களைச் செதுக்கி திருத்துவது போன்ற பணிகள் உழவாரப்பணி என்று அழைக்கப்படுகிறது.

வரலாறு

திருநாவுக்கரசர் உழவாரப்படையுடன்
துவக்கம்

புற்களைச் செதுக்க பயன்படுத்தப்படும் உழவாரம் என்னும் வேளாண்மைக் கருவியை ஆலயத் தூய்மை செய்யும் தொண்டிற்கு அறுபது மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவருமான அப்பர் பெருமான் என்னும் திருநாவுக்கரசர் பயன்படுத்தினார். சைவ பன்னிரு திருமுறைகளில் தேவாரம் என வழங்கப்படும் திருமுறைகளில் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைப் பாடல்களை படைத்து இறைவனை இயற்றமிழால் தொழுத அப்பர், உடலால் செய்யும் தொண்டாக சிவாலயங்களை உழவாரம் கொண்டு தூய்மை செய்யும் பணியைத் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.

இறைவனை அடைய சைவம் கூறும் நான்வகை மார்க்கங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவையாகும்.  இவற்றுள் சரியை என்பது தொண்டின் வழியாக இறைவனை அடைதலாகும்.  இது  தாதமார்க்கம் (தாசமார்க்கம்) என்றும் அழைக்கப்படுகிறது.  தாசன் அல்லது தொண்டன்.  இறைவனை வழிபடும் போது இறைஉணர்வின் வெளிப்பாடாக அன்பின் வெளிப்பாடாக அமையும் செயல்கள் சரியை எனப்படுகின்றன.  உடலினால் (சரீரத்தினால்) மேற்கொள்ளப்படும் தொண்டு என்பதால் சரியை எனப்படுகிறது.  இவ்வாறான தொண்டின் செயல்கள் சாத்திரங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் பல வகைகளினும் வகுக்கப்பட்டுள்ளன என்பதுடன் காலந்தோறும் சூழலுக்கு ஏற்ப மாற்றமடைகின்றன.

   நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

    நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்

    புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்

    பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

    தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

    அலைபுனல் சேர் செஞ்சடையெம் மாதீயென்றும்

    ஆரூரா வென்றென்றே யலறா நில்லே

         - (அப்பர் தேவாரம் -6.31.3)

மேற்கண்ட தேவாரப்பாடலில் அப்பர் பெருமான் நெஞ்சம் நிலைபெற பக்தி மார்க்கத்தின், ஆலய வழிபாட்டு முறையை சுட்டுகிறார்.  உள்ளத்திற்கு அய்ந்தெழுத்து உடலுக்கு தொண்டு என்று சைவ பக்தி மார்க்கம் கூறும் வழிமுறையாகும்.  உள்ளதால் இறைவனை நினைத்து உருகித் தொழல், உடலால் இறைவனுக்கு, அவனது ஆலயங்களுக்கு, அவனது அடியவர்களுக்கு, உயிர்களுக்கு தொண்டு புரிதல்.

தொன்மம்

அப்பர் பெருமான் திருப்புகலூரில் கோயிலின் குளக்கரையில் உழவாரப் பணியை மேற்கொண்டபோது, அவர் உழவாரத்தை நுழைத்த இடத்திலெல்லாம் பொன்னும் நவமணிகளும் கிடைக்கும்படி  இறைவன் செய்தார்.  அவற்றை அப்பர் பெருமான் பிற சாதாரண கற்களைப் போலவே நீரில் எறிந்தார்.  இறைவன் மீதான பெரும் காதல் கொண்ட செல்வத்தை ஒரு பொருட்டாக எண்ணாத திருநாவுக்கரசரின் இயல்பைத் தெரிவிக்கும் இந்நிகழ்வை  பெரியபுராணப் பாடல்கள் கூறுகின்றன.

அந் நிலைமையினில் ஆண்ட அரசு

  பணி செய்ய அவர் நல் நிலைமை காட்டுவார் நம்பர்

  திரு மணி முன்றில்

தன்னில் வரும் உழவாரம் நுழைந்த

  இடம் தான் எங்கும்

பொன்னினொடு நவமணிகள் பொலிந்து

  இலங்க அருள் செய்தார். 

செம்பொன்னும் நவமணியும் சேண்

  விளங்க ஆங்கொவையும்

உம்பர் பிரான் திருமுன்றில் உருள்

  பருக்கை உடன் ஒக்க

எம் பெருமான் வாகீசர்

  உழ வாரத்தினில் ஏந்தி

வம்பலர் மென் பூங்கமல

  வாவியினில் புக எறிந்தார். 

(416-417 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் )


உசாத்துணை

https://www.ulavaram.org/index.html

https://shaivam.org/devotees/thirunavukkarasu-nayanar-puranam

http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021402.htm



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.