under review

உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 10:10, 23 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை

உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை (கோட்டையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை) (1893 - ஏப்ரல் 8, 1966) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ள உறையூரில் கிருஷ்ண பிள்ளை - நாகம்மாள் தம்பதிக்கு 1893-ஆம் ஆண்டில் அப்பாவுசுந்தரம் பிள்ளை பிறந்தார்.

தந்தையே முதல் குருவாக அமைந்து இசை பயிற்றுவித்தார். பொன்னர் உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

அப்பாவுசுந்தரம் பிள்ளையின் மூத்த சகோதரர் துரைசாமி இளமையிலேயே ரங்கூன் சென்று அங்கேயே வாழ்ந்து மறைந்தார். அப்பாவுசுந்தரம் பிள்ளைக்கு அகிலாண்டம் என்ற தங்கையும் ராஜப்பா என்ற தம்பியும் இருந்தார்கள்.

உறையூர் முத்துவீருஸ்வாமி பிள்ளையின் மகள் அன்னலக்ஷ்மியை மணந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இசைப்பணி

ஒரு முறை ராமநாதபுரத்தில் அப்பாவுசுந்தரம் பிள்ளையின் கச்சேரியைக் கேட்ட மைசூர் வீணை சேஷண்ணா இவரைத் தன்னோடு மைசூருக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் அங்கு தங்கச் செய்து இசை குறித்து உரையாடியிருக்கிறார். அப்பாவுசுந்தரம் பிள்ளை திமிரி நாதஸ்வரத்தைக் கையாண்டவர். இவரது இசையொலி கம்பீரமாக இருக்கும். விரலடியும் பிருகாவுமாக சங்கதிகள் வாசிப்பவர். இவர் மீது நாட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டிருந்த மதிப்பின் காரணமாக சில காலம் கோட்டையூரில் வாழ்ந்தார். அதனால் கோட்டையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை என்றறியப்பட்டார்.

மறைவு

உறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 8, 1966 அன்று உறையூரில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page