உதயணன் (கனடா)

From Tamil Wiki
Revision as of 10:11, 28 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|உதயணன் கனடா உதயணன் (கனடா) தமிழ் எழுத்தாளர். கனடாவில் டொரொண்டோ நகரில் வாழ்ந்தார். ஃபின்லாந்து நூல்களை மொழியாக்கம் செய்தவர். ஃபின்லாந்தின் தேசியக்காப்பியமான கலேவலாவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
உதயணன் கனடா

உதயணன் (கனடா) தமிழ் எழுத்தாளர். கனடாவில் டொரொண்டோ நகரில் வாழ்ந்தார். ஃபின்லாந்து நூல்களை மொழியாக்கம் செய்தவர். ஃபின்லாந்தின் தேசியக்காப்பியமான கலேவலாவை தமிழாக்கம் செய்தவர்.

தனிவாழ்ககை

உதயணன் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார். 1983 இல் இருந்து 25 வருடங்கள் பின்லாந்தில் வசித்துவந்த உதயணன், பின்னர் கனடாவில் குடியேறினார்

பின்லாந்தில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் 1986 இல் நியமனம் பெற்றார். பழந்தமிழ் இலக்கியங்களைப் பின்னிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் பணி இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம் என்னும் படைப்புகளில் இவர் பங்களிப்புச் செய்திருந்தார். பேராசிரியர் அஸ்கோ பார்பொலா (Dr Asko Parpola). இவர் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித்திணைக்களத்தின் இந்தியவியல் அம்பந்தப்பட்ட கல்விக்குப் பொறுப்பாக இருந்தவர். உதயணன் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் 19 வருடங்கள் தமிழ் கற்பித்தார்

இதழியல்

களுத்துறையில் வெளிவந்த ‘ஈழதேவி’ இதழின் வளர்ச்சிக்கும், அது பின்னர் இடம் மாறி - சிற்பி சி. சிவசரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 1958 முதல் 1966 வரை வெளிவந்த ’கலைச்செல்வி’ சஞ்சிகையின் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர். இவரது நண்பர் பாலசுப்பிரமணியம் களுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் ’ஈழதேவி’ இதழை நடத்தி வந்தார். 1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ்ச்சஞ்சிகையை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது, இவர்கள் இருவரும் சிற்பியைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பே ‘கலைச்செல்வி’ இதழ் வெளிவர அத்திவாரமானது.

இலக்கிய வாழ்க்கை

இவர் தனது எழுத்துலகிற்கு வித்திட்டவர்களாக யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி தமிழாசிரியர் இ.கேதீஸ்வரநாதன், மற்றும் வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு.ஞானப்பிரகாசம் என்பவர்களை நினைவு கூருகின்றார்.

உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’ என்ற பேரில் வெளியாகியது) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்

பின்லாந்தின் தேசிய காவியமான செய்யுள் வடிவில் அமைந்த ‘கலேவலா’ (KALEVALA) என்பதை மூலமொழியான பின்னிஷ் மொழியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்தார். மூன்று ஆண்டுகால உழைப்பின் விளைவாக 1994 ஆம் ஆண்டு கலேவலா வெளிவந்தது. ஃபின்னிஷ் மொழியிலிருந்து தமிழிற்கு வந்த முதல் நூல் அது.

நூல்கள்

கட்டுரைகள்
  • பின்லாந்தின் பசுமை நினைவுகள்
சிறுகதைகள்
  • பிரிந்தவர் பேசினால்
  • உங்கள் தீர்ப்பு என்ன
மொழிபெயர்ப்பு
  • கலேவலா

உசாத்துணை

கே.எஸ்.சுதாகர் அஞ்சலி: தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)