இளங்கீரந்தையார்

From Tamil Wiki
Revision as of 11:46, 28 November 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

இளங்கீரந்தையார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இளங்கீரந்தையார் பெயரில் கீரன், தந்தை என்னும் சொற்கள் இணைந்து கீரந்தை என அமைந்துள்ளது எனவும் எனவே இப்புலவர் கீரன் என்பவரின் தந்தை என்றும் கருதப்படுகிறது. பரிபாடல் இயற்றிய புலவர்களில் ஒருவர் கீரந்தையார். அவரைவிட வயது குறைந்தவராக இவர் இருப்பதால் இவர் இளங்கீரந்தையார் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

இலக்கியக் வாழ்க்கை

இளங்கீரந்தையார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 148- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் வந்த பிறகும் வாராததை எண்ணி தலைவி வருந்துவதாக இந்தப்பாடல் அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 148

முல்லைத் திணை

பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது.

கிண்கிணி  தவளை வாய் போல ஒலிக்கும் காலணி.  பொன்னாலான இதனைச் செல்வச் சிறுவர் சிறுமியர் தம் கால்களில் அணிந்திருப்பர்.

இந்த அணிகலன் போலக் கொன்றை பூ விட்டு குருந்தம் பூவோடு பூத்திருக்கிறது.

இதனை நீ ‘கார்காலம் அன்று’ என்கிறாய். அப்படியாயின் நாம் காண்பது கனவா?

பாடல் நடை

குறுந்தொகை 148

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த

தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்

காசி னன்ன போதீன் கொன்றை

குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்

காரன் றென்றி யாயிற்

கனவோ மற்றிது வினவுவல் யானே

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

குறுந்தொகை 148,  தமிழ்த் துளி இணையதளம்

https://vaiyan.blogspot.com/2014/07/kurunthogai-annotation-148.html?m=1

குறுந்தொகை 148, தமிழ் சுரங்கம் இணையதளம்

http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_148.html