இரும்புக்குதிரைகள்
இரும்புக்குதிரைகள் (1986 ) பாலகுமாரன் எழுதிய நாவல். லாரிப்போக்குவரத்து சார்ந்த களம் கொண்டது.
எழுத்து வெளியீடு
1986ல் கல்கி இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் நூலாகியது
கதைச்சுருக்கம்
கதை லாரிப்போக்குவரத்து சார்ந்த சூழலில் நிகழ்கிறது. கதைநாயகன் விஸ்வநாதன் திரைத்துறையில் நுழைந்துவிடவேண்டும் என்னும் கனவுடன் ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிகிறான். அவன் குதிரைகளை பாடுபொருளாக்கி எழுதும் கவிதைகள் இந்நாவலின் மைய ஓட்டம். லாரி உலகைச் சேர்ந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள், லாரி புரோக்கர்கள் என வெவ்வேறு கதைமாந்தர்கள் நாவலில் வருகிறார்கள். லாரி புரோக்கர் நாராயணசாமி எனும் நாணு ஐயர் தன்னிடம் உதவியாளனாக இருந்த வடிவேலின் கடையில் தன் மகள் காயத்ரிக்கு வேலை வாங்கித்தருகிறார். நாணு ஐயருடன் விஸ்வநாதன் நட்பாகிறான். காயத்ரி விஸ்வநாதன் திருமணமானவன் என தெரிந்தும் அவனை விரும்புகிறாள். விஸ்வநாதனின் குழந்தை தனக்கு வேண்டும் என்று சொல்கிறாள். விஸ்வநாதன் அதை ஏற்பதில்லை. அவள் பிரிந்துசெல்கிறாள். விஸ்வநாதனும் அவன் மனைவி தாரணியும் அவனுடைய கவிதைகளை இரும்புக்குதிரைகள் என்றபெயரில் நூலாக்குகிறார்கள்.