இராணுன்
இராணுன் பழங்குடியினர் மலேசியாவின் சபா மாநிலத்திலும், தென் பிலிப்பின்ஸிலும் வாழ்கின்றனர். இராணுன் பழங்குடியினர் மின்டானொ, பிலிப்பின்ஸை சேர்ந்த மோரோ இனக்குழுவில் அடங்குவர்.
வாழிடம்
இராணுன் பழங்குடியினர் கோத்தா பெலூட், லஹாட் டத்து மாவட்டங்களில் சாமா பாஜாவ் பழக்குடியினருடன் சேர்ந்து வாழ்கின்றனர்.
பின்னணி
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இராணுன் பழங்குடியினர் தென்கிழக்காசியாவின் கடற்கொள்ளையர்களாக அறியப்படுகின்றனர். இராணுன் எனும் பெயர் மலாய் மொழியின் ‘லானுன்’ (கடற்கொள்ளையர்) எனும் சொல்லிருந்து மருவி வந்துள்ளது.
பிலிப்பின்ஸின் மகுந்தானௌ சுல்தானகத்தின் மூதாதையர்கள் இராணுன் வம்சாவளியாவர். இராணுன் சுல்தானகம் லமிதான் மலபாங்கில் இருந்தன. இராணுன் பழங்குடியினர் 1899லிருந்து 1913 வரை இருந்த மேற்கத்திய ஊடுருவலை எதிர்த்தனர்.
மொழி
இராணுன் பழங்குடியினர் டானௌ மொழியைப் பேசுகின்றனர், டானௌ மொழியென்பது பிலிப்பின்ஸில் வாழ்ந்த ஆஸ்திரோனேசிய சமூகத்தின் பண்டைய மொழியாகும்.
நம்பிக்கைகள்
இராணுன் பழங்குடிகளில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், ஆன்மவாதத்தைப் பின்பற்றுபவர்களும் இருக்கின்றனர்.
சடங்குகள்
பிறப்பு
இராணுன் சமூகத்தில் பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியை வெள்ளைத்துணியில் சுருட்டி தேங்காய் ஓட்டினுள் புதைப்பர். குழந்தையைப் பிரசவம் பார்த்த ‘பிடான்’ என்பவர் நஞ்சுக் கொடியைப் புதைப்பார். இந்தச் சடங்கில் பிரசவித்த தாய்க்கும் மற்ற விருந்தினருக்கும் முற்றிய தேங்காயுடன் சமைத்த அரிசியை ஏழு அவித்த முட்டைகளுடன் உண்ண அளிப்பர். இச்சடங்கை ‘அசான்’ (azan) என அழைப்பர்.
குழந்தை பிறந்த ஏழாம் நாள் குழந்தையின் முடி வெட்டுவர். இச்சடங்கு முடிந்ததும் விருந்தாளிகளுக்கு விருந்து வைப்பர். குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பின், குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்திருக்கும். உலர்ந்த தொப்புள் கொடியைக் ‘கெதுபாட்டினுள்’ வைப்பர். ஒரு தாயின் அனைத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளும் ஒரே இடத்தில் தனித்தனி கெதுப்பாட்டினுள் இராணுன் பழங்குடியினர் வைத்துள்ளனர். உலர்ந்த தொப்புள் கொடியுடைய கெதுபாட்டைப் ‘பியுசு அ புசேட்’ என அழைப்பர். பிரசவித்த தாய் நாற்பத்து நான்கு நாட்களுக்கு வெளியே செல்லக் கூடாது.
லலாவான் சடங்கு
லலாவான் சடங்கென்பது இறப்புச் சடங்காகும். ம்பாலு என்பது இறப்பைத் தெரிவிக்கும் சடங்கு. ம்பாலு இருவகைப்படும். ஒன்று மேல்வர்க்கத்தினர். இரண்டு சாமானியர். மேல்வர்க்கத்தினரின் இறப்பைப் பாலு பாலுவான் எனும் இசைக்கருவிகளுடன் மேளம் கட்டிச் சொல்வர். சாமானியரின் இறப்புச் செய்தியைப் பள்ளிவாசலில் தாபு அடித்துச் சொல்வர்.
பாண்டி
பாண்டி என்பது இறந்தவர் புதைக்கப்பட்ட இடத்தில் நட்டு வைக்கும் குடையாகும். பச்சை பாண்டி டாத்து அல்லது பாய் எனப்படும் மேல்வர்க்கத்தினருக்கானது. மஞ்சள் பாண்டி ஸாரிப்/ஸாரிப்பாக்குரியது. வெள்ளை பாண்டி சாமானியருக்கானது.
லின்சாம்
லின்சாம் என்பது பாத்து நிசான் எனப்படும் கல்தூண். லின்சாம் கல்லறையில் எழுப்பப்படும். ஆண்களுக்கு ஒரு ஜோடி லின்சாமும், பெண்களுக்கு ஒரு லின்சாமும் நிறுவப்படும்.
டிதுங்கு சா
மேல்வர்க்கத்தினரின் கல்லறையில் இருபத்தோன்றிலிருந்து நாற்பது இரவுகளும் சாமானியருக்கு ஏழு இரவுகளும் காவல் காக்கப்படும்.
இறப்புச் சடங்குகளும் டிதுங்கு சா முடியும் வரையும் எவ்வித கேளிக்கைக்கும் இராணுன் பழங்குடியினர் அனுமதியளிப்பதில்லை. இந்தக் கட்டளையை மீறுபவர்களுக்குத் தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்படுகிறது.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.