இயேசு புராணம்

From Tamil Wiki
Revision as of 14:33, 19 May 2022 by Cyril.alex (talk | contribs) (புதிய பக்கம் உருவாக்கம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இயேசு புராணம்
இயேசு புராணம்

இயேசு புராணம் ஈழத்து பூரடனார் எழுதிய கிறீத்துவ தமிழ் காப்பியம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் திருமதி. பசுபதி வியற்றிஸ் செக்வராசகோபால் என்பவராவார். இந்நூல் 1986ஆம் ஆண்டு ‘ஆவணி முழுமதிநாள்’ அன்று வெளியிடப்பட்டது. ‘தமிழில் மின்கணினியால் அச்சமைப்புச் செய்யப்பட்டு தெளிவான அச்சுப்பிரதியாக, தமிழுலகத்தில், தமிழ் மொழியில், வெளிவரும் முதலாவது நூல்’ என்ற குறிப்புடன் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்

இயேசு புராணம் நூலை எழுதியவர் ஈழத்துப் பூராடனார் ஆவார். இவரது இயற்பெயர் க. தா. செல்வராசகோபால் (13, டிசம்பர், 1928 - 21 டிசம்பர், 2010) . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செட்டிப்பாளையம் எனும் ஊரில் 13, டிசம்பர், 1928ல் பிறந்தார். தந்தை பெயர் நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பி, தாயார் வள்ளியம்மை அம்மாள். பின்னர் தேற்றாத்தீவில் வாழ்ந்து வந்த இவர் 1985ல் கனடாவிற்கு குடிபெயர்ந்தார்.

சிறுவயதிலேயே எழுதத் துவங்கிய இவர் கதிர், கதிர்வள்ளிச் செல்வன், பூராடனார், ஈழத்துப் பூராடனார் எனும் புனைபெயர்களில் பல படைப்புக்களையும், மொழியாக்கங்களையும் எழுதியுள்ளார். 21 டிசம்பர் 2010 அன்று கனடாவில் மறைந்தார்.

பிற நூல்கள்

புயற்பரணி எனும் 625 செய்யுட்கள் கொண்ட நூலையும், ஈழத்துப் போர்ப்பரணி எனும் 525 செய்யுட்கள் கொண்ட நூலையும், விபுலானந்தர் பிள்ளைத் தமிழ், ஈழத்து இரட்டையர் இரட்டை ம்ணிமாலை, புலவர்மணிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். ஈழ வரலாற்றைச் சொல்லும் யாரிந்த வேடர்(1965), ஈழத்தின் வரலாறு(1986) எனும் நூல்களையும் எழுதியுள்ளார்.

இயேசு புராணத்தை எளிய வடிவில் அமைத்த ஈழத்து புராடனார் மரபுச் செய்யுள் வழியில் ‘இயேசு இரட்சகர் இரட்டை மணி மாலை(1983) ’, ‘பெத்லேகக் கலம்பகம்’ (1986) எனும் நூல்களை இயற்றியுள்ளார். ‘பக்தி அருவி’ (1984), பக்தி வனம் (1985), பக்தி நதி (1987) ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களும், கிறித்தவ மிசனரிமாரின் சமுதாயப் பணிகள் (1986) எனும் வரலாற்று நூலும் ‘முப்பது வெள்ளிக் காசுகள்’ (1982) எனும் நாடகமும் இவரால் எழுதப்பட்ட கிறீத்துவ நூல்களகும்.

அங்கிகாரங்கள்

மட்டக்கிளப்பின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது எழுத்துப்பணிக்காக பல அங்கிகாரங்க்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக இந்து பண்பாட்டு அமைச்சின் நாடக சேவை விருது(1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கிய மணி விருது, கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப் பதக்கம் (1994), டொரெண்டோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும் (1987), மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப் புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவரது தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய முனைவர் பட்டமும் (Doctor Of Letters)(2000), தமிழர் தகவல் விருது (1992), தாமோதரம் பிள்ளை விருது(1998) ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.

நூல் உருவாக்கம்

இயேசு புராணம் என வெளியிடப்பட்ட இந்நூலை எழுதி முடிக்க ஈழத்துப் பூராடனார் ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் எடுத்துக்கொண்டதாக இதன் தொகுப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். துவக்கத்தில் இது 200 செய்யுள்களைக் கொண்டு ‘இயேசு காதை’ என எழுதப்பட்டது. இதில் இயேசுவின் வரலாறு மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. பின்னர் மேலும் 300 பாடல்களை எழுதிச் சேர்த்து 1970ஆம் ஆண்டு ‘கிறித்தவ வரலாற்றுக் காவியம்’ என்று பெயர் சூட்டினார். 1978ஆம் ஆண்டு மேலும் சில பாடல்களுடன் ‘வேதாகம விளக்கக் காவியம்’ என்ற பெயரில் வெளியிட தயாரிப்புடனிருந்தார். அவ்வருடம் புயலால் அச்சகம் சேதமடைந்தது, கையெழுத்துப் பிரதியும் பாதிப்புக்குள்ளானது. பின்பு மேலும் பாடல்களுசன் மொத்தம் 1602 பாடல்களோடு ‘இயேசு புராணம்’ என்று தலைப்பிட்டு இந்நூலை முடித்தார். இத்தகவல்களை தொகுப்பாசிரியர் தனது தொகுப்புரையில் குறிப்பிடுகிறார்.

இந்நூலை எழுத பல ஆய்வுகளை இலங்க்கையில் இருந்த பொழுதும் கனடாவிலும் அவர் மீற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

நூலின் அமைப்பு

இயேசு புராணம் பரம பிதாப் பருவம், பரம சுதன் பருவம், பரிசுத்தாவிப் பருவம் என மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டுள்ளது.

பரம பிதாப் பருவம் பழைய ஈற்பாட்டின் துவக்க நூலில் (ஆதியாகமம்) படைப்புக் கதையிலிருந்து துவங்கி முக்கிய பழைய ஏற்பாட்டுக்கதைகள் வழியாக இயேசுவின் வம்ச வரலாற்றைச் சொல்லி முடிக்கிறது. பரம சுதன் பருவம் இயேசுவின் பிறப்பிலிருந்து யூதாஸ் இயேசுவுக்கு எதிராக சதி தீட்டுவது வரை உள்ள நிகழ்வுகளைப் பாடுகிறது. பரிசுத்தாவிப் பருவம் கடைசி இரவுணவில் துவங்க்கி, இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்த்தெழுதலைச் சொல்லி கிறீத்துவ நம்பிக்கைச் சுருக்கம் எனும் தலைப்பில் இறுதியாக கிறித்துவப் பண்புப்படலத்தில் முடிவடைகிறது.

முதல் பருவத்தில் 582 செய்யுட்களும், 3 சருக்கங்களும், 15 படலங்களும், 75 அடங்க்கன்களும் உள்ளன. இரண்டாம் பருவத்தில் 612 செய்யுட்களும், 3 சுருக்கங்களும் 15 படலங்களும் 75 அடங்கன்களும் உள்ளன.மூன்றாவது படலத்தில் 408 செய்யுட்களும் 9 சுருக்கங்களும் 45 படலங்களும் அமைந்துள்ளன. நூலின் ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் இக்கணக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற சிறப்புகள்

இப்புத்தகம் ‘உலகத்தில் பரந்த அளவில் நடைமுறையில் இருக்கும் மின்னியல் அறிவுத்துறையைத் தமிழ் அச்சுக்கலையில் செயல்முறைப் படுத்திய சாதனையாக தமிழின் இரண்டாம்’ புத்தகம் என பதிப்பாசிரியர் எட்வர்ட் இதயச் சந்திரா, கனடா குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘மின்கணினியில் தெளிவான அச்சுப் பிரதி- முறையான லேசர் மூலம்’ அச்சாக்கப்பட்ட முதல் தமிழ் நூல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈழத்துப் பூராடனார் கணிப்பொறிமூலம் தமிழ் புத்தகங்க்களை பதிப்பிப்பதில் ஆர்வமாயிருந்தார் என்பது அவருக்கு வல்லமை இதழில் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்பில்  முனைவர் மு.இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் சமர்ப்பணம் ஈழவிடுதலைச் சுதந்தரப் போராட்டத்தில் மக்களின் நலனுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘சகல சமய குருமார்களுக்கும்’ அஞ்சலியாக செய்யப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தின் 'நூலாசிரியரின் நுவலுரை’ வசனகவிதையாக எழுதப்பட்டுள்ளது.

சில பாடல்கள்

பரமபிதா இலக்கண அடங்கன்

(நூலின் முதற் பாடல்)

ஆதியை முடிவை யாரும் அறிந்தில ரனேகவூழிச்

சேதியைச் செப்பும் வேதச் செறிகருத் துந்தவூழின்

போதியைக் கொண்டு மந்தப் பொறிவல்லான் பந்தமாகும்

சோதியைச் சுடரை விண்மண் சொரியுயிர் விந்தையாலே

உலக உற்பத்தி அடங்கன்

ஆதியிற் தேவ னிந்த ஆழமாம் நீரிடத்தே

ஓதிய வார்த்தை யாக ஒன்ரிடா தைசந்தசைந்து

மூதிது வெனவே யான்றோர் மொழிபுலத் துறைந்தஞான்று

கூதிரு மிருளும் மண்டிக் கிவிந்ததா மறிகமாதே.

சாத்தான் வஞ்சனை அடங்கன்

அழகுறச் சிவந்து நன்கு அமைவுறத் திரண்டு வாசப்

பழமென முதிர்ந்த ஆப்பிள் பசுந்தரு அருகில் நின்று

குழகமே சரியச் சென்ற கூன்பிறை நுதலா மேவாள்

இழகவே அழைத்துத் தேவ நிடுதடை விதித்துக் கூறும்.

பாபேற்(ல்) கோபுரம் சிதறும் அடங்கன்

உச்சியில் தச்சனுரை உடன்வேலைக் குதவுபவன் ஊமை யாகி

மச்சியிற் கொத்தனுரை மண்சுமப்பான் மறுதலிப்பான் மட்டில் லாத

கச்சிதக் கற்பொழிவான் கட்டளையைக் கழைத்திடுவான் கடின மென்றே

மிச்சமாம் பொருள்வீசி வினைமறந்து விளையாட்டுக் களமே யான.

தாவீதின் பாலப் பருவத்து ஆசை அடங்கன்

தானிடாத முட்டைகளைக் களவிற் கொண்டு

தகைகார்க்குங்க் கவுதாரி

போனினைந்து பிறர்பொருளைப் பொய்யி லாண்டு

புவியளப்பா ரென்றே

வானிறைந்த வார்த்தைபகர் எரோமியாத் தீர்க்கர்

வார்த்தைக்குப் பயந்து

கானிறைந்த புற்களுக்குட் பதுங்க்கீக் கொள்ளும்

கிலியானைக் கண்டான்.

மரியாளிடம் தேவதூது உரைத்த பின் வரும் பாடல்

உருவிலா வுடல முயிர்ப்பதுண்டோ உணர்விலா அறிவு ஒளிர்வதுண்டோ

கருவிலா மகவு பிறப்பதுண்டோ கரமொன் றசைவா லொலிப்பதுண்டோ

தருவிலாக் கனிகள் பழுப்பதுண்டோ தரையிலா தாறுகள் நகர்வதுண்டோ

ஒருவரை உடலா வறியேன்நான் உற்பத்திக் காளாய் ஆவதுண்டோ.

விதைப்பவன் உவமை (துவக்கப் பாடல்)

தேவனது வார்த்தைகளைக் கேட்டறிந்து

தேவனது அருளில் வாழ

ஆவல்தரு உவமையது விதைப்பவனுக்

கனையதவன் வீகம் வித்து

சாவலுணச் சார்முள்ளில் சரிந்தபாறை

சாரமீதி சரியாம் மண்ணில்

மேவவிழ விளைவுதரும் வேழாண்மை

வினையாக விளங்கிற் றாமே

நூலின் நிறைவுப் பாடல்

குன்றுமனத் தாபமுற்றுக் குமைந்து யேசின்

குருதியினாற் கழுவுண்டு குற்றம் நீங்கும்

அன்றேநான் கிறித்தடியான் ஆவே நன்றி

அனுசரிக்குங் கிரியைகளா லல்ல வதனால்

நன்றாக அவரின்பை நாடித் துய்க்க

நான்மட்டும் அல்லபிறர் நயந்து கொள்ள

என்றுமவர் இருக்கின்றார் இருப்பா ரிருந்தார்

எனவோதுஞ் சத்தியமே இயேசு புராணம்.

உசாத்துணை

தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் மறைந்தார் - வல்லமை.காம்

இயேசு புராணம். நூலகம்.காம்