இந்திரநீலம் (வெண்முரசு நாவலின் ஏழாம் பகுதி)
இந்திரநீலம் (‘வெண்முரசு’ நாவலின் ஏழாம் பகுதி) மகாபாரதக் கதையின் மையத்தை விட்டு விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் எட்டு அரசியர்களைப் பற்றி விரிவாக உரைக்கிறது. ‘வெண்முரசு’ நாவல் முழுவதிலுமே கிருஷ்ணர் (இளைய யாதவர்)தான் மையமாக இருக்கிறார் என்றாலும்கூட ‘நீலம்’, ‘இந்திரநீலம்’ ஆகியவற்றில் முழுவதுமாக அவரே இருக்கிறார். நீலத்தில் மாயக்கிருஷ்ணன்; இந்திர நீலத்தில் மானுடக்கிருஷ்ணன்.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் ஏழாம் பகுதியான ‘இந்திரநீலம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூன் 1, 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2015இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
கிழக்கு பதிப்பகம் இந்திர நீலத்தை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
‘சியமந்தக மணி’ என்பது, இந்திர நீல நிறத்தை உடைய ஓர் ஒளிர்கல். ‘இந்திர நீலம்’ என்ற இந்தப் பகுதி ‘சியமந்தக மணி’ என்ற ஒன்றைச் சுற்றியே எழுதப் பெற்றுள்ளது. ‘சியமந்தக மணி’ எல்லோரின் மனத்தையும் தன்னகத்தே ஈர்த்து, அவர்களை நெறிபிழைக்கச் செய்கிறது. ‘இந்திர நீலம்’ இளைய யாதவர் எட்டு மனைவியரைத் திருமணம்புரிந்தமை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அஷ்டலக்ஷ்மியருக்கு இருக்கும் கிருஷ்ணப் பித்தினையும் இளைய யாதவரின் அதிவீரத்தையும் ஒருங்கே காணும் பெருமுற்றமாக ‘இந்திர நீலம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒவ்வொரு மணக்களமும் ஒரு போர்க்களமாகவே அமைந்துவிடுவதும் அதை மிக எளிதாக இளைய யாதவர் எதிர்கொள்வதும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
திரௌபதியின் மனத்துக்குள் கருக்கொண்ட ‘இந்திரப்பிரஸ்தம்’ நிஜத்தில் உருக்கொள்ளும் விதத்தினைக் காட்டியுள்ளார் எழுத்தாளர். பெண்ணால் உருவாக்கப்படும் பெருநகரம் எவ்வகையில் எல்லாம் பெண்களைக் காக்கும் என்பதற்கு ஒரு சான்றாக இந்திர நீலத்தில் மூன்றாம் அத்யாயம் அமைக்கப்பட்டுள்ளது.
‘சுஃப்ரை’ என்ற கலைப்பெண்ணைத் திரௌபதியின் தம்பி திருஷ்டத்யுமன் அவமானப்படுத்தி, கொலைபுரியும் நிலைக்குச் சென்றுவிடுகிறான். ஆனால், திரௌபதியோ ‘சுஃப்ரை’யை அவனிடமிருந்து மீட்டு, பாதுகாப்புக்கொடுத்து, அவளைத் தன்னுடைய அணுக்கச் சேடியாக்கிக்கொள்கிறார். திரௌபதி உருவாக்கும் ‘இந்திரப்பிரஸ்தம்’ நிச்சயமாகப் பெண்களின் நகரமாகத்தான் உருப்பெறப்போகிறது என்பதை இங்கேயே ‘சுஃப்ரை’யை முன்னிறுத்திக் காட்டிவிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இளைய யாதவர் உருவாக்கியுள்ள துவாரகை முழுக்க முழுக்கப் பெண்களின் நகரமாகவே இருக்கிறது. அங்குப் பெண்களுக்குக் கிடைக்கும் அதிஉரிமைகள் நம்மைத் திகைக்கச் செய்கின்றன.
இளைய யாதவரின் அகத்தையும் புறத்தையும் சுற்றிப் பெண்கள் இருப்பதுபோலவே துவாரகைக்குள்ளும் வெளியிலும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இளைய யாதவரும் துவாரகையும் பெண்களின் கனவுகளில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றனர். இனி உருவாகும் ‘இந்திரப்பிரஸ்தம்’ அகத்திலும் புறத்திலும் உறுதியாகத் துவாரகையைப் போலவேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘துவாரகை’ ஓர் ஆணால் உருவாக்கப்பட்ட பெண்ணிய நகரம். ‘இந்திரப்பிரஸ்தம்’ ஒரு பெண்ணால் உருவாக்கப்படும் மற்றொரு பெண்ணிய நகரம். போரில் படுகாயமுற்று படுத்தபடுக்கையாக இருக்கும் திருஷ்டத்யுமன் தன்னுடைய உள்ளத்தளவிலும் உடலளவிலும் வலிமைகுன்றிவிடுகிறான். அதனாலேயே அவன் பிறரின் வலிமையைக் கண்டு சினக்கிறான். அவனின் விற்திறன் மழுங்கிவிடுகிறது. அதன் பின்விளைவாகவே அவன் சுஃப்ரையை வெறுக்கிறான்.
திருஷ்டத்யுமன் இளைய யாதவர் தனக்கு அளிக்கும் பெருவாய்ப்புகளின் வழியாகத் தான் இழந்த அக மற்றும் புற வலிமையை மெல்ல மெல்ல மீளப் பெறுகிறான். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அதிதருணத்தையும் அவன் சிறந்த முறையில் தனதாக்கிக்கொள்கிறான். தன்னைத்தானே இணையற்ற வீரனாக மீட்டுக்கொள்ளவும் அதைப் புற உலகத்துக்கு நிறுவவும் அவனால் இயல்கிறது. ஆனால், அவன் மனம் சுஃப்ரையைவிட்டு ஒரு கணமும் விலகவில்லை. இறுதியில் அவன், ‘அவளையே தன்னுடைய பட்டத்தரசியாக அமர்த்திக்கொள்ள வேண்டும்’ என்று உறுதிகொள்கிறான்.
இந்திர நீலத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை திருஷ்டத்யுமனின் மனவோட்டம் முதன்மை இடம் பெறுகிறது. ‘வெண்முகில் நகரம்’ முழுக்க பூரிசிரவஸ் அலைந்து திரிவதுபோலவே இந்திர நீலத்தில் திருஷ்டத்யுமன் அலைந்து திரிகிறான். தூதனாக வந்து, சிறு போரில் பங்கேற்று, இளைய யாதவருக்கு அணுக்கராக மாறி, அந்த நிலையையே தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறான். தனக்கொரு தீராப் பகையையும் தேடிக் கொள்கிறான். அவனால் ‘சியமந்தக மணி’யிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக்கொள்ள முடிகிறது அல்லது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பிறரிடம் (சாத்யகி) அதைக் கையளிக்கவும் முடிகிறது. சாத்யகி, திருஷ்டத்யுமன் ஆகியோருக்கு இடையிலான ‘நட்பு’ என்பது, இளைய யாதவருக்கும் அர்சுணனுக்கும் இடையில் இருக்கும் நட்புக்குச் சமமானது.
திருஷ்டத்யுமன் கலைப்பெண்ணான சுஃப்ரையிடம் கண்டது ஊழின் பெருமாயைக்கு அஞ்சி, அதற்கு அடிபணிந்துவிடாத பெருந்தவநிலையைத்தான். இத்தகைய பெருந்தவநிலையை உடையவர்தான் இளைய யாதவரின் எட்டு மனைவியர்களுள் ஒருவரான காளிந்தி. அவரே இளைய யாதவரின் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை இளைய யாதவரின் திருவாயாலேயே அறியமுடிகிறது. ஊழின் மாயையை உணர்ந்து, அதைவிட்டு விலகி, அதை வெற்றி கொள்பவர்களுக்கே இறையருள் கிடைக்கிறது. இந்தப் பேருண்மையை நிறுவும் வகையில் ‘இந்திர நீலம்’ அமைந்துள்ளது.
‘சுபத்ரை’யின் ஆளுமை பற்றிய சித்தரிப்பு, ஒரு கோட்டோவியம் போலவே மெல்ல மெல்ல விரிந்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது. ‘கதாயுதத்தை ஏந்தும் பெண்’ என்ற படிமமே நம்மை மெய்ச்சிலிர்க்கச் செய்துவிடுகிறது. இந்திர நீலத்தில் இரண்டொரு அத்யாயங்களில் மட்டுமே இடம்பெறும் சுபத்ரையை நம் மனம், ‘பெண்ணாகி வந்த இளைய யாதவராகவே’ நினைவில் கொண்டுவிடுகிறது. சுபத்ரையின் நிமிர்வையும் துணிவையும் நுண்ணறிவையும் கண்டு, துரியோதனனே அவளை வாழ்த்துவதால், நம் மனத்தில் துரியோதனனும் ஒளிரத் தொடங்குகிறான்.
‘சியமந்தக மணியைப் பற்றிய நினைவு’ என்பதே இறைவன் மானுடர்களுக்கு வைக்கும் ஒரு தேர்வுதான். அந்தத் தேர்வினை இளைய யாதவர் தன்னுடைய மனைவியரான அஷ்டலக்ஷ்மியர் முதல் எளிய படைவீரன் வரை அனைவருக்குமே வைக்கிறார். அதில் தேர்ச்சிப் பெற்றவர் இருவர்தான். ஒருவர் காளிந்தி; மற்றவர் திருஷ்டத்யுமன். இவர்கள் இருவருமே ஊழின் மாயைக்கு மயங்காதவர்கள். இவர்களோடு சுஃப்ரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காளிந்தியும் சுஃப்ரையும் யோகப்பெருநிலையில் இருப்பவர்கள்.
கதை மாந்தர்
இளைய யாதவர், திருஷ்டத்யுமன், சாத்யகி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் இளைய யாதவரின் எட்டு மனைவியர், திரௌபதி, சுஃப்ரை, சுபத்ரை ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
உசாத்துணை
- https://venmurasu.in/indraneelam/chapter-1
- https://venmurasudiscussions.blogspot.com/
- https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
- https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-38.html
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.