ஆர். சண்முகசுந்தரம்

From Tamil Wiki

ஆர். சண்முகசுந்தரம் (1918-1977) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய “நாகம்மாள்” நாவல் தமிழில் இயல்புவாத (நாச்சுரலிச) நாவலுக்கு முன்னோடியான படைப்பு.

தனிவாழ்க்கை

ஆர்.சண்முகசுந்தரம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது இந்த கிராமம் திருப்பூர் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இவர் கீரனூர் கிராமத்தில் செல்வாக்குமிக்க செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவரது தாயார் ஜானகி அம்மாள், தந்தை பெயர் எம். இரத்தினாசல முதலியார். சண்முகசுந்தரத்தின் மனைவி பெயர் வள்ளியம்மாள். இவரது சிறு வயதிலேயே தாயார் இறந்துவிட்டார். பின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். காந்தியக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் தனது வாழ்க்கை முறையாக அதனை கடைபிடித்தார். 1977 ஆம் ஆண்டு தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார்.

இலக்கிய வாழ்க்கை

மணிக்கொடி இதழ் மூலம் தன்னை எழுத்தாளராக அறிமுகம் செய்துகொண்டார். இவரது முதல் சிறுகதையான “பாறையருகே” மணிக்கொடி இதழில் வெளியானது. “நந்தா விளக்கு” என்ற சிறுகதையும் மணிகொடி இதழில் வெளிவந்தது. பின்னர் இவர் தன் தம்பி ஆர்.திருஞானசம்பந்தத்துடன் இணைந்து “வசந்தம்” என்னும் இதழை நடத்தினார். இருவரும் புதுமலர் நிலையம் என்னும் பதிப்பகம் மூலமாக பல நூல்களை வெளியிட்டார்கள். வசந்தம் இதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்தார்.

1942ல் வெளிவந்த இவரது முதல் நாவலான நாகம்மாள் தமிழ் இலக்கியத்தின் முதல் இயல்புவாத நாவலாகும். இந்நாவலுக்கு கு.ப.ராஜகோபாலன் முன்னுரை எழுதினார். க.நா.சு இந்நாவலை பற்றி, “நான் படித்துள்ள வரையில் பூரணப்பொலிவுடன் கலையம்சங்கள் சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஸ்ரீ ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும். கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலிலே அப்படியே உருவம் பெற்றிருக்கிரது. அந்த வாழ்க்கையைப் போலவே ஷண்முகசுந்தரத்தின் நடையும் கொங்குநாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது. ஒரு சிறு நாவல் இது. கதையென்று சொல்லும்படியாகப் பெரிதாக ஒன்றுமில்லை. உள்ள வரையில் வெகுமிடுக்காக, நேராக நடக்கிறது. இந்த நாவலிலே வந்து நடமாடுகிற உயிருள்ள பாத்திரங்களும், அவர்கள் பேசுகிற உயிருள்ள தமிழும் தான் முக்கியம். இந்த இரண்டிலும் ஷண்முகசுந்தரத்தின் அளவு தமிழ் நாவலில் வெற்றி கண்டவர்கள் வேறு யாருமில்லை என்பது என் அபிப்பிராயம்” என்கிறார்.

இவர் மொத்தம் 18 நாவல்கள் எழுதியுள்ளார். “சட்டிசுட்டது” இவரது சிறந்த நாவல்களில் மற்றொன்று. தமிழில் வங்க இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க புதின ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற சரத் சந்திரரின் புதினம் தொடராக வெளிவந்தது. பதேர் பாஞ்சாலி இவரது மொழிப்பெயர்ப்பில்தான் தமிழுக்கு வந்தது.

இவர் எழுதிய “ரோஜா ராணி” எனும் சிறுவர் நூல் 1968 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒன்பது சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் அது.

மறைவு

இவர் தன் அறுபதாவது வயதில் 1977 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

நாவல்கள்

1. நாகம்மாள் (1942)

2. பூவும் பிஞ்சும் (1944)

3. பனித்துளி (1945)

4. அறுவடை (1960)

5. இதயதாகம் (1961)

6. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் (1963)

7. அழியாக்கோலம் (1965)

8. சட்டிசுட்டது (1965)

9. மாலினி (1965)

10. காணாச்சுனை (1965)

11. மாயத்தாகம் (1966)

12. அதுவா இதுவா (1966)

13. ஆசையும் நேசமும் (1967)

14. தனிவழி (1967)

15. மனநிழல் (1967)

16. உதயதாரகை (1969)

17. மூன்று அழைப்பு (1969)

18. வரவேற்பு (1969)

சிறுகதைகள்

1. நந்தா விளக்கு (சிறுகதைத் தொகுப்பு)

2. மனமயக்கம் (சிறுகதைத் தொகுப்பு)

நாடகங்கள்

1. புதுப்புனல் (நாடகத் தொகுப்பு)

சிறார் நூல்கள்

1. ரோஜா ராணி (தொகுப்பு - 1968)

மொழிபெயர்ப்புகள்

வங்கம்

1. பதேர்பாஞ்சாலி – (மூலம்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய)

2. கவி

3. சந்திரநாத் - (மூலம்: சரத் சந்திரர்)

4. பாடகி

5. அபலையின் கண்ணீர்

6. தூய உள்ளம்

7. இந்திய மொழிக் கதைகள் (1964)

இவரை பற்றி வெளிவந்துள்ள பிற நூல்கள்

ஆர்.சண்முகசுந்தரம் பற்றி வந்துள்ள முக்கிய நூல்கள் வருமாறு:

• கொங்கு மணம் கமழும் நாவல்கள் - டி.சி.ராமசாமி

• ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - பெருமாள்முருகன்

• இலக்கியச் சிற்பிகள் வரிசை : ஆர்.சண்முகசுந்தரம் - சிற்பி பாலசுப்பிரமணியன்

இவரை பற்றி வெளிவந்துள்ள கட்டுரைகள்:

• தமிழ்நாவல் 50 - (தி.க..சிவசங்கரன் நாகம்மாள் என்னும் தலைப்பில் கட்டுரை )பத்தினிக்கோட்டப்பதிப்பகம்

• தமிழ்நாவல்கள் ஒரு மதிப்பீடு (சண்முகசுந்தரத்தின் நாவல்கள் - தா.வே.வீராசாமி)என்.சி.பி.எச்.

• ஆர்.சண்முகசுந்தரம் படைப்புகள் குறித்து 'ஆர்.ஷண்முகசுந்தரத்தின் கிராமங்கள்' என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

• தமிழியல் (சண்முகசுந்தரத்தின் நாவல்களில் சமூக மாற்றம்,தா.வே.வீராசாமி)

• பெண்ணியம் (நாகம்மாள் என்னும் தலைப்பில் ஜ.பிரேமலதா எழுதிய கட்டுரை) கலைஞன் பதிப்பகம்

இவர் நூல்களில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள்:

1. ஆர்.சண்முகசுந்தரத்தின் மொழிநடை -இ.முத்தையா - மதுரைப்பல்கலைக்கழகம்

2. ஆர்.சண்முகசுந்தரத்தின் நாவல்கள் ஓர்ஆய்வு -மு.ஜான்சிராணி - சென்னைப்பல்கலைக்கழகம்.

3. ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை -பெருமாள்மருகன்-சென்னைப்பல்கலைக்கழகம்.

4. கொங்கு வட்டார நாவல்கள் -ப.வே.பாலசுப்ரமணியன்-சென்னைப்பல்கலைக்கழகம்.

5. ஆர்.சண்முகசுந்தரத்தின் புதினங்களில் மகளிர் நிலை- ஒரு பெண்ணிய நோக்கு -ஜ.பிரேமலதா-அன்னை தெரசாபல்கலைக்கழகம்