ஆதலையூர் சூரியகுமார்
ஆதலையூர் சூரியகுமார் கவிஞர், நாவல், சிறுகதை படைப்பாளர், பத்திரிக்கையாளர், சுயமுன்னேற்ற பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், ஆய்வாளர், பள்ளி ஆசிரியர். தன்னுடைய இலக்கியப் படைப்புகளுக்காகக் கல்கி, குமுதம், ஆனந்த விகடன், தினமலர், தினமணி உள்ளிட்ட இதழ்களில் பல பரிசுகளைப் பெற்றவர். இவரது ஆசிரியர் பணியைப் பாராட்டி, தமிழக அரசு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளராக உள்ளார்.
பிறப்பு, கல்வி
வரலாறில் இளங்கலை, முதுகலை, தமிழில் முதுகலை, கல்வியியலில் முதுகலை பட்டங்களையும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். இவரது வழிகாட்டுதல்படி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணியில் பணி புரிகிறார்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். ஆசிரியர் பணியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டம் தென்குவளைவேலி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அசிரியராக உள்ளார்.
தனிவாழ்க்கை
ஆதலையூர் சூரியகுமாரின் மனைவி பெயர் ரேணுகா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இவரும் எழுத்தாளர். ‘இனி ஒரு கல்வி செய்வோம்’, ‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ ஆகிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
பொது வாழ்க்கை
இவர், மாணவர்களுக்குக் களப்பயிற்சிகள் அளிப்பதில் திறமையானவர். டெங்கு காய்ச்சல் பலரைப் பலி வாங்கியபோது மேலூரில் மட்டும் டெங்கு பரவ காரணம் என்ன? என்று மாணவர்களோடு களத்தில் இறங்கி காரணங்களைக் கண்டுபிடித்து ஆட்சியருக்கு அறிக்கை அளித்து பாராட்டு பெற்றார்.
எட்டாம் வகுப்பு மாணவர்களைக்கொண்டு சிட்ரிக் அமிலத்தையும் சமையல் சோடாவையும் கலந்து எரிபொருளாக்கி 12 அடி உயரத்திற்கு ராக்கெட்டைப் பறக்க விட்டார். இவர் மதுரை மாவட்டம், மேலூர் அரசுப் பள்ளியில் பணியாற்றியபோது பள்ளி மாணவிகளுக்குப் பகுதிநேரமாகத் தொழிற்பயிற்சி அளித்து ‘மாணாக்கர் பொருளாதார சுயசார்பு’ அடைய வழிவகைசெய்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஆசிரியர் பணியிலும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி அவர்களை உயர்த்தும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் தன்னுடைய உள்ளார்ந்த இலக்கிய விருப்பத்தால் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் திருக்குறளை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும்’ என்று 2016 இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. பள்ளிக்கல்வித் துறை 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வயது, வகுப்பைக் கணக்கீடு செய்து வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் (இன்பத்துப்பால் தவிர்த்து) வீதம் பயிற்றுவிக்குமாறு அனைத்துப் பள்ளிகளிலும் திருக்குறள் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு ஏழு சிறப்புக் கையேடுகளை ஆதலையூர் சூரியகுமார் தயாரித்தார். அவை ‘திருக்குறள் நன்னெறி நூல்கள்’ (7 தொகுதிகள்) என்ற தலைப்பில் வெளிவந்தன. இந்தத் தொகுப்பு நூல்கள் 2017இல் உயர்நீதிமன்றத்தின் பாராட்டினைப் பெற்றன. இந்தத் தொகுப்பு நூலுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திருக்குறள் விழிப்புணர்வு விருது (2017) வழங்கியது.
இவர் எழுதிய இரண்டாவது நாவலான ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நாவல்தான் இவருக்கு இலக்கிய உலகில் சிறந்த இடத்தைப் பெற்றுத்தந்தது. மன்னன் கரிகாலன் ஒரு மன்னனாக மட்டுமில்லாமல் மக்கள் தலைவனாக வாழ்ந்திருக்கிறார். கல்லணையைக் கட்டியது மட்டுமல்லாமல் பல கால்வாய்களையும் வெட்டி, காவிரி டெல்டாவில் விவசாயத்தைக் கட்டமைத்தவர் கரிகாலன். காவிரிக்கரையில் நாகரீகத்தைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்தவரும் அவர்தான். அவரது வாழ்க்கை வரலாற்றில் பல அதிசயக்கத்தக்க சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. அவற்றை எல்லாம் தொகுத்துத்தான் இந்தக் ‘கரிகாலன் சபதம்’ எனும் வரலாற்று நூலை இவர் இரண்டாண்டு உழைப்பில் கரிகாலளைப் பற்றி ஆய்வுகள் செய்து, எழுதி இருக்கிறார்.
இலக்கிய இடம்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய ‘பட்டினப்பாலை’ என்ற சங்க இலக்கிய நூலினை அடிப்படையாகக் கொண்டு கரிகாலனின் வரலாற்றை மையப்படுத்திக் ‘கரிகாலன் சபதம்’ என்ற 590 பக்க நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல் ஒருபுறம் வரலாற்று நாவலாகவும் மறுபுறம் சரித்திர நாவலாகவும் விரிவுகொண்டுள்ளது. இவரின் ஒவ்வொரு படைப்பிலும் வரலாற்றின் நிழல் படிந்தே உள்ளது. வரலாற்றைச் சில புள்ளிகளாக வைத்து, அதனைச் சுற்றிப் புனைவினை வளைத்து, இழுத்து கோலமாக்குகிறார். அதனால், இவரின் படைப்புகளில் நம்பகத் தன்மை மிகுகிறது. நேரடியான கதைகூறும் உத்தியால் வாசகரை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.
சிறப்புகள்
- உலகின் முதல் நீண்ட நாவலான எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவலுக்குத்தான் இசை வௌியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ என்ற நாவலுக்கும் இசை வெளியிடப்பட்டது.
- ‘கரிகாலன் சபதம்’ நாவலைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. அதற்கு இவர் திரைகதையும் எழுதியுள்ளார். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
- இவர் எழுதிய ‘காற்றில் அலையும் செய்திகள்’ என்ற கவிதை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
- தி இந்து தமிழ், தினமலர், தினகரன் ஆகிய நாளிதழ்களில் அறிவியல் தொடர் எழுதியுள்ளார்.
- செனட் குழுவில் மூன்று விதமான உறுப்பினர்கள் இருப்பார்கள். மூன்றாவது வகை உறுப்பினர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் நாமினேட்டட் மெம்பர்ஸ். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பு வகிக்கும் மேதகு ஆளுநர் தன்னுடைய பிரதிநிதியாகச் சில உறுப்பினர்களை நியமிப்பார். கல்வி, கலை, இலக்கியம், எழுத்து, மாணவர் மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களைத் தன்னுடைய பிரதிநிதியாக ஆளுநர் நியமிக்கிறார். இவர்கள் நாமினேட்டட் மெம்மபர்ஸ். ஆளுநரின் நேரடி நியமனம் என்பதால், இந்த உறுப்பினர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில்தான் இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டார். இவர் ஏப்ரல் 09, 2019 முதல் ஏப்ரல் 08, 2022 வரை அந்தப் பதவியில் இருப்பார். பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்புக்கு ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.
பரிசுகள்
- ஆனந்த விகடன் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000 /- (1995)
- தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 15,000/- (2011)
- தினமணி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000/- (2019)
- வானதி மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000/- (2017)
- குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 3000/- (2018)
- இலக்கிய பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டு முறை மூன்றாம் பரிசு (2018, 2019)
- கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு
- தினமணி நடத்திய சிறுகதைப் போட்டிகளில் 5 முறை பரிசு
- குமுதம் நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (1997)
விருதுகள்
- திருப்பூர் ரோட்டரி கிளப் வழங்கிய சிறந்த தொழிற்கல்வி விருது - 2007
- சென்னை பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் வழங்கிய சிறந்த தமிழ் ஆசிரியருக்கான விருது - 2007
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த கவிஞருக்கான விருது - 2008
- தினமலர் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருது - 2014
- தமிழக அரசு வழங்கிய கனவு ஆசிரியர் விருது - 2017
- சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திருக்குறள் விழிப்புணர்வு விருது - 2017
- புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கிய புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017
- சிறந்த ஆசிரியருக்கான மதுரை மாவட்ட ஆட்சியர் விருது - 2017
- தி இந்து தமிழ் நாளிதழ் வழங்கிய அன்பாசிரியர் விருது - 2020
நூல்கள்
நாவல்கள்
- நீர் தேடும் நெஞ்சங்கள் - 2019
- பாராசூட் பறவைகள் - 2020
- கரிகாலன் சபதம் - 2020
- வானம் தொடங்கும் இடம் - 2020
சிறுகதைத் தொகுப்புகள்
- பச்சை விளக்கு எரிகிறது - 2019
- கல் தேசம் - 2010
கவிதைத் தொகுப்புகள்
- தொடர்பு எல்லைக்கு வெளியே - 2008 (திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது)
- காற்றில் அலையும் செய்திகள் - 2019
தன்னம்பிக்கை நூல்கள்
- மலருங்கள் மாணவர்களே - 2007
- வரலாம் வா, நண்பா!
பயண நூல்கள்
- குகைக்குள் தெரிந்த வெளிச்சம் - 2006
- தூர தேசத்தில் துருவப் பறவைகள் - 2007
அறிவியல் நூல்
- செல்பி வித் சயின்ஸ் -2019 (இலக்கிய பீடம் பரிசு பெற்றது)
தல வரலாறு
- அருள்மிகு பீமேஸ்வரர் சுவாமி - 2011
பிறவகை நூல்கள்
- ஆடுவோம்! பாடுவோம்! படிப்போம்! - 2012
- திருக்குறள் நன்னெறி நூல்கள் (7 தொகுதிகள்) - 2017
- ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழிகாட்டி நூல்கள் (7 தொகுதிகள்) -2013
- கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான வழிகாட்டி நூல் -2014
- தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள்
உசாத்துணை
- ‘கரிகாலன் சபதம்’ சரித்திர நாவல் - இசை வெளியீடு - https://www.youtube.com/watch?v=Iey-aLPsYvM
- https://www.youtube.com/watch?v=fLvwarBPhoQ&list=PLZuhtqa5If9YUTZlDD7GTXLXAES5gwlIG
- http://dvisit.in/suriyakumar.html
- https://kandeepam.wordpress.com/2017/07/23/4-21-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/
- https://m.dinamalar.com/detail.php?id=2868137
- https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/dec/13/a-book-about-karikalan-3522487.html
- https://www.hindutamil.in/news/tamilnadu/594738--1.html
- https://www.dinamalar.com/news_detail.asp?id=2621685
- https://www.periyaruniversity.ac.in/Senate.php
- https://www.hindutamil.in/news/vetrikodi/news/600380-deepavali-live-menu-with-school-students-organized-by-teachers-2.html
- http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4070&id1=130&issue=20190601
- https://www.hindutamil.in/author/211-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.