அ. முத்துலிங்கம்

From Tamil Wiki
அ.முத்துலிங்கம் நன்றி: அந்திமழை இதழ்

அ. முத்துலிங்கம் (ஜூலை 19,1937) முதன்மையான நவீன தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள் , நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், மிளிரும் அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டு வந்த கதை சொல்லி. தமிழுக்கு அரும்பணியாற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் கனடா இலக்கியத் தோட்ட அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்திட பெருமுயற்சி மேற்கொண்டார்.

பிறப்பு, கல்வி

அ. முத்துலிங்கம் இலங்கை வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் என்னும் சிற்றூரில் அப்பாத்துரை- ராசம்மா இணையருக்கு 1937 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் பிறந்தார். அ.முத்துலிங்கத்தின் தாயார் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நுணுக்கமாகச் சொன்னதை அவர் பிற சிறார்களுக்குச் சொல்லி இருக்கிறார்.

அ. முத்துலிங்கம் பள்ளிப்படிப்பை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானத்தில் (அறிவியல்) பட்டம் பெற்ற பின் இலங்கையில் பட்டயக் கணக்காளர் தேர்விலும் இங்கிலாந்தில் முகாமைத்துவ பட்டயக்கணக்காளர் தேர்விலும் வெற்றி பெற்றார்.

ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான் , ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தங்கி வேலை பார்த்த அ. முத்துலிங்கம் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத் திட்ட அலுவலகத்தின் உயர் பொறுப்புக்களிலும் பணியாற்றியவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடா நாட்டில் ஒண்ட்ரியோ மாநிலத்தில் மார்கம் நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

தனிவாழ்க்கை

அ.முத்துலிங்கம் மனைவி கமலரஞ்சனியுடன் நன்றி விகடன்

அ. முத்துலிங்கத்தின் மனைவியின் பெயர் கமலரஞ்சனி. மகன் சஞ்சயன், மகள் வைதேகி.

இலக்கியவாழ்க்கை

அக்கா சிறுகதைத் தொகுப்பில் அ.முத்துலிங்கம்

அ. முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை ’கடைசி கைங்கரியம்சுதந்திரன் இதழில் 1958 ஆம் ஆண்டு வெளியானது. பேராசிரியர் கைலாசபதி புதுமைப்பித்தன் முதலான நவீன தமிழ் எழுத்தாளர்களை அ. முத்துலிங்கத்துகு அறிமுகம் செய்தார். பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி -க,கைலாசபதி இருவருக்குமிடையே நடந்த விவாதங்களில் பங்குபெற்று எழுதுவதற்கான ஊக்கத்தைப் பெற்றார். 1964 இல், பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் அணிந்த்துரையுடன் “அக்கா” என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அஃதில் தினகரன் (இலங்கை) இதழில் முதல் பரிசைப்பெற்ற அக்கா சிறுகதை இடம்பெற்றிருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் 1995 திகடசக்கரம் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு படைப்புகளைத் தொடர்கிறார். அதன் பின் பல சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைகளும் வெளியாகின்றன.

உலகத்தில் எங்கேயிருந்தும் தமிழ் மொழியை வளர்க்கும் மேலான சிந்தனை கொண்ட பெருந்தகைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்கிட கனடாவில் 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் என்னும் அமைப்பில் முக்கியப்பங்காற்றுகிறார்.

அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்திட மருத்துவர் விஜய் ஜானகிராமன் உள்ளிட்டோருடன் இணைந்து பெருமுயற்சி செய்ததன் பயனாக உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் இருந்து 2018 ஆம் ஆண்டு போதுமான நிதி திரட்டப்பட்டது. இந்த அனுபவங்களை ’காலைத் தொடுவேன்’ என்ற தலைப்பில் அ.முத்துலிங்கம் கட்டுரையாக எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

தன்மைகள்

அ.முத்துலிங்கம் ஒரு படைப்பு வாசகரைச் சென்றடைய வேண்டும் என்பதை முக்கியமாகக் கொண்டு சுவாரசியமாக கதையை உருவாக்குபவர். தமிழைப் பொருத்தவரை அவர் கி.ராஜநாராயணனுக்கும் அசோகமித்திரனுக்கும் தொடர்ச்சி.

அ.முத்துலிங்கத்தின் எழுத்து பிரதேச எல்லைகளைக் கடந்து நிற்கும் ஒன்று. உலகளாவிய பார்வையும் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டது. புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருக்கும் பண்பாடுகளுடன் கொள்ளும் அணுக்கமும் விலக்கமும் அதன் சிக்கல்கள் அவர் கதைகளில் உள்ளன. அதை எளிய வேடிக்கையாக ஆக்குவதில்லை. தீர்ப்புகளை சொல்வதில்லை. அனைத்துக்கும் மேலாக தன் பண்பாட்டுப்புலம் பற்றிய பெருமிதமும் அவரிடம் இல்லைநமக்கு இதுவரை பழக்கப்பட்ட நிலங்களும், அதன் மனிதர்களும், கலாச்சாரமும் நமக்குள் கட்டமைத்திருக்கும் வாழ்க்கை சார்ந்த பல அடிப்படைகளை உலுக்கும் வகையிலான பல கலாச்சார அம்சங்களின் பிண்ணனியை முத்துலிங்கத்தின் கதைகள் முன்வைக்கின்றன.

அறிமுகமற்ற சூழலில் சந்திக்க நேரும் அனுபவங்களையும், கலாச்சார அம்சங்களையும் எதிர்கொள்ளும் மனம் எப்போதும் அவற்றை தனது சொந்த கலாச்சார பிண்ணனியைக் கொண்டே தரப்படுத்த முயலும். அவ்வாறான தரப்படுத்தலின்போது மேலை கருத்தாக்கங்கள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் எப்போதும் ஒரு தகுதிக் குறைவையே உத்தேசிக்கத் தோன்றும். முத்துலிங்கம் அவ்வாறான பொதுவான உத்தேசங்களுக்கு சற்றும் இடம் தராமல் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுவதோடு நின்றுவிடுகிறார்

தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. புதியதை புதியதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவை.

இவரது படைப்புக்களில் இயல்பாகவே அமைந்திட்ட எள்ளலும் அங்கதச் சுவையும் சிறப்பு அம்சமாகும். எழுத்தாளர் ஜெயமோகன் புன்னகைக்கும் கதை சொல்லி என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார்.

இந்திய, அயல்நாட்டு எழுத்தாளர்களிடமும் பிரபலங்களிட்மும் அவர் எடுத்த நேர்காணல்கள் தமிழுக்கு கிடைத்த கொடைகள்.

அ.முத்துலிங்கத்தின் படைப்புக்களில், சிரமமான உணர்வுகளையும் எளிமையாக மாற்றித்தரும் உவமைகள் சிறப்பு வாய்ந்தவை. அ. முத்துலிங்கம் கட்டுரையையும் புனைவின் சுவாரஸ்யத்தோடு எழுதுகிறவர். இவரது படைப்புக்களில் புராணங்களை நவீன கோணத்துடன் அணுகும் இடங்கள் உள்ளன. செய்திகளைத் தொடுத்துக்கொண்டு போகும்போது, நெருடலோ செயற்கைத்  தன்மையோ  இல்லாமல் மிக இயல்பாக இலக்கியச் செய்திகளும் மேற்கோள்களும் தொடர்ந்து அவற்றினூடே ஒருங்கிணைந்து வரும்.

அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் நேரடியான எளிமையும் ஆழமும் அடர்த்தியும் அபூர்வமாக ஒருங்கே அமைந்தவை.

சிறப்புகள்

வடக்கு வீதி சிறுகதைத் தொகுப்பிற்காக 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு இலக்கிய விருது (சாகித்திய விருது) வழங்கியது. தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதைக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

சொல்வனம் இணைய இதழ் பிப்ரவரி 2017 இல் அ. முத்துலிங்கம் சிறப்பிதழாக வெளிவந்தது.

ஞானம் கலை இலக்கிய இதழ் ஏப்ரல் 2018 இதழை “எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60” என்ற சிறப்பிதழை வெளியிட்டது.

எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60

விமர்சனங்கள்

சொந்தமாக நாடு இல்லாத மொழி அழிந்துவிடும் கருத்தை பலமுறை கூறியவர் அ. முத்துலிங்கம். வட்டாரச் சொற்களை அதிகம் பயன்படுத்துவது வாசகர்களுக்கு புரிதலில் குறைவை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்.

ஒருகதை சொல்லியாகக் கதை சொல்லும் பொழுது இழக்கப்படும் புனைவுச் சிக்கல்களை பாத்திரங்களின் மன ஓட்டங்களை சாமர்த்த்தால் சிரமப்பட்டேனும் சொல்லிவிட முடியும் என்கிறார்.

அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் ஈழப்போரும் துயரங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசப்படவில்லை என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்படுகிற பொழுது, ”எந்த எல்லை மட்டும் போகவேண்டுமோ அந்த எல்லை மட்டும் போயிருக்கிறேன்.ஓர் எழுத்தாளரின் படைப்பை அவர் எழுதியதை வைத்து மதிப்பிட வேண்டும். எழுதாதை வைத்து அல்ல” என்பதைத் தன் கருத்தாக முன்வைத்துள்ளார்.

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • அக்கா-விஜயலட்சுமி புத்தகசாலை (1964)
  • திகடசக்கரம்-காந்தளகம் (1995)
  • வம்சவிருத்தி-மித்ர வெளியிடு (1996)
  • வடக்கு வீதி-மணிமேகலைப் பிரசுரம் (1998)
  • மகாராஜாவின் ரயில் வண்டி-காலச்சுவடு பதிப்பகம் (2001)
  • அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2003 வரை எழுதியவை)-தமிழினி பதிப்பகம் (2003)
  • அமெரிக்கக்காரி-காலச்சுவடு பதிப்பகம் (2009)
  • குதிரைக்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2013)
  • கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
  • பிள்ளை கடத்தல்காரன்-காலச்சுவடு பதிப்பகம் (2015)
  • ஆட்டுப்பால் புட்டு-நற்றினை பதிப்பகம் (2016)
  • அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகங்கள்- நற்றினை பதிப்பகம் (2016)
ஒலிப்புத்தகம்
  • அ.முத்துலிங்கம் சிறுகதைகள்- ஒலிப்புத்தகம்-கிழக்கு பதிபகம் (2008)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan -Indian Writing-2008
  • After Yesterday – Translated from Tamil – Short stories- translation by Padma Narayanan -Ratna Books; 1st edition– 2018
கட்டுரைகள்
  • அங்கே இப்ப என்ன நேரம்?-தமிழினி பதிப்பகம் (2004)
  • பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
  • கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு) -உயிர்மை பதிப்பகம் (2006)
  • வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
  • அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
  • ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
  • தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள்-கயல் கவின் பதிப்பகம் (2013)
  • தோற்றவர் வரலாறு- நற்றினை பதிப்பகம் (2016)
  • அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு தொகுதிகள்- நற்றினை பதிப்பகம் (2018)
நாவல்கள்
  • உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
  • கடவுள் தொடங்கிய இடம்-விகடன் பிரசுரம் (2012)

பரிசுகளும் விருதுகளும்

படைப்பு/சாதனை பரிசு/ விருதின் பெயர் வழங்கியவர்கள் ஆண்டு
பக்குவம்-சிறுகதை தினகரன் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு

தினகரன் நாளிதழ் , இலங்கை 1961
அனுலா கல்கி சிறுகதைப் போட்டி

இரண்டாம் பரிசு

கல்கி வார இதழ்

சென்னை,இந்தியா

1959-1961
திகடசக்கரம்-

சிறுகதைத் தொகுப்பு

லில்லி தேவசிகாமணி நினைவு விருது லில்லி தேவசிகாமணி நினைவு அறக்கட்டளை

கோயம்புத்தூர் ,இந்தியா

1995
வம்சவிருத்தி-

சிறுகதைத் தொகுப்பு

சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு தமிழ்நாடு அரசு

இந்தியா

1996
வம்சவிருத்தி-

சிறுகதைத் தொகுப்பு

சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு ஸ்டேட் பேங்க் ஆஃப்

இந்தியா

1996
- ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசு ஜோதி விநாயகம் நினைவுச்சிறுகதைத் திட்டம் 1997
வடக்கு வீதி-

சிறுகதைத் தொகுப்பு

அரச இலக்கிய விருது (சாகித்திய விருது) இலங்கை அரசு 1999
இலக்கிய பங்களிப்பிற்காக நாற்பது ஆண்டு தமிழ் இலக்கிய சாதனை விருது தமிழர் தகவல்

மாத இதழ், கனடா

2006
அமெரிக்க உளவாளி-

கட்டுரைத்தொகுப்பு

திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்,இந்தியா 2012
குதிரைக்காரன்-

சிறுகதைத் தொகுப்பு

சிறந்த சிறுகதைத் தொகுப்பிறகான      “விகடன் விருது” விகடன் குழுமம்

சென்னை, இந்தியா

2012
அமெரிக்கக்காரி புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழ்ப்பேராய

விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சென்னை, இந்தியா 2012
இலக்கிய பங்களிப்பிற்காக இலக்கிய விருது மார்க்கம் நகர சபை

ஒன்ராரியோ மாநிலம் , கனடா

2014

உசாத்துணைகள்

அ. முத்துலிங்கத்தின் வலைத்தள்ம் www.amuttu.net

சொல்வனம் இணைய இதழ்: அ. முத்துலிங்கம் சிறப்பிதழ் https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/issue-166/

எழுத்தாளர் ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து

https://www.jeyamohan.in/134/

ஈழ இணைய இலக்கிய ஆவணக்களஞ்சியம் https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85.