அ. முத்துலிங்கம்

From Tamil Wiki

அ. முத்துலிங்கம் (ஜூலை 19,1939) முதன்மையான் நவீன தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள் , நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ.முத்துலிங்கத்தின் படைப்புக்கள் வடிவ ஒழுங்கும், கலையழகும், மிளிரும் அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டு வந்த கதை சொல்லி. தமிழுக்கு அரும்பணியாற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் கனடா இலக்கியத் தோட்ட அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்திட பெருமுயற்சி மேற்கொண்டார்.

பிறப்பு, கல்வி

அ. முத்துலிங்கம் இலங்கை வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் என்னும் சிற்றூரில் அப்பாத்துரை- ராசம்மா இணையருக்கு 1937 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் பிறந்தார். அ.முத்துலிங்கத்தின் தாயார் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை நுணுக்கமாகச் சொன்னதை அவர் பிற சிறார்களுக்கு சொல்லி இருக்கிறார்.

 அ.முத்துலிங்கம் பள்ளிப்படிப்பை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானத்தில் (அறிவியல்) பட்டம் பெற்ற பின் இலங்கையில் பட்டயக் கணக்காளர் தேர்விலும் இங்கிலாந்தில் முகாமைத்துவ பட்டயக்கணக்காளர் தேர்விலும் வெற்றி பெற்றார். 

ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான் , ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தங்கி வேலை பார்த்த அ. முத்துலிங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத் திட்ட அலுவலகத்தின் உயர் பொறுப்புக்களில் பணியாற்றியவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடா நாட்டில் ஒண்ட்ரியோ மாநிலத்தில் மார்கம் நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

தனிவாழ்க்கை

அ. முத்துலிங்கத்தின் மனைவியின் பெயர் கமலரஞ்சனி. மகன் சஞ்சயன், மகள் வைதேகி.

இலக்கியவாழ்க்கை

அ. முத்துலிங்கத்தின் கடைசி கைங்கரியம் என்ற தலைப்பிலான முதல் சிறுகதை சுதந்திரன் இதழில் 1958 ஆம் ஆண்டு வெளியானது. 1964 இல், பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் அணிந்த்துரையுடன் “அக்கா” என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அஃதில் தினகரன் (இலங்கை) இதழில் முதல் பரிசைப்பெற்ற அக்கா சிறுகதை இடம்பெற்றிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 1995 திகடசக்கரம் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு படைப்புகளைத் தொடர்கிறார்.அதன் பின் பல சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைகளும் வெளியாகின்றன. உலகத்தில் எங்கேயிருந்தும் தமிழ் மொழியை வளர்க்கும் மேலான சிந்தனை கொண்ட பெருந்தகைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது வழங்கிட கனடாவில் 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் என்னும் அமைப்பில் முக்கியப்பங்காற்றுகிறார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்திட 2015 ஆம் ஆண்டு முதல் பெருமுயற்சி செய்தார்.

இலக்கிய இடம்

அ.முத்துலிங்கம் ஒரு படைப்பு வாசகரைச் சென்றடைய வேண்டும் என்பதை முக்கியமாகக் கொண்டு சுவாரசியமாக கதையை உருவாக்குபவர். தமிழைப் பொருத்தவரை அவர் கி.ராஜநாராயணனுக்கும் அசோகமித்திரனுக்கும் தொடர்ச்சி.

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்

• அக்கா (1964) • திகடசக்கரம் (1995) • வம்சவிருத்தி (1996) • வடக்கு வீதி (1998) • மகாராஜாவின் ரயில் வண்டி (2001) • அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை) • ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008) • அமெரிக்கக்காரி (2009) • குதிரைக்காரன் – (2012) • கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன் • பிள்ளை கடத்தல்காரன் (2015) • ஆட்டுப்பால் புட்டு (2016) • அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

• Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com) • After Yesterday – Translated from Tamil – Short stories – 2017

கட்டுரைகள்

• அங்கே இப்ப என்ன நேரம்?-தமிழினி பதிப்பகம்-(2004) • பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007) • கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006) • வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006) • அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010) • ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011) • தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013) • தோற்றவர் வரலாறு (2016) • அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது

நாவல்கள்

•உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)

•கடவுள் தொடங்கிய இடம்-விகடன் பிரசுரம் – (2012)

பரிசுகளும் விருதுகளும்

படைப்பு/சாதனை பரிசு/ விருதின் பெயர் வழங்கியவர்கள் ஆண்டு
பக்குவம்-சிறுகதை தினகரன் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு

தினகரன் நாளிதழ் , இலங்கை 1961
அனுலா கல்கி சிறுகதைப் போட்டி

இரண்டாம் பரிசு

கல்கி வார இதழ்

சென்னை,இந்தியா

????
திகடசக்கரம்-

சிறுகதைத் தொகுப்பு

லில்லி தேவசிகாமணி நினைவு விருது லில்லி தேவசிகாமணி நினைவு அறக்கட்டளை

கோயம்புத்தூர் ,இந்தியா

1995
வம்சவிருத்தி-

சிறுகதைத் தொகுப்பு

சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு தமிழ்நாடு அரசு

இந்தியா

1996
வம்சவிருத்தி-

சிறுகதைத் தொகுப்பு

சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதல் பரிசு ஸ்டேட் பேங்க் ஆஃப்

இந்தியா,

1996
??? ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசு ஜோதி விநாயகம் நினைவுச்சிறுகதைத் திட்டம் 1997
வடக்கு வீதி-

சிறுகதைத் தொகுப்பு-

அரச இலக்கிய விருது இலங்கை அரசு 1999
இலக்கிய பங்களிப்பிற்காக நாற்பது ஆண்டு தமிழ் இலக்கிய சாதனை விருது தமிழர் தகவல்

மாத இதழ், கனடா

2006
அமெரிக்க உளவாளி-

கட்டுரைத்தொகுப்பு

திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது திருப்பூர்த் தமிழ்ச்சங்கம்,இந்தியா 2012
குதிரைக்காரன்-

சிறுகதைத் தொகுப்பு-

சிறந்த சிறுகதைத் தொகுப்பிறகான      “விகடன் விருது” விகடன் குழுமம்

சென்னை,இந்தியா

2012
அமெரிக்கக்காரி புலம்பெயர் தமிழர்களுக்கான தமிழ்ப்பேராய

விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சென்னை,இந்தியா 2012
இலக்கிய பங்களிப்பிற்காக இலக்கிய விருது மார்க்கம் நகர சபை

ஒன்ராரியோ மாநிலம் , கனடா

2014