அறம்

From Tamil Wiki

அறம் : தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது. அறம் என்னும் சொல் பொதுவாக வாழ்க்கைநெறி, நீதி, விழுமியம், ஒழுக்கம், கொடை முதலிய நற்செயல்கள் ஆகியவற்றையும் வாழ்க்கையை இயக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்ச ஒழுங்கையும் சுட்டுவதாக தமிழில் கையாளப்படுகிறது. அறம்பாடுதல் என்றால் அறத்தை சான்றுக்கு அழைத்து சாபம் போடுதலாக பழங்காலத்தில் ஒரு மரபாக இருதது.

வேர்ச்சொல்

எஸ். வையாபுரிப் பிள்ளையின் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி அறம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாக அறு என்பதை அளிக்கிறது. அறு என்னும் சொல்லில் இருந்து அறுதல் , அறுதி போன்ற சொற்கள் உருவாகி வந்தன. மலையாள மொழியில் அற்றம் என்னும் சொல் இறுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பளியர், குறும்பர் முதலிய மலைக்குடிகளிடமும் அற்றம் என்னும் சொல் அறுதி என்னும் பொருளிலும் அறுதியாகச் சொல்லப்படுவது என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. அற்றம் குறுகி அறம் என ஆகியிருக்கலாம்.

நிகண்டுப் பொருட்கள்

அறம் என்னும் சொல்லுக்கு பிங்கல நிகண்டு புண்ணியம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையை பொருளாக அளிக்கிறது. இது சமணசமயம் சார்ந்த சொல். புண்ணியம் என்பதற்கு சமண தத்துவத்தில் ஒருவர் இப்பிறவியில் செய்யும் நற்செயல்களின் பயன் அடுத்த பிறவியில் தொடரும் என்பதை சுட்டும் சொல். இப்பிறவியில் புண்ணியம் செய்பவர் அடுத்த பிறவியில் அதன் பயனை பெறுவார். இரண்டுமே புண்ணியம் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும்

இலக்கியச் சுட்டுகள்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்.. தொல்காப்பியம் களவியல்

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் - சிலப்பதிகாரம்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்- திருக்குறள்

அறத்தாறிது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை- திருக்குறள்

அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை திருவாசகம்)

உசாத்துணை

திருவாசகம் https://www.tamilvu.org/slet/l4180/l4180son.jsp?subid=2310