under review

அறப்பளீசுர சதகம்

From Tamil Wiki
Revision as of 07:22, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
goodreads.com

அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மேல் பாடப்பெற்ற, 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் வகையைச் சார்ந்தது. இதனை இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர். இந்நூலின் காலம் 18-ம் நூற்றாண்டு.

ஆசிரியர்

அறப்பளீசுர சதகத்தை இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர். இவர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார்.

நூல் அமைப்பு

அறப்பளீஸ்வரர் ஆலயம், கொல்லிமலை vasthushasthram.com

அறப்பளீசுர சதகம் 100 பாடல்களைக் கொண்ட ஒரு நீதி இலக்கியமாகும். ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும். சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும். ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும். நல்ல அரசும், அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும். உடன் பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழ வேண்டும். பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்வழியில் அமைய வேண்டும். நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்கள் பாடல்களாக இந்நூலில் காணப்படுகின்றன. இந்நூலில் சில கருத்துக்கள் தற்போது பொருந்துவனவாகவோ ஏற்கக் கூடியனவாகவோ இல்லை. இருப்பினும் நீதி என்ற நிலையில் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களையும் இச்சதகத்தில் காணமுடிகிறது.

பாடல் நடை

நல்லோர்

செய்ந்நன்றி மறவாத பேர்களு மொருவர்செய்
தீமையை மறந்த பேருந்
திரவியந் தரவரினு மொருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற் கொடுத்த பேருங்
காசியி லொருவர்செய் தருமங் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும்
பொய்யென்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகழாத நிலைகொள் பேரும்
புவிமீது தலைபோகு மென்னினுங் கனவிலும்
பொய்மையுரை யாத பேரும்
ஐயவிங் கிவரெலாஞ் சற்புருடரென் றுலகி
லகமகிழ்வ ரருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே (16)

பொருள்:


செய்த தீமையை மறந்தவர்களும், பொருளைக் கொடுத்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச் செலுத்தாதவர்களும், கையிலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெடுதலுறாமல் காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்கில் ஒருவர் கொடுத்தாலும், அழிவழக்குக் கூறாத நிலையுடையவரும், உலகத்திலே தலையே போகும் என்றாலும் கனவிலேயேயும் பொய் கூறாதவரும், இவ்வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகிய நன்மக்கள் என்று உலக மாந்தர் மனம் களிப்பார்கள்.

அடங்காதவற்றை அடக்கும் வழி

கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று
கோர்த்துவச விர்த்தி கொள்வர்
குவலயந் தனின்மதக் களிதனை யங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வர்
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச விர்த்தி கொள்வார்
மிக்கபெரி யோர்களும் கோபத்தை யறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்
அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்
தையனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே (42)

பொருள்:


திரு அடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரைனைய திருவடிகளை உடைய தலைவனே, அருமை தேவனே, கொடிய தன்மையுடைய பொலிகாளையை அதன் இரண்டு மூக்கிலும் ஒரு கயிற்றைக் கோர்த்து வசப்படுத்துவர். உலகத்தில் மத யானையை அங்குசம் கொண்டு வசப்படுத்துவர். உலகில் நஞ்சுடைய நாகத்தை மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர். தாவும் குதிரையினை நீண்ட கடிவாளத்தைக் கொண்டு நடைபழக்கி வசப்படுத்துவர். நஞ்சுடைய தீயவரை சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர். பெரிய சான்றோர்களும் தம் கோபத்தை அறிவின் திறனால் நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து மனதை வசப்படுத்துவர்.

உசாத்துணை


✅Finalised Page