under review

அருண் மகிழ்நன்

From Tamil Wiki
Revision as of 06:37, 27 July 2022 by Madhusaml (talk | contribs) (சிங்கப்பூர் ஆளுமைகள் என்ற வகையில் சேர்க்கப்பட்டது)
அருண் மகிழ்நன்

அருண் மகிழ்நன் (பிறப்பு- 1945) சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாட்டாளர்.அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு பதவிகளும், பொறுப்புகளும் வகித்து, குழுக்களில் பங்காற்றி, கலை, இலக்கியம், பொது விவகாரங்கள்,  ஊடகத் துறை போன்றவற்றில்  நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கி வருகிறார்.  சிங்கப்பூரில் ஊடகங்கள், சமூகப் பிரச்சினைகள்,  கலைகள் பற்றிய நூல்களின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் இருந்துள்ளார்.

பிறப்பு, கல்வி

தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் 1945-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் அருணாசலம். தாயார் நாச்சியம்மை. மகிழ்நன் அருணாச்சலம்  எனும் பெயரை அருண் மகிழ்நன் என மாற்றி வைத்துக்கொண்டார். தமிழகத்தில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஏற்கெனவே சிங்கப்பூரில் குடியேறிவிட்டிருந்த பெற்றோருடன் இணைய 1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். பின்னர்  சிங்கப்பூரில்  ஆங்கில வழியில் இடைநிலை பள்ளியில் படிக்கும் போது தமிழை ஒரு பாடமாக மட்டும் கற்றார். 1967 முதல் 1970 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறையில் அரசாங்க உபகாரச்சம்பளத்துடன் கல்வி கற்றார். ஹானர்சில், முதல் நிலையில் தேர்ச்சி பெற்று  சிங்கப்பூர் திரும்பினார்.

தனி வாழ்க்கை

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மாணவப் பருவத்தில் வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலி/ஒளிபரப்பில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் கல்வி உபகாரச் சம்பளத்திற்கான மூன்று ஆண்டுக் கட்டாயச் சேவைக்காக 'ரேடியோ டெலிவிஷன் சிங்கப்பூர்' (Radio Television Singapore) ஆங்கில மொழி ஒளிபரப்புத் துறையில்  1970-ஆம் ஆண்டு பணியைத் தொடங்கி 1979 வரை பணியாற்றினார்.சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தகவல் தொடர்பு பள்ளியில்(Wee Kim Wee School of Communication and Information) சார்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். கொள்கை ஆய்வுக் கழகத்தின் துணை இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றி, தற்போது சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகராக இருக்கிறார்.

Intercultural Theatre Institute, சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழா ஆகியவற்றின் தலைவராகவும் சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், தேசிய நூலக வாரியம், புத்தக மேம்பாட்டு மன்றம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், இந்திய மரபுடைமை மையம் உட்பட பல்வேறு கலை அமைப்புகளின் குழு உறுப்பினர் அல்லது ஆலோசகராகப் பங்காற்றியுள்ளார்.

இலக்கிய இடம்

பேராசிரியர் டாமி கோ-வுடன் அருண் மகிழ்நன். டாமி கோவின் 80வது பிறந்தநாளின் போது.

மகிழ்நனின் 50 ஆண்டுகால நீண்ட பணி வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் மொழி அல்லது பண்பாட்டுடன் எவ்விதத் தொடர்பும் அற்ற துறைகளிலேயே நீடித்தது. எனினும் அவர் தனது மொழி, கலாசாரம் மற்றும் சமூகத்திமேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்துள்ளார். சமூகத்தில் தான் அடைந்த இடத்தின் காரணமாக, தமிழ் சமூகத்தின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் கொள்கைகளையும் வழிப்படுத்த முடிந்தவராக கருதப்படுகிறார்.சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழாவுக்கு அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர் அருண் மகிழ்நன். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் உருவாக்க ஆலோசனைக் குழுவிலும் பின்னர் தேசிய கலைகள் மன்றத்தில் ஆலோசகர் குழுவிலும் இடம்பெற்று தேசிய கலை, இலக்கிய முயற்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

பங்களிப்புகள்

பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபோது.

1982-ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் முதல் இந்திய கலாசார விழாவை நடத்துவதற்கான முயற்சிக்குத் தலைமை தாங்கினார். அந்த விழாவின் நோக்கமும் தாக்கமும் அதற்கு முன்னர் இல்லாதது. இன்றுவரையில் குறிப்பிட்டுச் சொல்லும் சிறப்பான  கலை விழாவாக அது விளங்குகிறது.2000-ஆம் ஆண்டில், முதல் தமிழ் இணைய அனைத்துலக மாநாட்டை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார். இது தமிழ் இணைய வளர்ச்சியை வழிநடத்தும் உலகளாவிய அமைப்பான உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை (உத்தமம்) உருவாக்க வழிவகுத்தது.

2011-ஆம் ஆண்டில், அவர் உறுப்பினராக இல்லாத சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்திற்கு வழிகாட்டி, முதல் உலக புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உதவினார். சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்குப் பல்வேறு நிலைகளில்  ஆலோசகராக இருந்துள்ளார்.

தமிழ் வளங்களை எண்மமயமாக்க (digitize) வேண்டும் என்னும் பெருநோக்கோடு 2013-ஆம் ஆண்டு தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தைத் (Tamil Digital Heritage) தொடங்கினார்.  சிங்கப்பூரின்  50-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, 2015ஆம் ஆண்டில், சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 1965-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான  தமிழ் இலக்கிய வெளியீடுகளில் பெரும்பான்மை எண்மமயமாக்கப்பட்டு, உலகில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பொதுவில் அணுகக்கூடியதாக்கப்பட்டது. இது சமூக ஆதரவுடனும் அரசாங்கப் பங்களிப்புடனும் இடம்பெற்ற ஓர் முன்னோடித் திட்டம். தொடர்ந்து சிங்கைத் தமிழ் நாடகங்கள், சிங்கைத் தமிழ் இசை, சிங்கைத் தமிழ் நடனம் ஆகியவையும் மின் தொகுப்பாக்கப்பட்டன.

2015-ஆம் ஆண்டு  சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு, கொள்கை ஆய்வியல் கழகம் வெளியிட்ட சிங்கப்பூரை  விவரிக்கும் 50 நூல்களின் அசிரியர் குழுத் தலைவராக இருந்தார்.  ஆட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உணவு, விளையாட்டு, இலக்கியம் எனப் பரந்த அளவிலான தலைப்புகளில் இந்நூல்கள் வெளிவந்தன.

2019-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனியாக நிறுவப்பட்டதன் 200-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்ட, 'ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் தமிழர்' எனும் நூலின் இணை ஆசிரியராகப் பங்களித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டில் தமிழர்களுக்கிடையே தங்கள் பண்பாட்டைப்பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துவதையும் சிங்கப்பூரிலுள்ள மற்ற பண்பாடுகளுடன் பாலம் அமைப்பதையும் இலக்காகக் கொண்டு சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில், இதுவரை கண்டிராத சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்தார். 2022-ல் அத்திட்டம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு தொடங்கப்பட்டது. தற்போது  பல்வேறு அதிகாரப் பொறுப்புகளிலிருந்தும்  ஓய்வுபெற்று, மையத்தின் இயக்குநராக முழு நேரம் செயலாற்றி வருகிறார்.

விருதுகள்

  • சிங்கப்பூர் பொதுத் தொடர்புத் துறைக் கழகத்தின் (Institute of Public Relations) வாழ்நாள் சாதனையாளர் விருது
  • Fellow, Institute of Public Relations, Singapore

நூல்கள்

  • Singapore: Re-Engineering Success, edited by Arun Mahizhnan and Lee Tsao Yuan, 2001
  • Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore, edited by Arun Mahizhnan and Nalina Gopal, 2019
  • Battle for hearts and minds: New media and elections in Singapore, edited by Tan, T. H., Mahizhnan, A., & Ang, P. H., (2016).

உசாத்துணை


✅Finalised Page