being created

அருணந்தி சிவாசாரியார்

From Tamil Wiki
Revision as of 03:15, 14 April 2024 by Tamizhkalai (talk | contribs)

அருணந்தி சிவாசாரியார்(அருணந்தி தேவ நாயனார்) (பொ.யு. 1195-1250) மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு மெய்கண்ட சைவ சித்தாந்த நூல்களை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணந்தி சிவாசாரியார் நடு நாட்டின் திருத்துறையூரில் ஆதிசைவ அந்தண குலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயரும் பெற்றோர் பெயரும் அறியவரவில்லை.

அருணந்தி உரிய வயதில் வேதம்‌ வேதாங்கங்களைக் கற்றுணர்ந்தார். சிவதீட்சை பெற்றார். காமிகமாதி சைவாகமங்கள்‌ இருபத்தெட்டினையும்‌, மிருகேந்திரமாதி இருநாற்றேழு உபாகமங்களையும்‌ பயின்று 'சகலாகம பண்டிதர்‌' என்று பெயர் பெற்றார். தமிழிலும் வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அவரிடம் பல மாணாக்கர் கல்வி பயின்றனர்.

அருணந்தி சிவாசாரியாரின் மாணாக்கர்களுள் வேளாளர் குலத்தலைவர் அச்சுத களப்பாரும் ஒருவர்.

மெய்கண்டார் பிறந்ததுகுறித்த தொன்மம்

அருணந்தி சிவாசாரியாரின் ஆணைப்படி திருவெண்காடு சென்று நோன்பிருந்து வேண்டிக்கொண்டு பிறந்த மைந்தர் மெய்கண்டார். அச்சுத களப்பாருக்குக் குழந்தைப் பேறு இல்லாமையால் குலகுருவின் அருளை வேண்டினார். சகலாகம பண்டிதர் திருமுறைகளை ஓதித் துதித்து கயிறுசார்த்திப் பார்த்தபோது ஞானசம்பந்தரின் திருவெண்காட்டு திருப்பதிகத்தின் இரண்டாம்‌ பாடல்‌ (பேயடையா எனத் தொடங்கும்) காணப்‌ பட்டது. அதை நிமித்தமாகக் கொண்டு அச்சுதகளப்பாரும் , மங்களாம்பிகையும் திருவெண்காட்டில் தங்கி முக்குளநீரில்‌ நீராடி, வெண்காட்டுப் பெருமானைத் துதித்து வந்தனர். ஒரு ஆண் குழந்தையைப் பெற்று சுவேதவனப்பெருமான்‌(வெண்காட்டார்) எனப் பெயரிட்டனர். அக்குழந்தை பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்று இளம் வதிலேயே மெய்யுணர்வு பெற்று மெய்கண்டார் என அறியப்பட்டது.

மெய்கண்டாரை குருவாக ஏற்றல்

அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்டார் அருளுரை கூறுவதை அறிந்து அவரைப் பார்க்கவந்தார். மெய்கண்டார் அருளுரையில் மூழ்கியிருந்தமையால் அவரைப் பொருட்படுத்தவில்லை. அதைக்கண்டு ஆணவம் புண்பட்ட அருள்நந்தி சிவாச்சாரியார் "ஆணவமலத்தின் மெய்நிலை என்ன?' என்று மெய்கண்டாரைக் கேட்டார். மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியாரையே சுட்டிக்காட்டினார். அதை கண்டதும் ஆணவம் அழிந்த அருள்நந்தி சிவாச்சாரியார் மெய்கண்டாரின் மாணவரானார். மெய்கண்டாரின் நாற்பத்தொன்பது மாணவர்களில் அவரே முதன்மையானவர்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.