under review

அருணகிரிநாதர்

From Tamil Wiki
Revision as of 17:42, 17 March 2022 by Ramya (talk | contribs)

அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் பொ.யு 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணகிரிநாதர் 1370இல் திருவண்ணாமலையில் பிறந்தவர். கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் நடந்தது. எந்நேரமும் காமத்தில் இருந்ததால் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து அவதிப்பட்டார். முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தியதால் பக்தி பாடல்களை உருவாக்க ஆரம்பித்தார் என அவரின் வரலாற்று நூல்களில் காணப்படுகிறது.

இலக்கியவாழ்க்கை

இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 16000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன. இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளது. திருப்புகழ் இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்று.

அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இசை மூலம் வழிபடும் புதிய வழிபாட்டு முறையை உலகிற்கு உணர்த்தியது. அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றது.

பாடல்கள் பதிப்பு

வி.டி. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை அருணகிரியின் பாடல்களை மீட்டெடுத்து புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். 1871இல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894இல் முதலாவது பதிப்பும், 1901இல் இரண்டாவது பதிப்பும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

திரைப்படம்

1964ம் ஆண்டில் அருணகிரிநாதர் என்கிற தமிழ் திரைப்படம் வெளியானது. இதில் பின்ணணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நூல் பட்டியல்

  • கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
  • கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
  • கந்தரனுபூதி (52 பாடல்கள்)
  • திருப்புகழ் (1307 பாடல்கள்)
  • திருவகுப்பு (25 பாடல்கள்)
  • சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
  • மயில் விருத்தம் (11 பாடல்கள்)
  • வேல் விருத்தம் (11 பாடல்கள்)
  • திருவெழுகூற்றிருக்கை

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.