அரிவாட்டாய நாயனார்: Difference between revisions
No edit summary |
(Corrected error in line feed character) Tag: Manual revert |
(One intermediate revision by the same user not shown) | |
(No difference)
|
Latest revision as of 20:09, 12 July 2023
To read the article in English: Arivattaya Nayanar.
அரிவாட்டாய நாயனார் (அரிவாள் தாய நாயனார் / தாயனார்) சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தாயனார் சோழநாட்டில் கணமங்கலம் என்னும் ஊரில் வேளாண் குலத்தில் பிறந்தவர். செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் சிவபெருமானுக்குப் படைப்பது இவரது அன்றாடத் தொண்டு.
சிவனின் ஆடலால் தாயனாரின் செல்வ வளம் குறைந்தது. அந்நிலையிலும் அவரது தொண்டு குறையவில்லை. வறுமை நிலையால் கூலிக்கு செந்நெல் அறுத்து அதில் கூலியாகக் கிடைக்கும் செந்நெல்லை ஆண்டவனுக்குப் படைப்பார், கார் நெல் கிடைத்தால் தனக்கு உணவாகக் கொள்வார். இதை நெறியாகக் கொண்டிருந்த அந்நாளில் வயலெல்லாம் செந்நெல்லே விளைந்தது. அதையும் இறைவன் கருணை என்றெண்ணி அனைத்து செந்நெல்லையும் சிவனுக்குப் படைத்து விட்டு, தாயனாரும் அவர் மனைவியும் வீட்டுக் கொல்லையில் பறித்த இலைகளையும் சிலநாட்கள் வெறும் நீரையும் உண்டு வாழ்ந்தனர்.
ஒருநாள் தாயனார் வழக்கப்படி இறைவனுக்கு செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும், சுமந்து செல்லும் போது உணவின்றி உடல் தளர்வுற்றிருந்த தாயனார் கால் தளர்ந்து தவறி வீழ்ந்தார். அனைத்தும் நிலத்தின் வெடிப்பில் சிந்திவிட்டன. சிவனுக்கு அமுது படைக்கமுடியாத நிலையில் தான் அதன் பிறகு கோவிலுக்கு செல்வதில் பயனொன்றும் இல்லை என்றெண்ணி அரிவாளை எடுத்து தன் கழுத்தை வெட்டப் போனார். சிவனின் கரம் வந்து அச்செயலைத் தடுத்தது; விடைமேல் தோன்றி தாயனாரை ஆட்கொண்டார் இறைவன்.
அரிவாள் எடுத்துத் தன் தலை கொய்யத் துணிந்தமையால் அரிவாள்தாய நாயனார் அல்லது அரிவாட்டாயர் என்றழைக்கப்பட்டார்.
பாடல்கள்
- திருத்தொண்டர் திருவந்தாதியில் இவர் கதையை விளக்கும் பாடல்:
வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலு"மிங்கே
வெள்ளச் சடையாய் ! அமுதுசெய் யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாள்பூட் டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே.
- திருத்தொண்டர் புராணத்தில் இவர் கதையை விளக்கும் பாடல்:
தாவில்கண மங்கலத்துள் வேளாண் தொன்மைத்
தாயனார் நாயனார் தமக்கே செந்நெல்
தூவரிசி எனவிளைவ தவையே யாகத்
துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை
ஆவினில்ஐந் துடன்கொணரக் கமரிற் சிந்த
அழிந்தரிவாள் கொண்டூட்டி அரியா முன்னே
மாவடுவின் ஒலியும்அரன் கரமும் தோன்றி
வாள் விலக்கி அமரர்தொழ வைத்த தன்றே
குருபூஜை
அரிவாட்டாய நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
உசாத்துணை
- நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
- சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016
- 63 நாயன்மார்கள்- அரிவாட்டாய நாயனார். தினமலர் நாளிதழ்
✅Finalised Page