under review

அரசு மணிமேகலை

From Tamil Wiki
Revision as of 20:51, 7 March 2023 by ASN (talk | contribs)
கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் அரசு மணிமேகலை

அரசு மணிமேகலை (மணிமேகலை; டிசம்பர் 7, 1944 - ஆகஸ்ட் 5, 2001) தமிழக எழுத்தாளர், கவிஞர். திரைப்பட கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர். சொற்பொழிவாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ் வளர்ச்சித் துறை திட்டக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.  திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். தமிழக அரசின் விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

மணிமேகலை என்னும் இயற்பெயரை உடைய அரசு மணிமேகலை, டிசம்பர் 7, 1944 அன்று, காஞ்சிபுரத்தில், ரத்தினசாமி-ராஜாகண்ணம்மாளுக்குப் பிறந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள மிஷன் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் கற்றார். ராணி மேரி கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்று பட்டம் பெற்றார். ‘பெரியார். ஈ.வே.ரா. சிந்தனையில் பெண்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ‘ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பில்) பட்டம் பெற்றார். தொடர்ந்து பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.

பேராசிரியர், முனைவர் அரசு மணிமேகலை

தனி வாழ்க்கை

மணிமேகலையை, சி.டிட்டி அரசு-கண்ணாம்பாள் தம்பதியனரை வளர்த்தனர். அதனால் வளர்ப்புத் தந்தையின் பெயரான ’அரசு’ என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு ’அரசு மணிமேகலை’ ஆனார். சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் தேர்வுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். ராணி மேரிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். (திருமணம் பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை)

கவியரங்கத்தில் கலைஞர் மு. கருணாநிதியுடன்

இலக்கிய வாழ்க்கை

அரசு மணிமேகலை, கவிதைகளில் ஈடுபாடுகொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை 1960-ல் வெளிவந்தது. தொடர்ந்து கலைமகள், ஆனந்த விகடன், அமுதசுரபி, தினமணி கதிர், தினமலர்-வாரமலர் எனப் பல இதழ்களில் கதை, கவிதைகள், தொடர்கள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார். சிறார்களுக்காகவும் பல படைப்புகளைத் தந்தார். அரசு மணிமேகலை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவரது படைப்புகள் பள்ளி, கல்லூரி துணைப்பாட நூல்களில் இடம் பெற்றன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.பில்., பிஹெச்.டி. பட்டம் பெற்றனர்.

அமைப்புச் செயல்பாடுகள்

அரசு மணிமேகலை, வானொலி- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாநாடுகளில், தமிழ்ச் சங்க நிகழ்வுகளில், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திரைப்படங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இவரது படைப்புகள் பாட நூலாக வைக்கப்பட்டன.

பொறுப்புகள்

  • இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் மாநாட்டு மலர்த் தயாரிப்பாளர் குழு உறுப்பினர்.
  • தமிழ் வளர்ச்சித் துறை திட்டக்குழு உறுப்பினர்.
  • திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர்.

விருதுகள்

  • தமிழக அரசின் பாவேந்தர் விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • ஜான்சிராணி விருது
  • வேலு நாச்சியார் விருது
  • அருந்தமிழ்த் தென்றல் விருது

மறைவு

அரசு மணிமேகலை, ஆகஸ்ட் 5, 2001 அன்று காலமானார்.

ஆவணம்

‘அரசு மணிமேகலையின் படைப்புகள் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் மதியழகி மனோகரன் ஆய்வு நூல் ஒன்றை எழுதினார்.

இலக்கிய இடம்

பெண்ணியம், பெண் விடுதலை சார்ந்த கருத்துக்கள் கொண்டனவாக அரசு மணிமேகலையின் படைப்புகள் அமைந்தன. சமூகம், அரசியல், பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உருவான பண்பாட்டு மறுமலர்ச்சியை இவர் தன் படைப்புகளில் பதிவு செய்தார். 1980-களில் வாழ்ந்த பெண்களின் சமூக மாற்றத்தை இவரது படைப்புகள் முன் வைத்தன. இவரது படைப்புகளில் ஒரு சில தவிர்த்து பெரும்பாலானவை எதுவும் தற்போது அச்சில் இல்லை.

அரசு மணிமேகலை புத்தகங்கள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • நெஞ்சுக்குள் ஒரு நெருப்பு நதி
  • மூன்று கால் மனிதர்கள்
  • வசந்தம் வந்தது
  • நிஜங்களும் நிழல்களும்
  • புல்லைத் தின்னும் புலிகள்
  • கனவுச் சுகம்
கவிதைத் தொகுப்புகள்
  • ஒரு வானம்பாடி வாய்திறக்கிறது
  • மழலைக் கவிதைகள்
  • புரட்சிப் பூக்கள்
  • வெளிச்ச மின்னல்
நாவல்கள்
  • மனிதரில் இவர் மகாத்மா
  • கனவு சுமக்கும் கண்கள்
  • தீக்குளிக்காத சீதைகள்
  • என்றும் தொடரும் பயணம்
  • பொறுத்திரு பூ மலர
  • நாளை நான் ஜெயிப்பேன்
  • கண்ணுக்குள் நூறு கவிதை
  • பூவே இளம் பூவே
  • பொழுது ஒரு நாள் புலரும்
  • காத்திருங்கள் காலம் வரும்
கட்டுரை நூல்கள்
  • முடிவல்ல ஆரம்பம்
  • பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனையில் பெண்கள்
  • கவிதைக் கதிரவன் தாகூர்
  • நாடும் வீடும் நலம் பெற
  • அழகும் ஆரோக்கியமும் பெற
  • பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
  • தமிழகத்து மும்மணிகள்
  • ஆளுக்கோர் அகல் விளக்கு
  • சிந்திக்கச் சில நொடிகள்
  • கட்டுரைக் களஞ்சியம்
  • எழுத்தறிவு
  • வயலைத் தாண்டாத பயிர்கள்
  • வாழ்க்கை மாளிகை
  • மதவெறி அறியாத மழலைகள்
  • புதிய சொர்க்கம்
  • விளக்கை நாடும் விட்டில்கள்
  • ஆழ்கடலில் சில அதிசயங்கள்
  • விண்ணைத் தொடுவோம் பெண்ணே
  • சேற்றில் முளைத்த செந்தாமரை
சிறார் நூல்கள்
  • முயன்றால் முன்னேறலாம்
  • வானத்தை வளைப்போம்
  • சிறுவனும் சிங்கக் குட்டியும்
  • சிறுவர் பொன்மொழிக் கதைகள்
  • நன்மொழிக் கதைகள்
  • மனித உடலும், மருத்துவமும்
  • மெழுகுவர்த்திகள்
  • மாணவர்களுக்குச் சில யோசனைகள்
  • சுட்டிப்பயல்
  • அறிவியல் அறிவு பெற
  • கடல் வீரன் நெல்சன்
  • நல்லவர்கள் கெடுவதில்லை
நாடகம்
  • நகைச்சுவை நாடகங்கள்
  • ஏழிசைவல்லி (கவிதை நாடகம்)
  • சிரிப்பு நாடகங்கள்
  • அன்பென்று கொட்டு முரசே (சிறார் நாடகம்)

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.