being created

அம்பிகா ஸ்ரீநிவாசன்

From Tamil Wiki
Revision as of 13:29, 25 October 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "அம்பிகா ஸ்ரீநிவாசன் மலேசியாவில் குறிப்பிடத்தக்க வழக்கறிஞர் ஆவார். மனித உரிமை சார்ந்த வழக்குகளை இவர் ஏற்று நடத்தியுள்ளார்.  மலேசியப் பொதுத் தேர்தல்களில் நேர்மையான முறைகள் கட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அம்பிகா ஸ்ரீநிவாசன் மலேசியாவில் குறிப்பிடத்தக்க வழக்கறிஞர் ஆவார். மனித உரிமை சார்ந்த வழக்குகளை இவர் ஏற்று நடத்தியுள்ளார்.  மலேசியப் பொதுத் தேர்தல்களில் நேர்மையான முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் 'பெர்சே' இயக்கத்தை முன்னெடுத்தவர்களில்  ஒருவர்.

பிறப்பு, கல்வி

அம்பிகா ஸ்ரீநிவாசன்  நவம்பர் 13, 1956ல் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பானில் பிறந்தார்.  இவரது தந்தை  டத்தோ டாக்டர் ஜி. ஸ்ரீநிவாசன் ஒரு சிறுநீரக நிபுணர். தாயார் பெயர் விசாலாட்சி. இத்தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள்.

அம்பிகா ஸ்ரீநிவாசன் தொடக்கக் கல்வியையும், உயர்நிலைக் கல்வியையும் கோலாலம்பூர் புக்கிட் நானாஸ் கான்வெண்ட் பள்ளியில் பயின்றார். தொடர்ந்து மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அம்பிகா ஸ்ரீநிவாசன்  இங்கிலாந்தில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1979ஆம் ஆண்டு, ஒரு வழக்குரைஞராகப் பட்டம் பெற்றார்.  

தொழில், திருமணம்

லண்டனில் இரு வழக்கறிஞர் நிறுவனங்களில் பணியாற்றியப் பிறகு தாயகம் திரும்பிய அம்பிகா ஸ்ரீநிவாசன் கோலாலம்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1982ஆம் ஆண்டு மார்ச் 31, 1982ல் மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டார். அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

அம்பிகா ஸ்ரீநிவாசன், எஸ். ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்தார். எஸ். ராதாகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' நிறுவனர் எஸ்.எஸ். வாசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிகளுக்கு கோகுல்,  சரண்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

மலேசிய வழக்கறிஞர்கள் கழகத் தலைவர்

அம்பிகா ஸ்ரீநிவாசன் மார்ச் 2007 முதல் மார்ச் 2009 வரை மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மலேசிய வரலாற்றில் பெண் ஒருவர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

பொதுவாழ்க்கை

நீதிக்கு ஓர் அணிவகுப்பு

2007இல் மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகப் பதவி ஏற்ற ஆறாவது மாதத்தில், நீதிக்கு ஓர் அணிவகுப்பு (March for Justice) எனும் ஓர் பேரணியை அம்பிகா ஸ்ரீநிவாசன் உருவாக்கினார். மலேசிய நீதி அமைப்பில் சீரமைப்பு வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

பெர்சே

'பெர்சே' (BERSIH) என்பது மலேசியப் பொதுத் தேர்தல்களில் நேர்மையான ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. நவம்பர் 23, 2006ஆம் ஆண்டு, மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் பல்லின தலைவர்கள் முதல் 'பெர்சே' அணியில் கூடி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அம்பிகா ஸ்ரீநிவாசன் 'பெர்சே' பேரணியை வலுவான இயக்கமாக்கினார்.

பெர்சே 2

நவம்பர் 10, 2007ல் நடந்த இரண்டாவது பெர்சே பேரணிக்கு அம்பிகா ஸ்ரீநிவாசன் தலைமைத் தாங்கினார். இன, மத பேதமில்லாமல் இரண்டு இலட்சம் மக்களை ஒன்றாக இணைத்துக் களம் அமைத்ததால் அம்பிகா ஸ்ரீநிவாசன் மலேசியா முழுவதும் அறியப்பட்டார். நேர்மையான தேர்தலுக்கு எட்டு கோரிக்கைகளை அவர் இந்தப் பேரணியின் மூலம் முன்வைத்தார்.

பெர்சே 3

ஏப்ரல் 28, 2012ல் மீண்டும் அம்பிகா ஸ்ரீநிவாசன்  பெர்சே 3 பேரணியைத் திரட்டினார். இம்முறை குந்தியிருப்பு போராட்டம் எனும் வகையில் 250 000 மக்களை ஒன்று திரட்டினார்.

சர்ச்சைகள்

பெர்சே பேரணியை முன்னெடுத்ததால் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்கு பலவிதமான நெருக்குதல்கள் ஏற்பட்டன.

  • ஒரு சில தரப்பினர் அம்பிகா ஸ்ரீநிவாசன்  இல்லத்திற்கு முன்னால், அங்காடிக் கடைகளைப் போட்டுப் போக்குவரத்து இடைஞ்சல்களை ஏற்படுத்தினர்.
  • அம்பிகா ஸ்ரீநிவாசன் உயிருக்கு மிரட்டல் ஏற்படுத்தும் கடிதங்கள், அஞ்சல் பொட்டலங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன.
  • 'ஓர் இந்துப் பெண்  எனும் போர்வையில் ஒரு பயங்கரவாதி; என்று பழி சுமத்தப்பட்டார்.
  • முன்னாள் போர் வீரர்கள் 200 பேர் அவருடைய வீட்டிற்கு முன்னால் ஒன்று கூடி, தங்களின் பிட்டங்களைக் காட்டி அசிங்கப்படுத்தினர்.
  • ‘சட்டவிரோதப் பெண்மணி’ என்று சமூக ஊடகங்கள் வழி அவமதிக்கப்பட்டார்.

பிற பொறுப்புகள்

  • மலேசிய இணைய வலையமைப்புத் தகவல் பிரிவில் 2006-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை செயலாற்றியுள்ளார்.
  • மலேசிய வழக்கறிஞர் கழக அறிவுசார் சொத்துரிமைத் துணைக் குழுவில் 2005-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரை சேவை செய்துள்ளார்.
  • மலேசிய அறிவுசார் சொத்துரிமைக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
  • மலேசிய வழக்குரைஞர் கழகத்தின் நடுவர் குழுவில் அங்கம்.
  • வழக்குரைஞர் கழகத்தின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகள் மீதான செயற்குழுவின் துணைத் தலைவர்
  • மலேசிய மகளிருக்கான உதவி அமைப்பு செயற்குழுவில் அங்கம்.
  • மலேசிய அறிவுசார் சொத்துடைமைச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்
  • பங்கு வர்த்தகத் தொழில்துறை இடர்பாட்டுத் தீர்வு மையத்தின் இயக்குனர்

விருதுகள்

  • 2008 -  DPMP எனப்படும் டத்தோ விருது - பேராக் சுல்தான் அஸ்லான் ஷா
  • 2009 -   சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதை அமெரிகாவில் பெற்றார்.
  • 2011 -  பிரான்சு நாட்டின் மிக உயரிய விருதான Chevalier de Legion d’Honneur எனும் செவேலியர் விருது.
  • 2011-  அம்பிகா ஸ்ரீநிவாசன்  படித்த எக்ஸ்டர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.