under review

அநுத்தமா: Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
(Corrected error in line feed character)
 
(One intermediate revision by the same user not shown)
Line 31: Line 31:
== நூல்கள் ==
== நூல்கள் ==
* லக்ஷ்மி
* லக்ஷ்மி
* கௌரி
* கௌரி
* நைந்த உள்ளம்
* நைந்த உள்ளம்
Line 52: Line 51:
* சலங்கைக் காக்காய் [குழந்தை இலக்கியம்]
* சலங்கைக் காக்காய் [குழந்தை இலக்கியம்]
* சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)
* சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:08, 12 July 2023

To read the article in English: Anuthama. ‎

Anuthama-pic.jpg

அநுத்தமா (அனுத்தமா) (ஏப்ரல் 16, 1922 - டிசம்பர் 3, 2010) தொடக்க கால தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப் பின்புலம் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய "கேட்ட வரம்" என்னும் நாவல் முதன்மையானது.

பிறப்பு, கல்வி

அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி. இவருடைய முன்னோர்கள் வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர் பிறந்தது சென்னையை அடுத்த நெல்லூரில். ஏப்ரல் 16, 1922 அன்று பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அநுத்தமா தெலுங்கில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் தமிழை தானாகவே கற்றுக்கொண்டார். அநுத்தமாவின் கல்வி ஆரம்பப்பள்ளியுடன் நின்றுவிட்டது. திருமணமான பின்னர் கணவனின் ஆதரவுடன் தொடர்ந்து கல்வி கற்று மெட்ரிகுலேஷன் தேர்வில் பழைய சென்னை மாகாணத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று வெற்றியடைந்தார்.

தனிவாழ்க்கை

அநுத்தமா

அநுத்தமா 1936-ல் தன் 14-ஆவது வயதில் திருமணம் புரிந்துகொண்டார். கணவர் பத்மநாபன் மின்துறை ஊழியர். அநுத்தமா பத்மநாபன் இணையருக்கு குழந்தைகள் இல்லை. தன் தங்கையுடன் வாழ்ந்தார். அவர் மறைந்தபின் தன் கொழுந்தனார் குடும்பத்துடன் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அநுத்தமா இளமையிலேயே எழுதத் தொடங்கினார். இவருக்கு அநுத்தமா என்று பெயர் சூட்டியது இவருடைய மாமனார் என பதிவு செய்திருக்கிறார். தன் 25-ஆவது வயதில் கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவருடைய சிறுகதை 'அங்கயற்கண்ணி இரண்டாம் பரிசு பெற்றது. அதுவே இவருடைய முதல் படைப்பு. 1947-ல் இக்கதை பிரசுரமானது. கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் இவரது மணல் வீடு முதல் பரிசு பெற்றது. இவர் எழுதிய முதல் நாவல் இது.

அநுத்தமா 300 சிறுகதைகள், 22 நாவல்கள், 15-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். மணல் வீடு', 'ஒரே ஒரு வார்த்தை', 'கேட்டவரம்' ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள். குழந்தைகளுக்கென கம்பீர கருடன்’, 'வானம்பாடி’, 'வண்ணக்கிளி’, 'சலங்கைக் காக்காய்’ என்னும் நான்கு நுல்களை எழுதி இருக்கிறார். சிறுவர் புத்தகங்களுக்கான ஓவியத்தையும் அநுத்தமாவே வரைந்திருந்தார்.

மொழியாக்கம்

சிஸ்டர் சுப்புலட்சுமி பற்றி மோனிகா ஃபெல்டன் எழுதிய நூலை ராஜாஜியின் பரிந்துரையின்படி மொழியாக்கம் செய்து கல்கியில் தொடராக வெளியிட்டார். 'சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி' (வாழ்க்கை வரலாறு) என்னும் தலைப்பில் அது நூலாகியது.

பறவையியல்

அநுத்தமாவுக்கு பறவையியலில் ஆர்வம் உண்டு. பறவைகளை கூர்ந்து நோக்கி குறிப்புகள் எடுப்பார். இவருடைய குழந்தைக்கதைகள் எல்லாம் பறவைகளைப் பற்றிய தகவல்களை சொல்பவை.

மறைவு

டிசம்பர் 3, 2010 அன்று தனது 88-ஆவது வயதில் சென்னையில் மறைந்தார்.

இலக்கிய இடம்

தமிழில் அச்சுத்தொழில் நிலைபெற்று, நூல்களை பொழுதுபோக்குக்காகவும் வாசிக்கும் வழக்கம் உருவான பின்னர் பலவகையான பிரபல எழுத்துமுறைகள் உருவாயின. அவற்றில் ஒன்று கலைமகள் இதழைச் சுற்றி உருவான பெண்களின் எழுத்து. பெரும்பாலும் பிராமணக் குடும்பத்துப் பெண்கள் இவற்றை எழுதினர். வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் அவர்களே. குடும்பப்பின்னணியில், நேர்த்தியான நடையில், மெல்லிய உளவியல் சிக்கல்களுடன் எழுதப்பட்ட நாவல்கள் இவை. பொதுவாக நேர்நிலையான உளப்பாங்கு கொண்டவை. ஆ. சூடாமணி அவர்களில் முக்கியமானவர். அந்த எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவர் அநுத்தமா.

அநுத்தமாவின் நாவல்கள் எளிய நேரடியான நடையில் பொதுவாசகர்களுக்கு உகந்தவகையில் எழுதப்பட்டவை. தொடர்கதைத்தன்மை கொண்டவை. மரபுநெறிகொண்ட கதைமாந்தரும், காலமாற்றத்தால் அமையும் உளவியல்சிக்கல்களும் பேசுபொருள். வாசகர்களுக்கு அதிர்ச்சியையோ சீண்டலையோ அவை அளிப்பதில்லை. ஒரு பிரச்சினையைச் சொல்லி தீர்வை அளித்து முடியும் படைப்புகள் இவை. அந்த மரபார்ந்த, வழக்கமான தன்மை இவற்றின் இலக்கியத்தன்மையை குறைக்கிறது.

ஆனால் அநுத்தமாவின் 'கேட்ட வரம்' நாவலை விமர்சகர் க.நா. சுப்ரமணியம் அவருடைய 'படித்திருக்கிறீர்களா?' என்னும் இலக்கியப் பரிந்துரைப் பட்டியலில் சேர்த்திருக்கிறார். அது நவீன இலக்கியத்திற்கான மதிப்பு கொண்டது என அவர் கருதினார்.

விருதுகள்

  • அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2-ஆவது பரிசு,1947
  • மணல்வீடு (நாவல்), கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949
  • மாற்றாந்தாய் - ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு
  • தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்

நூல்கள்

  • லக்ஷ்மி
  • கௌரி
  • நைந்த உள்ளம்
  • சுருதி பேதம்
  • முத்துச் சிப்பி
  • பூமா
  • ஆல மண்டபம்
  • ஒன்றுபட்டால்
  • தவம்
  • ஒரே ஒரு வார்த்தை
  • வேப்பமரத்து பங்களா
  • கேட்ட வரம்
  • மணல் வீடு
  • ஜயந்திபுரத் திருவிழா
  • துரத்தும் நிழல்கள்
  • எழுச்சிக்கனல் [நாடகம்]
  • கம்பீர கருடன் [குழந்தை இலக்கியம்]
  • வானம்பாடி [குழந்தை இலக்கியம்]
  • வண்ணக்கிளி [குழந்தை இலக்கியம்]
  • சலங்கைக் காக்காய் [குழந்தை இலக்கியம்]
  • சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)


✅Finalised Page