அதிவீரராம பாண்டியர்
அதிவீரராம பாண்டியர் (பொ.யு. 1564–1604) பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவர். தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பொ.யு. 14ஆம் நூற்றாண்டில் டெல்லி அரசரின் தளபதி மாலிக்காப்பூரின் படையெடுப்பாலும், விஜய நகர வேந்தரின் படைத்தளபதி கம்பணவுடையாரின் போர்களினாலும் பாண்டியர் குடி சிதறுண்டது. அக்குடியினரில் ஒரு கிளையினர் திருநெல்வேலிப் பகுதியைத் தம் வசப்படுத்தித் தென்காசியில் இருந்துகொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் மதுரையில் ஆண்டு வந்த நாயக்க மன்னர்களின் கட்டுப்பாட்டில் இயங்கினர். இவர்களுள் அதிவீரராம பான்டியரும் ஒருவர். இவர் ”கோ ஐடிலவர்மன் திரிபுவன சக்கராத்தி கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப் பெருமாள் வீரவெண்பா மாலையான் தன்மப் பெருமாள் குலசேகரதேவர் நந்தனாரான அழகம் பெருமாள் அதிவீர ராமரான ஸ்ரீவல்லபதேவர்” என்று கல்வெட்டொன்றில் அழைக்கப்படுகிறார்.
வேறு பெயர்கள்
- இராமன்
- வீரமாறன்
- ஸ்ரீவல்லபன்
- சீவலன்
இலக்கிய வாழ்க்கை
வடமொழியிலும், தமிழிலும் தோன்றிய, நளன் கதை கூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இயற்றினார். நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூலையும், காசி காண்டம், கூர்ம புராணம், மாக புராணம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். கொக்கோகம் எனப்படும் காமநூலையும் எழுதினார். சிதம்பரநாத கவி இவரைப்பற்றி சீவலமாறன் கதையை இயற்றியுள்ளார்.
ஆதாரித்த புலவர்கள்
- சேறை ஆசு கவிராயர்
- திருவண்னாமலைப் புலவர் சிதம்பரநாதர்
- புதுக்கோட்டை நைடதம் இராமகிருஷ்ணர்
- ஆசு கவிராச சிங்கம்
- சிவந்த கவிராசர்
திருப்பணிகள்
சிவ பக்தர். தென்காசிப் பெரிய கோயிலுக்கு மேற்பகுதியில் தம் தந்தை பெயரால் ஒரு சிவாலயத்தைக் கட்டினார். இதனருகில் ஒரு திருமால் கோயிலும் இவரால் கட்டப்பட்டது. இவர் 1564 முதல் 1603 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின் பட்டமெய்தியவர் இவருடைய பெரிய தந்தையின் மகனான வரதுங்க பாண்டியர்.
நூல்கள் பட்டியல்
- நைடதம்
- காசிக் காண்டம்
- கூர்மபுராணம்
- கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
- கருவை வெணபாவந்தாதி
- கருவைக்கலித்துறையந்தாதி
- வெற்றி வேற்கை
- நறுந்தொகை
- கொக்கோகம்
- இலிங்க புராணம்