அசோகாம்பிகை
அசோகாம்பிகை (அசோகாம்பிகை யோகராஜா) (மண்டூர் அசோகா) (பிறப்பு: மார்ச் 2, 1949) ஈழத்து தமிழ் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
அசோகாம்பிகை இலங்கை மட்டக்களப்பு, மண்டூரில் இளையதம்பி, கனகம்மா இணையருக்கு மகளாக மார்ச் 2, 1949-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையில் பயின்றார். உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் கற்றார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
அசோகாம்பிகை யோகராஜாவைத் திருமணம் செய்து கொண்டார். 1977 முதல் மண்டூர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்புச் சிவானந்தா வித்தியாலயத்தில் 2009-ல் ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
1970-களில் எழுதத் தொடங்கிய அசோகாம்பிகை 'மண்டூர் அசோகா' என்ற புனைபெயரால் அறியப்பட்டார். ரேவதி, செந்தில் பிரியா ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பு 'கொன்றைப்பூக்கள்' 1976-ல் வெளியானது.
வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஜோதி, தென்றல், தாய்நாடு, சுடர், தினக்குரல், ஞானம், இருக்கிறம் போன்ற இதழ்களில் எழுதினார். இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியுள்ள இவர் வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்குப் பல பாடல்களை எழுதினார். சிறுகதைகள், நாவல் எழுதினார். வரணியூரான் எஸ்.எஸ். கணேசபிள்ளையின் 'புளுகர் பொன்னையா' என்ற புகழ்பெற்ற நாடகத்தை இலங்கை எங்கும் அரங்காற்றுகை செய்வதற்கும் ஊக்கியாக இருந்தார்.
விருது
- சிறந்த சிறுகதைக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு
- சிறந்த நாவலுக்காக வட கிழக்கு மாகாண சபைப் பரிசு
- சார்க் அமைப்பின் இலங்கைப் பெண் எழுத்தாளருக்கான போட்டியில் பரிசு
- தமிழ்நாடு இதய கீதம் இலக்கிய பொதுநல இயக்கம் வழங்கிய சாதனையாளருக்கான விருது
- இலங்கை மத்திய மாகாணத்தில் கண்டியிலிருந்து இலக்கியப்பணியாற்றிய ரூபராணி ஜோசப் நினைவாக கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் சார்பாக விருது பெற்றார்.
- 2001-ல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் 'தமிழருவி' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இலக்கிய இடம்
அசோகாம்பிகை ஈழத்து இலக்கியச் சூழலில் பொதுவாசகர்களுக்காக எழுதிய படைப்பாளி. பெண்களுக்கான உரிமைகள் பெண்களின் சமூகவாழ்க்கைச்சித்திரங்கள் பற்றிய படைப்புகளை உருவாக்கினார்.
நூல் பட்டியல்
நாவல்
பாதை மாறிய பயணங்கள் (1992)
சிறுகதைகள்
- கொன்றைப்பூக்கள் (1976)
- சிறகொடிந்த பறவைகள் (1993)
- உறவைத்தேடி (2002)
உசாத்துணை
- ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா: Noolaham
- கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்: புறக்கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதிவந்திருக்கும் மண்டூர் அசோக்கா - முருகபூபதி
- மண்டூர் அசோகா: கிழக்கு மண்
இணைப்புகள்
✅Finalised Page