அசன்பே சரித்திரம்

From Tamil Wiki
Revision as of 10:27, 22 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|அசன்பே சரித்திரம் அசன்பே சரித்திரம்(1885) சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய நாவல். இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது ந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அசன்பே சரித்திரம்

அசன்பே சரித்திரம்(1885) சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய நாவல். இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதைச் சொல்லலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில்கொள்ளப்படவில்லை.

எழுத்து,பிரசுரம்

அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890 மறுபதிப்பு வெளிவந்தது. 1974ல் அடுத்த பதிப்பு வெளியாகியது

கதைச்சுருக்கம்

அசன்பே சரித்திரம்

இந்நாவல் 170 பக்கங்கள் கொண்டது. அத்தியாயப் பகுப்புகள் இல்லை. எகிப்து நாட்டின் கெய்ரோவில் இந்தக்கதை தொடங்குகிறது. இந்தியாவில் பம்பாய்,சூரத், கல்கத்தா முதலிய நகரங்களிலும் அலக்ஸாண்ட்ரியா பெய்ரூத் போன்ற ஊர்களிலும் கதை நிகழ்கிறது.அசன் என்பவன் கெய்ரோவில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து கொடியவர்களால் கடத்தப்படுகிறான். அவன் பல்வேறு ஊர்களில் கல்வி கற்று, பல தொழில்கள் செய்து, இறுதியில் கெய்ரோவில் தன் பெற்றோரிடம் சேர்கிறான். தன் வீரச்செயல்களுக்காக பே (Bey) என்னும் பட்டத்தை துருக்கிய கலிஃப்ஃஃ திமிஷ்க் பாஷாவிடமிருந்து அசன் பெறுகிறான். ஆகவே அவன் அசன் பே என அழைக்கப்படுகிறான். பாலின் என்னும் வெள்ளைக்கார பெண்ணை மணந்து அவளை முஸ்லீமாக ஆக்குகிறான். இந்நாவலை ஓர் உண்மைவரலாறு போல தேதிகள் மற்றும் அடிக்குறிப்புகளுடன் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இது அவர் அறிந்த உண்மை வரலாற்றின் ஒரு பதிவுதான் என்பவர்களும் உண்டு

நடை

இந்நாவல் இவ்வாறு தொடங்குகிறது. கல்விச் செல்வங்களிலேயே மிகச் சிறந்த விளங்கா நின்ற மிசுறு தேசத்தின் இராஜதானியாகிய காயிரென்னும் பட்டணத்திலேயே செய்யிது பாஷா என்பவர் இராச்சிய பரிபாலனம் செய்யும் காலத்தில், அந்த பாஷாவினுடைய மாளிகைக்குச் சமீபமான ஓர் அலங்காரமுள்ள மாளிகையில் யூசுபுபாஷா என்பவரொருவர் இருந்தார். அவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். மஹா பாக்கியவந்தர். கதீவுடைய மந்திரிமார்களிலொருவர் மதம் பிடித்த யானையை நடத்தும் பாகன் அதை நயபயத்தினால நல்வழி நடத்துவதுபோல அரசன் கோபித்தாலும் அவனை விட்டகலாது அப்போது வேண்டும் யுக்தி புத்திகளை யிடத்திடித்துப் புகட்டும் தொழிலை விடாமலிருப்பவர். நேரான காரியங்களில் சோராத துணிவுள்ளவர். பின்னே வருங்கருமங்களை முன்னே அறிந்து தெரிவிக்கும் மூதறிவுடையவர். காலமும் இடமும் ஏற்ற கருவியும் தெரிந்தவர். பிரஜைகளெல்லாம் தமது திறமை முதலிய நற்குணங்களைப் புகழப் பெற்றவர். ஆங்கிலேயர், பிரான்ஸியர் முதலிய ஐரோப்பியர்களெல்லாம் தமது விவேக நுட்பத்தை வியந்து பாராட்டும்படி யதிகாரஞ் செலுத்துபவர்

இலக்கிய இடம்

தமிழில் நாவல் என்னும் கலைக்கு வரலாற்றுச் செய்திகளுடன் கற்பனையையும் கலந்து எழுதலாம் என வழிகாட்டிய நாவல் இது

உசாத்துணை