அக்னி நதி(நாவல்)
பதிப்பு
அக்னி நதி உருது மொழியில் எழுதப்பட்ட நாவல். இது வெறுமையின் தரிசனத்தையும் பல்வேறுபட்ட காலத்தின் வரலாற்றையும் ஒருசேர நமக்கு தருவது. முதல் பதிப்பு1959-ல் அவர் எழுதிய அக்னி நதி (ஆக் கா தர்யா) நாவல்தான் அவருடைய மிகப் புகழ்பெற்ற படைப்பு. 3000 ஆண்டு கால இந்திய நாகரிகத்தின் வரலாற்றை ஒரு கதையாகச் சொல்லும் படைப்பு இது. வேத காலத்தில் தொடங்கி, பவுத்தம் இந்தியாவில் வேரூன்றிய காலகட்டம் வழியாக 1956-ல் முடியும் நாவல் இது.
ஆசிரியர்
அக்னி நதியை எழுதியவர் உருது பெண் எழுத்தாளர் குர்அதுல்ஐன் ஹைதர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் நகரத்தில் 1928-ல் ஜனவரி 20-ம் தேதி பிறந்த குர்அதுல்ஐன் ஹைதர், உருது இலக்கிய உலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்கள், சிறுகதைகள், பயண இலக்கியங்களை எழுதியவர். டெய்லி டெலிகிராப், பிபிசி ஆகிய செய்தி நிறுவனங்களில் நிருபராகப் பணியாற்றியவர். 1989-ல் இவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது.படித்த இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த குர்அதுல்ஐன் ஹைதருக்கு இஸ்லாமியக் கல்வியுடன் சேர்ந்து தாராளவாத மேற்கத்திய பாணிக் கல்வியும் அளிக்கப்பட்டது.இந்தியப் பண்பாடு, இஸ்லாமியக் கலாசார விழுமியங்கள் மற்றும் மேற்கத்தியப் பண்பாட்டின் சிறந்த அம்சங்களின் கலவையாக அவரது ஆளுமை உருவானதில் வியப்பேதும் இல்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்த குர்அதுல்ஐன், 1947-ல்இந்தியா சுதந்திரமடைந்த போது தன் தாய் மற்றும் சகோதரனுடன் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார். அங்கேதான் அவரது முதல் நாவல் வெளியானது. ‘மேரே பி சனம்கானே’ (எனது கோயில்களும்தான்) என்ற அவரது முதல் படைப்பு வெளியானபோது ஹைதருக்கு வயது 19. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய துயரங்கள் குறித்த படைப்பு அது.பிரிவினை அனுபவங்களை நேரில் பார்த்த அவர், தன் படைப்புகளிலும் அந்த துயர நிகழ்வுகளின் தடயங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.லண்டனில் பிபிசி செய்தியாளராகப் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.