அகட விகட மகா நாடகம்

From Tamil Wiki
Revision as of 21:37, 21 November 2022 by Tamizhkalai (talk | contribs)
பபூன்ஸ் ஆக்ட் என்னும் அகட விகட மகா நாடகம்

அகட விகட மகா நாடகம் (பபூன்ஸ் ஆக்ட் என்னும் அகடவிகட மகா நாடகம்) நகைச்சுவையை மையபடுத்தி எழுதப்பட்ட சமூக நாடகம். 1911-ல் வெளியான இந்நாடகத்தை எழுதியவர் வேப்பேரி எஸ். அரங்கநாத முதலியார். பாடல்களுடன் கூடிய வசன நடையில் இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது.

பதிப்பு, வெளியீடு

“நமக்குக் கிடைக்கின்ற காலத்தை வீணாக்காது, முன்னோர் பொருளைப் பாவ காரியங்களுக்குச் செலவழிக்காது, நற்காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும்” என்ற போதனையை வலியுறுத்தி எழுதப்பட்ட நாடகம் இது. எழுதியவர், வேப்பேரி எஸ். அரங்கநாத முதலியார். 1911-ல், ஜீ. ஆர். பாலைய நாயுடுவின் சென்னை சூளை பாலவிர்த்தி போதிநி பிரஸில் இந்நூல் அச்சிடப்பட்டது. தொடர்ந்து பல பதிப்புகள் கண்டது. நான்காம் பதிப்பு, 1918-லும், ஐந்தாம் பதிப்பு 1922-லும் வெளியானது. நான்காம் பதிப்பின் விலை ஆறு அணா.

நாடகத்தின் நோக்கம்

இந்த நூலின் நோக்கம் குறித்து, வேப்பேரி எஸ். அரங்கநாத முதலியார், “சர்வேஸ்வானாகிய கடவுள் நமக்குத் தந்திருக்கும் அருமையான காலத்தையும் , பொருளையுங்கொண்டு நம்முடைய கீர்த்திக்காகவும், பிறரை நல்வழியில் சந்தோஷிக்கச் செய்யவும் உபயோகப்படுத்திப் பிறகு பரத்திற்கு அருகர்களாகவேண்டியது தர்ம சாஸ்திரத்தின் கட்டளையாகவிருக்க, அதைத் தெரிந்தும் மறந்தவர்களாய்ச் சிலர் தம் வாழ்நாளை வீணாளாக்கியும், தம் பொருள்களைப் பாப மார்க்கத்திற்கே விரையஞ்செய்தும், பிறந்த குடும்பத்தின் பேரைக் கெடுத்தும், தீயோர் என்ற நாமத்தைத் தேடிக் கொள்வதுமன்றி, தாங்களும் பரத்துக் காளாகாமற் போகிறார்களென்ற பரிதாபத்தால், உலகக் காட்சியினாலும் கேள்வியினாலு மெனக்குண்டாகிய அபிப்பிராயத்தைப் பெரியோர்கள் முன்னிலையில் விகடநாடக ரூபமாக வெளியிடத் துணிந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விகட விநாயகர் சுலோகம்
தாசி கோகிலம் சொல்லிய அகட விகடக் கதைகள்

கதை

நகைச்சுவையை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது. ‘சுக்லாம் பரதரம்’ என்னும் துதிக்கு விகட விநாயகர் அளிக்கும் விளக்கம் அக்காலச் சிந்தனைப் போக்கைக் காட்டுகிறது.

மங்காணி மகாராஜன் என்பவன், தன்னை அரசன் என்று நினைத்துக் கொண்டு, அரசவை நடத்துவதாகக் கூறித் தன் முன்னோர் சேர்த்து வைத்திருந்த பொருள்கள் அனைத்தையும் தாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துப் பொருளை விரயம் செய்வதுடன் காலத்தையும் வீணாக கழிப்பதே நாடகத்தின் கதையாக அமைந்துள்ளது.

நகைச்சுவையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும், சமூக நியதிகளைப் போதிக்கும் வகையில் இந்நாடகம் அமைந்துள்ளது. நாடகத்தின் இறுதியில், 'தாசி கோகிலம் சொல்லிய அகடவிகடக் கதைகள்’ என்னும் தலைப்பில் சிந்திக்க வைக்கக் கூடிய நகைச்சுவைத் துணுக்குகள் பல இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை

பபூன்ஸ் ஆக்ட் என்னும் அகடவிகட மகா நாடகம்: தமிழ் இணைய நூலகம் {{Standardised}