சீயமங்கலம் ஜினப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 17:37, 11 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வட ஆர்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுகாவைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களுள் சீயமங்கலமும் ஒன்றாகும். இது தேசூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வட ஆர்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுகாவைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களுள் சீயமங்கலமும் ஒன்றாகும். இது தேசூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்குள்ள பாறையொன்றில் பல்லவ மன்னனாகிய முதலாம் மகேந்திரவர்மனது ஆட்சியின் போது தோற்றுவிக்கப் பட்ட சைவ சமயக் குடைவரைக் கோயில் ஒன்றும் உண்டு. இதற்கு சற்று தொலைவிலுள்ள சிறிய மலையில் இயற்கையாக உள்ள குகைகள் உள்ளன. இவை பண்டைக் காலத்தில் சமணப் பள்ளிகளாகத் திகழ்ந்திருக்கின்றன.

இந்த மலையிலுள்ள குகைகளில் முதன் முதலாக எப்போது சமணத் துறவியர் உறைந்தனர் என்பதனை உறுதியாகக் கூறுவதற்கில்லை. மிக்கவாறும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் மகேந்திர பல்லவன் குடைவரைக் கோயில் ஏற்படுத்துவதற்கு முன்பே இங்கு சமண சமயம் வேரூன்றியிருக்கலாம். ஏனெனில் முன்பு சமணத் துறவியர் வாழ்ந்த பல மலைகளில் முதலாம் மகேந்திர பல்லவன் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்து சமயக் குடைவரைக் கோயில்கள் ஏற்படுத்தியிருப்பது ஈண்டு நினைவிற் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

இச்சீயமங்கலத்திலுள்ள மலையில் இரண்டு குகைப் பள்ளிகளைக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் மேலைக் கங்க அரசனாகிய இரண்டாம் இராஜமல்லன் அமைத்தான் என அறிய வருகிறோம். இவற்றுள் ஒன்று மட்டிலும் இன்றளவும் நல்ல நிலையிலிருக்கிறது. இரண்டாவது பள்ளி எது வென்று அறிவதற்கியலவில்லை. இக்குகைப்பள்ளி தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ அறுபது அடி உயரத்திலுள்ளது. சிறிய அளவிலான இக்குகையின் மேற்பகுதியிலுள்ள பாறை சற்று முன்னோக்கி நீண்டிருக்கிறது. இந்த பாறையில் மூன்று தொகுதிகளாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

சிற்பங்கள்

பாறையின் முகப்பில் நீண்ட பள்ளமான கோடு ஒன்று வெட்டப்பட்டிருக்கிறது. இதற்கு மேற்பகுதியில் முதலாவதாக மகாவீரர் சிற்பமும், அடுத்து பார்சுவநாதர் திருவுருவமும், மூன்றாவதாக பாகுபலியின் சிற்பமும் சிறப்புற படைக்கப்பட்டிருக்கின்றன. மகாவீரர் சிங்கங்களைக் கொண்ட பீடத்தில் எழிலுற வீற்றிருக்கிறார். இவரது தலைக்குப் பின்புறம் அரை வட்ட பிரபையும். அதற்கு மேல் முக்குடையும் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவரது இரு மருங்கிலும் சாமரம் வீசுவோர் மெய் மறந்த நிலையில் நிற்கின்றனர்.

நடுநாயகமாகத் நிகழும் பார்சுவதேவர் தேவர் தலை நாகத்தின் நிழலில் அருட்கோலம் கொண்டு நிற்கிறார். இவரது பின்புறம் பாம்பின் உடற் பகுதி வளைந்து செல்வதாகக் காட்டபட்டிருக்கிறது. இவரது வலது புறம் தரணேந்திரன் முழங்காலிட்டு வணங்கியவாறும், இடது புறம் பத்மாவதி யக்ஷி கரங்களைத் தூக்கி அஞ்சலி செலுத்தியவாறும் திகழ்கின்றனர். பார்சுவதேவரின் தலைக்கு இணையாக வலப்புறத்தில் கமடன் பாறையினைத் தூக்கி தீர்த்தங்கரரின் மீது வீசுவதற்குத் தயாரான நிலையிலிருக்கிறான்.

இச்சிற்பத் தொகுதியினை அடுத்து பாகுபலி தவமேற்கொண்டு அசைவற்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவரது இரு மருங்கிலும் இவருடைய சகோதரிகள் நிற்கின்றனர். இத்தேவரது தலைக்கு இணையாக வலதுபுறத்தில் இரு கந்தர்வர்கள் வியப்பு மேலீட்டால் பாகுபலியை உற்று நோக்கியவாறு உள்ளனர். இடது புறத்தில் இந்திரன் தமது வாகனமாகிய ஐராவதம் என்னும் யானை மீது அமர்ந்து அசைவற்ற தவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பாகுபலியின் தவவலிமையைக் காண வருவதாகச் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. ஆடை அலங்காரங்கள் அதிக மின்றி எழிலுருவாய் படைக்கப்பட்ட இக்கலைச் செல்வங்கள் கி. பி. 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். இவற்றை மேலைக் கங்க அரசனாகிய இரண்டாம் இராஜமல்லன் தோற்றுவித்தான் என இங்குள்ள சாசனம் ஒன்று பகருகிறது.

கல்வெட்டுக்கள்

சீயமங்கலம் மலைக் குகையில் கங்க அரசனாகிய இரண்டாம் இராஜமல்லனது சாசனம் ஒன்று செய்யுளும், உரை நடையும் கலந்தவாறு காணப்படுகிறது. சிதைந்த நிலையிலுள்ள இச் சாசனம் கி.பி. 893-ஆம் ஆண்டு வித்தியாத்திரி என அழைக்கப் பெற்ற இந்த மலையில் இராஜமல்லன் ஜினராஜாவிற்கென (அருகக் கடவுள்) இரண்டு கோயில்களைத் தோற்றுவித்தான் எனக் கூறுகிறது. மேலும் ஜினேந்திர சங்கத்தின் உட்பிரிவாகிய நந்தி சங்கத்தைச் (நந்திகணத்தை) சார்ந்த அருங்களான்வயம் பற்றிய குறிப்பும் இச்சாசனத்தில் இடம் பெற்றிருக்கிறது[1] கங்க அரசனான இராஜமல்லன் உருவாக்கிய கோயில்கள் இங்கு இரு குகைகளேயன்றி கட்டடக் கோயில்களல்ல. இந்த குகைளைச் சீர் செய்து அவை சமணத் துறவியர் வழிபடுவதற்கேற்ற வகையில் இம் மன்னன் செய்திருக்க வேண்டும். வள்ளி மலையிலும் இந்த அரசன் இயற்கையாக உள்ள குகையினை சமணக் கோயிலாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பாழிகளில் ஜினேந்திர சங்கத்திற்குட்பட்ட நந்திகணத்தைச் சார்ந்த துறவியர் வசித்து வந்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. இராச மல்லன் சமண சமயத்திற்கு ஆற்றிய அருந்தொண்டினை கர்நாடக மாநிலத்திலுள்ள கல்வெட்டுக்கள் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள சாசனங்கள் சிலவும் விளக்குபவையாகத் திகழ்கின்றன.

சீயமங்கலம் மலையின் அடிவாரத்திலுள்ள பாறையொன்றிலும் செய்யுளும், உரை நடையும் கலந்த கி பி. 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதில் திராவிட சங்கத்துட்பட்ட நந்திகணத்து அருங்களான் வயம் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. மேலும் அப்போது மண்டலாச்சாரியாராகத் திகழ்ந்த வஜ்ர நந்தி யோகிந்திரர் இந்த மலையிலுள்ள கோயிலுக்கு ஏறிச்செல்வதற்கேற்ற வகையில் படிக்கட்டுக்கள் அமைத்திருக்கிறார் எனவும் அறியக் கிடக்கிறோம்.[2] இதிலிருந்து கி பி. 10-ஆம் நூற்றாண்டி லும் இங்குள்ள பள்ளிகளில் நந்திகணத்தைச் சார்ந்த துறவியர் வாழ்ந்திருக்கின்றனர் எனவும், அந்த காலத்தில் சமண சமய அமைப்பிற்குத் தலைமைப் பொறுப்பிலிருந்தவர் வஜ்ர நந்தி யோகிந்திரர் என்பதும் தெளிவாகிறது. கி.பி. 9,10-ஆம் நூற் றாண்டுகளில் மட்டுமின்றி தொடர்ந்து இங்கு சமண சமயம் செல்வாக்குடன் இருந்திருக்கலாம். ஆனால் அதனை விளக்குவதற்குப் போதிய சான்றுகள் எவையும் இல்லை.


[1] P. Venkatesan “Two Jaina inscriptions from Siyamangalam,” Journal of the Epigraphical Society

of India, vol. II. 1984, pp. 21-23

[2] SII, vol. VII, No 441; ARE, 227-A/1901