சி.சரவணகார்த்திகேயன்
சி. சரவணகார்த்திகேயன் (13.8.1984) தமிழில் புனைகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிவரும் எழுத்தாளர். அறிவியல் அரசியல் சினிமா என வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரை நூல்களை எழுதுகிறார்.
பிறப்பு,கல்வி
சி.சரவணக் கார்த்திகேயன் கோவை சிங்காநல்லூரில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் இரா. சின்னதுரை - சி. தெய்வாத்தாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ஈரோடு பிரசாந்தி வித்யா பவன்பள்ளியில் ஆரம்பக்கல்வியும், சின்னியம்பாளையம் பிரசாந்தி வித்யா பவன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் ஈரோடு , மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்தில் மேல்நிலைக்கல்வியும் முடித்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
பார்வதி யமுனாவை மார்ச் 9, 2008 ல் காதல் மணம் புரிந்தார். குழந்தைகள் ஞானி ,போதி. கணினிப்பொறியாளராக பெங்களூரில் பணிபுரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சி.சரவணக் கார்த்திகேயன் 2007ல் எழுத்துலகில் பிரவேசித்தவர். இதுவரை 27 புத்தகங்கள் எழுதியுள்ளார். குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவில் இவரது ஒருத்தி நினைக்கையிலே.. என்பதை வைரமுத்து முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி முழு விஞ்ஞான, வரலாற்றுத் தகவல்களுடன் இவர் எழுதிய சந்திரயான் என்ற நூல் தொழில்நுட்பப் பிரிவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது.
சி.சரவணக் கார்த்திகேயன் நான்கு களங்களில் கட்டுரை நூல்களை எழுதி வருகிறார். 1.அறிவியல் அறிமுகம். 2. திரைப்படம் 3. அரசியல் 4. சமூகவியல். இந்திய ராக்கெட் இயலின் சரித்திரத்தை குங்குமம் இதழில் தொடராக எழுதினார் (ஆகாயம் கனவு அப்துல் கலாம்). பின் சூரியன் பதிப்பகம் மூலம் அது நூல் வடிவம் பெற்றது. 96 திரைப்படம் பற்றி ரசனை அடிப்படையில் 96: தனிப்பெருங்காதல் என்ற முழு நூல் ஒன்றை எழுதியுள்ளார். 2019ல் இந்திய அரசியல் சாசனத்தை முன்வைத்து எழுதிய கட்டுரைகள் இந்தி தேசிய மொழியா? என்ற தொகுப்பாகவும் சமூக, அரசியல் நிகழ்வுகளை ஒட்டிய கட்டுரைகள் அநீதிக்கதைகள் என்ற தொகுப்பாகவும் வெளிவந்தன. இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு Girls, Goddesses & Gentlewomen என்ற மின்னூலாக வெளியாகியுள்ளது (2020).
இவரது முதல் நாவலான ’ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்ப காலத்தில் புனைவில் சுஜாதாவும் கவிதையில் வைரமுத்துவும் பலமான பாதிப்பு செலுத்தியதாகவும். பிறகு சில காலத்துக்கு சாரு நிவேதிதா, மகுடேசுவரன் மற்றும் மனுஷ்ய புத்திரனின் சாயல் இருந்ததென்றும் கூறுகிறார்.
இதழியல்
தமிழ் என்ற மின்னிதழ் நடத்தி வருகிறார். இதுவரை ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன் ஆகியோரை விரிவான, ஆழமான நேர்காணல் செய்து அதில் வெளியிட்டார். அவை மும்மூர்த்திகள் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. கலைஞரின் இலக்கியப் பங்களிப்புகளை முன்வைத்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார்.
நூல்பட்டியல்
நாவல்கள்
- ஆப்பிளுக்கு முன்
- கன்னித்தீவு
சிறுகதைத்தொகுதிகள்
- இறுதி இரவு.
- மியாவ் .
- கிருமி
- 69 . நுண்கதை
கட்டுரைகள்
- சேர நன்னாட்டிளம் பெண்கள்
- பிரியத்தின் துன்பியல் (மின்னூல்)
- கமல் ஹாசனின் அரசியல் (மின்னூல்)
- ஆகாயம் கனவு அப்துல் கலாம். விஞ்ஞானம்
- வெட்கம் விட்டுப் பேசலாம் . வரலாறு
- குஜராத் 2002 கலவரம் . வரலாறு
- கிட்டத்தட்ட கடவுள்
- சந்திரயான் . விஞ்ஞானம்
- 96: தனிப்பெருங்காதல். சினிமா
- ஐ லவ் யூ மிஷ்கின்.சினிமா
- ரதி ரகசியம்.உரை
- ஒரு கோப்பை பிரபஞ்சம் -பத்தி
- அநீதிக் கதைகள்
- இந்தி தேசிய மொழியா?
- பெண் + கள் + ஊர்
- மும்மூர்த்திகள் -நேர்காணல்‘
கவிதைகள்
- பரத்தைக்கூற்று
- தேவதைபுராணம்
கட்டுரை - ஆங்கிலம்
- Girls, Goddesses & Gentlewomen - 2020 [Experience] - Kindle E-Book
விருதுகள்
- உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருது [இணையம்] - 2017
- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூல் பரிசு [தொழில்நுட்பம்] - 2009
- குங்குமம் இதழில் கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுத்த முத்திரைக் கவிதை - 2007
- திருப்பூர் இலக்கிய விருது [படைப்பிலக்கியம்] - 2019
- பிரதிலிபி - அகம் நடத்திய ‘ஞயம் பட வரை’ கட்டுரைப் போட்டி [முதல் பரிசு] - 2016
- தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி [ஆறுதல் பரிசு] - 2018
- அந்திமழை இதழ் - நம்பிக்கை நட்சத்திரம் [பன்முகத் திறமை] - 2015
இணைப்புகள்
- சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’ | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- கன்னித்தீவு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- Amazon.com: C.Saravanakarthikeyan: Books, Biography, Blog, Audiobooks, Kindle