ராணிமைந்தன்

From Tamil Wiki
Revision as of 16:09, 4 February 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added, Interlink Created:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராணிமைந்தன் (படம் நன்றி: SocialTalkies Youtube Page)

கு. ராதாகிருஷ்ணன் (ராணிமைந்தன்) (பிறப்பு: அக்டோபர் 15, 1944) ஒரு தமிழக எழுத்தாளர். இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றினார். லண்டன் பி.பி.சியின் தமிழோசை சேவையில் நேயர் நல்லுறவு அதிகாரியாகப் பணி புரிந்தார். 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கு. ராதாகிருஷ்ணன் என்னும் ராணிமைந்தன் அக்டோபர் 15, 1944-ல் பிறந்தார். இளங்கலை வணிகவியல் பயின்றார். Certified Associate of Indian Institute of Bankers நிறைவு செய்தார்.

ராணிமைந்தன் இளம்வயதில் (படம் நன்றி: தினமணி)

தனி வாழ்க்கை

ராணி மைந்தன், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளையில் அக்டோபர் 1965 முதல் மார்ச் 1997 வரை  32 ஆண்டுகள் பணியாற்றினார். பின் லண்டன் பி.பி.சியின் தமிழ் வானொலிப் பிரிவான 'தமிழோசை’ யில் நல்லுறவு அதிகாரியாகச் சென்னையிலிருந்து பணிபுரிந்தார். ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகி வரும் 'தமிழ் முழக்கம்’ பண்பலை வானொலியில் செய்தி வாசிப்பாளராகச் சென்னையிலிருந்து பணியாற்றினார். மனைவி கஸ்தூரி. மகன்கள்: நிர்மல், விஜய்.

இதழியல் வாழ்க்கை

இதழியல் துறையில் விருப்பம் கொண்டு சுதந்திரப் பத்திரிகையாளராக ‘சாவி’ இதழில் பணியாற்றினார். கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். சாவி ஆசிரியராகப் பணிபுரிந்த 'தினமணி கதிர்', 'குங்குமம்' இதழ்களில் பல பேட்டிக் கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், நாட்டு நடப்புகளை எழுதினார்.

ராணிமைந்தன் நூல்கள்
சிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை புத்தக வெளியீடு
தனிமரத் தோப்பு: எம்.பி. நிர்மல் புத்தக வெளியீடு (படம் நன்றி: SocialTalkies Youtube Page)
அப்பச்சி ஏவி.எம். புத்தக வெளியீட்டு நிகழ்வு (படம் நன்றி: SocialTalkies Youtube Page)

இலக்கிய வாழ்க்கை

இளம் வயது முதலே ராணிமைந்தன் இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். சாவி இதழில் மொழிபெயர்ப்புத் தொடராக எழுதிய ‘நாயர்ஸான்’ என்பதுதான் இவரது முதல் வாழ்க்கை வரலாற்று நூல். தொடர்ந்து சாவியின் வேண்டுகோளுக்கிணங்க ‘ராசாராம்-60’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். சாவியினுடனான தனது அனுபவங்களை ‘சாவி-85’ என்ற பெயரில் எழுதினார். சாவியின் மறைவுக்குப் பின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதுவதில் முனைப்புக் கொண்டார். எம்.பி. நிர்மல், என். கிருஷ்ணசாமி, ஏவி.மெய்யப்பன், எஸ்.பி. முத்துராமன் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தினார்.

ராணிமைந்தன்30க்கும் மேற்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். 70க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். தனது வாழ்க்கை அனுபவங்களைத் தற்போது நூலாக எழுதி வருகிறார்.

நாடக வாழ்க்கை

ராணிமைந்தன், நாடகங்களின் மீது ஆர்வம் கொண்டு சில காலம் நாடகங்களில் நடித்தார். பின் நேரமின்மை காரணமாக, நாடகங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

விருதுகள்

  • சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2002)
  • சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழ் வாகைச் செம்மல் விருது (2003)
  • ஃபிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய நூல் வேந்தர் விருது (2006)
  • அகில இந்திய சமூக நல அமைப்பு, புதுச்சேரி வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2009)
  • ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய சான்றோர் விருது (2010)
  • தமிழக அரசின் கலைமாமணி விருது (2011)
  • சென்னை தேவன் அறக்கட்டளை வழங்கிய தேவன் நினைவுப் பதக்கம் (2011)
  • சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்கான சேக்கிழார் விருது (2016)
  • இலக்கியச் சிந்தனை வழங்கிய, 2017 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான விருது - 'ராம்கோ ராஜா' நூலுக்காக.
  • சென்னை கம்பன் கழகம் வழங்கிய திருமதி சி.எம்.பிரேமகுமாரி நினைவுப்பரிசு (2018)
எழுத்தாளர்கள் சாவி, சுஜாதா, சிவசங்கரி, ரவிபிரகாஷ் உடன் ராணிமைந்தன்

இலக்கிய இடம்

வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதுவதில் தேர்ந்தவரான ராணிமைந்தன், “வாழ்க்கை வரலாறு என்பது ஒருவரது சாதனைகளை மட்டும் சொல்வதல்ல; அவரது சரிவுகள், தோல்விகள், வீழ்ச்சி, அதிலிருந்து அவர் எழுந்து வந்த விதம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது வாசிப்பவர்களுக்கு ஒரு பாடத்தைத் தருவதாக, அனுபவத்தைத் தருவதாக அமையும். அந்தப் பாணியையே தான் பின்பற்றி எழுதி வருகிறேன்” என்கிறார். ராணிமைந்தனின் எம்.எஸ்.வி. நூல் குறித்து விமர்சகர் ஆர்வி, “ராணிமைந்தன் சுவாரசியமான பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வாழ்க்கை வரலாறு இல்லை. இது எம்எஸ்வியின் புகழ் பாடும் புத்தகம்.” என்கிறார்.

வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதுவதில் முன்னோடி எழுத்தாளராகச் செயல்பட்டு வருகிறார் ராணிமைந்தன்.

ராணிமைந்தன் புத்தகங்கள்

நூல்கள்

  • நாயர்ஸான்
  • ராசாராம் - 60
  • சாவி 85
  • எம்.பி. நிர்மல்
  • ஜஸ்டிஸ் ஜெகதீசன்
  • முஸ்தபா
  • தடைகள் பல தாண்டி...
  • ஊடகத் தேனீ ஸ்ரீதர்
  • என் காவல் சுவடுகள்
  • ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்
  • மலைச்சாமி ஐ.ஏ.எஸ்.
  • டாடா ஸ்டீல்
  • ராம்கோ ராஜா
  • பயணங்கள் பாடங்கள்
  • சிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை
  • அப்பச்சி ஏவி.எம்.
  • ஏ.வி.எம். எங்கள் பார்வையில்
  • ஏவி.எம். தந்த எஸ்பி.எம்.
  • உழைப்பால் உயர்ந்தவர்
  • எலும்போடு ஒரு வாழ்க்கை
  • பிரசாத் என்றொரு தாய்
  • இறைவன் நெய்த நான்
  • நான் - இவர்கள்
  • இந்திய மலர்கள் இரண்டு
  • நோக்கமிகு வாழ்க்கை
  • டாக்டர் பி. கே. பாஸ்கரன்
  • நான்-மருத்துவம்-மற்றவை
  • எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
  • நிர்வாக ஆளுமை என். ராமதாஸ் வாழ்க்கை வரலாறு
  • ஒரு நீதியரசரின் நெடும் பயணம்
  • சங்கீதப் பெருங்கடல் -பாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாறு
  • ஐ.பி.எம்.
  • என் வாழ்க்கை ஓடம் வழங்கிய பாடம்
  • திருமறைக்காட்டுத் திருமகன்
  • சுல்தானா
  • கலைமாமணி வி.சி. குகநாதன்
  • என். கிருஷ்ணசாமி
  • அடையாறில் இன்னோர் ஆலமரம்
  • வேளாண் காதலர் வெங்கடபதி
  • மதிஒளி என்றொரு மந்திரம்
  • இலக்கிய வீதி இனியவன் வாழ்க்கை வரலாறு
  • வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு
  • இசை வானில் ஒரு பயணம் - பிரமீளா குருமூர்த்தி
  • அ.அ.ஜின்னா  தி,மு.க.முன்னாள் எம்.பி.வாழ்க்கைப் பாதை

உசாத்துணை