கணபதி ஐயர்
கணபதி ஐயர் (1709) தமிழறிஞர், சைவ அறிஞர், குருக்கள், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வால கிருஷ்ண ஐயருக்கு 1709-ல் மகனாகப் பிறந்தார்.
சைவப்பணி
பிரம்மச்சாரிய விரதம் பூண்ட சைவ குருக்கள். இவரை பஞ்சலக்கண குருக்கள் என்றும் அழைப்பர். வடதேசத்திற்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவையாற்று வைரவ சந்நிதியில் பக்தியேறப்பெற்று வைரவர் பேரில் பதிகம் பாடினார். இவர் வடதேச யாத்திரைக்குப்பின் வட்டுக்கோட்டை திரும்பினார்.
இலக்கிய வாழ்க்கை
யாழ்ப்பாணம் மதகலில் வாழ்ந்த சிற்றம்பலப் புலவர் இவரின் மாணவர். ஆண்டுதோறும் வேதாரணியத்திற்கு சென்று திரும்பும் இவர் தோணிக்காரருக்குப் பயன்படும் வகையில் கப்பற்பாட்டு எழுதினார். இதில் ஸ்கந்த புராணம் முற்றிலும் அடங்கியுள்ளது. மலையகந்தினி நாடகம், அலங்காரரூபநாடகம், அதிரூபவதி நாடகம் ஆகிய நாடகங்களை எழுதினார். வண்ணார்பண்ணையிலுள்ள வைத்தியலிங்க சுவாமியை பாட்டுடைத்தலைவனாக்கி வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி எழுதினார். வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம் பாடினார். பருத்தித்துறைக் சித்திவிநாயகர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் பாவிகற்பம் பெற்ற நூறு கவிதைகளும் பாடினர். பல தனிப்பாடல்களும் பாடினார்.
மறைவு
கணபதி ஐயர் 1784-ல் தனது எழுபத்தி ஐந்தாவது வயதில் காலமானார்.
நூல்கள் பட்டியல்
பாட்டு
- கப்பற்பாட்டு
குறவஞ்சி
- வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி
பதிகம்
- வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம்
நாடகம்
- அதிரூபவதி நாடகம்
- மலையகந்தினி நாடகம்
- அலங்காரரூபநாடகம்
- வாளபிமன் நாடகம்
பிற
- சித்திவிநாயகர் பாவிகற்பம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.