லக்ஷ்மி சேகல்
லக்ஷ்மி சேகல் (கேப்டன் லக்ஷ்மி; லக்ஷ்மி சுவாமிநாதன்; லட்சுமி ஷாகல்) (அக்டோபர் 24, 1914-ஜூலை 23, 2012) நேதாஜியின் ’ஜான்சி ராணி பெண்கள் படை’யின் முதல் கேப்டன்; இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர்; சமூக சேவகர். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
லக்ஷ்மி சேகல், அக்டோபர் 24, 1914 அன்று, சென்னையில், சுவாமிநாதன் - ஏ.வி.அம்முக்குட்டி இணையருக்குப் பிறந்தார். தந்தை சுவாமிநாதன் வெளிநாட்டில் சட்டம் பயின்றவர். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர். தாயார் அம்முக்குட்டி சமூக சேவகி. காங்கிரஸ் இயக்க ஆதரவாளர். சுதந்திரப் போராட்டப் போராளி. தொடக்கக் கல்வியை மிஷனரி பள்ளியில் பயின்றார். உயர் கல்வியை லேடி வெலிங்டன் கல்லூரியில் கற்றார். ராணி மேரிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி பயின்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். தொடர்ந்து மகளிர் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் ஆகியவற்றில் பட்டயம் பெற்றார்.
தனி வாழ்க்கை
லக்ஷ்மி, சென்னை கஸ்தூரிபா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். தந்தை இறந்ததாலும், தாயும் சகோதரியும் அமெரிக்காவில் வசித்ததாலும், சென்னையில் வசிக்க விரும்பாமல், 1940-ல் சிங்கப்பூருக்குச் சென்றார். அங்கு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தார். ஏழை மக்கள் பயன்பெறும் வண்ணம் ஒரு மருத்துவ மையத்தைத் தோற்றுவித்து கட்டணமில்லாமல் மருத்துவம் பார்த்தார்.