under review

திரிகூடராசப்ப கவிராயர்

From Tamil Wiki
Revision as of 18:08, 1 January 2023 by Logamadevi (talk | contribs)

திரிகூடராசப்ப கவிராயர் (திரிகூடராசப்பர்) 18-ஆம் நூற்றாண்டில், நாயக்கர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவரின் அனைத்து படைப்புகளும் திரிகூடமலை எனும் குற்றாலத்தைப் பாடுபொருளாகக் கொண்டவை.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் ராஜப்பன். நாங்குனேரிக்கு அருகில் உள்ள விஜயநாராயணத்தில் பிறந்தார். இளம்வயதில், தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரத்திற்கு குடிபெயர்ந்தார். திருக்குற்றால நாதர் கோயிலுக்கு பூமாலைகள் தொடுக்கும் வேலையையும், உழவாரப் பணிகளையும் செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

திரிகூடராசப்பர் சிற்றிலக்கியங்களை இயற்றினார். வடகரை அரசனான சின்னநஞ்சாத்தேவரின் அவைப்புலவராக இருந்தார். மதுரையை ஆண்ட முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கரின் ஆதரவைப் பெற்றிருந்தார். குறவஞ்சி நாடகத்தை முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றி "குறவஞ்சி மேடு" எனும் நிலப்பகுதியை கொடையாகப் பெற்றதாக திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் உள்ள "குறவஞ்சி மேட்டு செப்புப்பட்டயம்" தெரிவிக்கிறது.

திருக்குற்றாலக் குறவஞ்சி, 'குறவஞ்சி' வகைமையுள் தலையாயது என்று கருதப்படுகிறது.

ஆ முத்தையா எழுதி, சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள "இந்திய இலக்கிய சிற்பிகள்" நூல்வரிசையில் "திரிகூடராசப்ப கவிராயர்" எனும் நூல் இவரை குறித்தும், இவரின் நூல்களின் திறனாய்வு குறித்தும் தகவல்களைத் தருகிறது.

நூல்பட்டியல்

  • குற்றாலக் குறவஞ்சி
  • குற்றாலத் தலபுராணம்
  • குற்றால மாலை
  • குற்றாலச் சிலேடை வெண்பா,
  • குற்றால யமக அந்தாதி
  • குற்றால நாதர் உலா
  • குற்றால ஊடல்
  • குற்றாலப் பரம்பொருள் மாலை
  • குற்றாலக் கோவை
  • குழல்வாய்மொழி கலிப்பா மாலை
  • குழல்வாய்மொழி கோமளமாலை
  • குழல்வாய்மொழி வெண்பா அந்தாதி
  • குழல்வாய்மொழி பிள்ளைத்தமிழ்
  • திருக்குற்றால நன்னகர் வெண்பா
  • நன்னகர்ச் சிலேடை வெண்பா

உசாத்துணை


✅Finalised Page