எஸ். செந்தில்குமார்

From Tamil Wiki
Revision as of 13:24, 18 January 2022 by Jeyamohan (talk | contribs)
எஸ்.செந்தில்குமார்

எஸ். செந்தில்குமார் (20-11-1973) தமிழ் எழுத்தாளர். தேனி மாவட்டத்தின் மரபான மக்கள், அதன் உயிர்த்தன்மை, களம் என ஆழ அகலமாக வேரூன்றி நிற்பவர்.காமம் வஞ்சம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை, அடித்தள வாழ்க்கைப் பின்னணியில் நேரடியாக எழுதுபவர்களின் வரிசையில் முக்கியமானவர். பேசும் புதியசக்தி மற்றும் பொம்மி மாத இதழின் பொறுப்பாசிரிராக தற்போது திருவாரூரில் பணிபுரிகிறார். 2009ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான ‘சுந்தரராமசாமி விருது’ பெற்றவர்.

பிறப்பு,கல்வி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கா.சுப்பிரமணியன், சு.முருகேஸ்வரி ஆகியோருக்கு மகனாக 1973 நவம்பர் 20 ஆம் நாள் பிறந்தார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஐ.கா.நி. ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை போடிநாயக்கனூரிலுள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் முடித்தார்.

தனிவாழ்க்கை

மலர்விழியை நவமபர் 16, 2005’ல் மணம் புரிந்தார். ஒரே மகள் மஞ்சுளா காதம்பரிக்கு 15 வயதாகிறது.

இலக்கிய வாழ்க்கை

எஸ்.செந்தில்குமாரின் முதல் கவிதை கனவு இதழில் 1996 ல் வெளியானது. அவ்வாண்டே முதல் சிறுகதை ’காணாமல் போனவர்கள்’ கணையாழியில் வெளியானது. தேனிமாவட்டத்தை பின்புலமாகக் கொண்ட எஸ்.செந்தில்குமாரின் கதைகள் நுண்ணிய தகவல்களை தொடர்ச்சியாக அடுக்கி விரிந்த நிலக்காட்சியையும் மானுடமுகங்களையும் உருவாக்கி ஒரு நிகர்வாழ்க்கையை காட்டுகின்றன. வன்முறை காமம் ஆகியவற்றை நுணுக்கமாகக் காட்டுபவை இவருடைய படைப்புக்கள். அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை இவரது பெரும்பாலான கதைகள். பொற்கொல்லர்களின் வாழ்க்க்கையை சித்தரிக்கும் காலகண்டம், மலையில் கழுதைகள் வழியாக சரக்குப்போக்குவரத்து செய்பவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கழுதைப்பாதை போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள். தனது இலக்கிய செயல்பாட்டிற்கு உத்வேகமாக எழுத்தாளர் அசோகமித்திரனை குறிப்பிடுகிறார்.

நூல்பட்டியல்

நாவல்கள்
  • ஜீ. சௌந்தரராஜனின் கதை 2007 உயிர்மை பதிப்பகம்
  • முறிமருந்து 2009 தோழமை பதிப்பகம்
  • நீங்கள் நான் மற்றும் மரணம் 2010 தோழமை பதிப்பகம்
  • காலகண்டம் 2013 உயிர்மை பதிப்பகம்
  • மருக்கை 2016 உயிர்மை பதிப்பகம்
  • கழுதைப்பாதை 2019 ஜீரோ டிகிரி பதிப்பகம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • வெயில் உலர்த்திய வீடு
  • சித்திரப்புலி
  • மஞ்சள் நிற பைத்தியங்கள்
  • விலகிச்செல்லும் பருவம்
  • மழைக்குப்பிறகு புறப்படும் ரயில் வண்டி
  • அலெக்ஸாண்டர் என்கிற கிளி
  • அனார்கலியின் காதலர்கள்
  • சிவப்புக்கூடை திருடர்கள்
கட்டுரைத்தொகுப்பு
  • சிறுகதை (தமிழ்கதைகள் குறித்த கட்டுரைகள்)
கவிதைத் தொகுப்புகள்
  • குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள்
  • சமீபத்திய காதலி
  • முன்சென்ற காலத்தின் சுவை (கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியிடு)

விருதுகள்

  • 2009ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிக்களுக்கான ‘சுந்தரராமசாமி விருது’
  • 2013ஆம் ஆண்டிற்காக SRV பள்ளி நிறுவனத்திலிருந்து வழங்கிய படைப்பூக்கத்திற்கான தமிழ் விருது.
  • 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா அறக்கட்டளையிலிருந்து வழங்கிய சுஜாதா சிறுகதை விருது.
  • 2018ஆம் ஆண்டிற்கான கோவை வாசகர் வட்டமும் விஜயா பதிப்பகமும் இணைந்து வழங்கிய கவிஞர் மீரா விருது.
  • 2018ஆம் ஆண்டிற்கான Sparrow இலக்கிய விருது.

இணைப்புகள்