under review

கல்லுக்குள் ஈரம்

From Tamil Wiki
Revision as of 14:49, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)

To read the article in English: Kallukul Eeram. ‎

கல்லுக்குள் ஈரம்
கல்லுக்குள் ஈரம்.கல்கி

கல்லுக்குள் ஈரம் (1969) ர.சு.நல்லபெருமாள் எழுதிய நாவல். காந்தியின் கொலையின் பின்னணியில் எழுதப்பட்டது. இந்திய விடுதலைப்போராட்டத்தின் கடைசிகாலகட்டத்தை சித்தரிக்கிறது. காந்திய நோக்கு கொண்ட படைப்பு.

எழுத்து, பிரசுரம்

ர.சு.நல்லபெருமாள் காந்தியின் படுகொலை பற்றிய செய்திகளை ஆராய்ந்து நாவலுக்கு பகைப்புலமாக பயன்படுத்தினார். 1966-ல் கல்கி இதழின் வெள்ளிவிழா நாவல்போட்டியில் கல்லுக்குள் ஈரம் இரண்டாம் பரிசு பெற்றது. 1969-ல் நூலாகியது. இப்போட்டியில் உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவல் முதல் பரிசு பெற்றது.

கல்லுக்குள் ஈரம் நான்காம் பதிப்பு (1997) முன்னுரையில் ர.சு.நல்லபெருமாள் 'நாடு சுதந்திரம் பெற நடைபெற்ற போராட்டங்களையும், போராடிய வீரர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் கதையாக எழுத வேண்டும் என்ற ஆசையினால் பிறந்ததுதான் இந்நாவல். எவ்வளவு ஆசையுடனும், துடிப்புடனும் இந்நாவலை எழுதினேனோ அவ்வளவும் நாட்டின் இன்றைய அவலத்தை நினைத்தும் பார்க்கும் போது என்னைவிட்டு நழுவுகின்றன..." என்று எழுதினார்.

கதைச்சுருக்கம்

கதைநாயகனாகிய ரங்கமணியின் தந்தையை வெள்ளையர்கள் ரங்கமணியின் கண்ணெதிரேயே அடித்துக் கொல்கின்றனர். வ.உ.சி.யின் நெருங்கிய நண்பராக இருந்ததுதான் ரங்கமணியின் தந்தை கொல்லப்பட்டதற்கு காரணம். பழிவெறி கொண்ட சிறுவனான அவனை மாற்ற குடும்ப நண்பர் தீக்ஷிதர் காந்தியிடம் அழைத்துச் செல்கிறார். ஆனாலும் ரங்கமணி மனம் மாறவில்லை. காந்தி அவனுக்கு பரிசாகக் கொடுத்த ஏசு சிலையை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறான். சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரங்கமணி படிப்பை விட்டுவிட்டு தீவிரவாதக் கும்பலில் சேர்கிறான். அந்தத்தீவிரவாதக்குழுவின் தலைவரின் மகள் திரிவேணி அகிம்சையிலும் காந்தியத்திலும் நம்பிக்கைகொண்டவள். திரிவேணியின் தியாகம் ரங்கமணியின் மனத்தை மாற வைக்கிறது. அவள் கேட்டுக்கொண்டபடி காந்தியை சந்திக்கச் செல்லும்போது ரங்கமணியின் கண்ணெதிரே காந்தி சுடப்படுகிறார். காந்தி சிறுவயதில் தனக்கு அளித்த சிலுவை விக்ரஹத்தை கையில் வைத்திருந்த ரங்கமணி காந்தியை தாங்கும்போது அந்தச் சிலுவையும் ரத்தத்தால் குளிப்பாட்டப்படுகிறது.

விவாதங்கள், செய்திகள்

கல்லுக்குள் ஈரம் நாவல் தனக்கு பிடித்த படைப்பு என்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்[1]. கமல்ஹாசன் எழுதி இயக்கிய ஹேராம் படத்தின் கதையும் கல்லுக்குள் ஈரம் கதையும் ஏறத்தாழ ஒன்று என்று சொல்லப்பட்டது. அது தற்செயலான ஒற்றுமை என்றாலும் சட்டபூர்வமாக பின்னர் ர.சு.நல்லபெருமாளிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இலக்கிய இடம்

காந்திய இயக்கத்தின் மீதான அவநம்பிக்கை ஐம்பதுகளில் உருவாகியது. அதன்பின் காந்தியை மறுகண்டடைவு செய்யும் படைப்புக்கள் உருவாயின. அவற்றில் ஒன்று கல்லுக்குள் ஈரம். இந்நாவலில் காந்தியின் ரத்தம் ஏசுகிறிஸ்துவின் ரத்தம் போல ஒரு விடுவிக்கும் சக்தியாக உருவகிக்கப்படுகிறது. காந்தி அவர் மறைந்த இருபத்தைந்தாண்டுகளுக்குள் மானுடர் என்னும் நிலையிலிருந்து ஓர் இறையுருவாக ஆவதை இந்நாவல் காட்டுகிறது. 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ஹே ராம் என்னும் திரைப்படம் கல்லுக்குள் ஈரம் கதைக்கு அணுக்கமானது. கல்லுக்குள் ஈரம் கதையின் உணர்வுகளையும் குறியீடுகளையும் அதுவும் முன்வைக்கிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page