being created

நகரா (இசைக்கருவி)

From Tamil Wiki
Revision as of 17:54, 10 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

நகரா (இசைக்கருவி)

‘நகரா’ என்பது, முன்னறிவிப்பு இசைக்கருவி. இது ஒருமுகத் தோலிசைக் கருவி. இசைக்கருவிகளுள் அளவிலும் ஒலிக்கும் திறனிலும் இது மிகப் பெரியது. காலையிலும் மாலையிலும் இறைவனுக்குரிய பூஜையைத் தொடங்க உள்ளதைப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக ‘நகரா’வை அடித்துப் பேரொலியை எழுப்புவர்.

அமைப்பு

நகரா

மரத்தால் பெரிய கோளவடிவை உருவாகி, அதன் வாய்ப் பகுதியைப் பாடம்செய்த பசுங்கன்றின்  தோலால் மூடி, இழுத்துக்கட்டி, அடித்தால் அதிரும்படி உருவாக்கப் பெற்றதுதான் ‘நகரா’. தற்காலத்தில் நகராவை மரத்தால் உருவாக்காமல், செம்பு, பித்தளை, வெங்கலம் அல்லது இரும்பால் உருவாக்குகின்றனர். ஒருவர் நகராவின் முன்னின்று, ஓர் அடி நீளமும் ஓர் அங்குலம் சுற்றளவும் உள்ள சற்று வளைந்த இரண்டு மரக்கம்புகளால் அடித்துப் பேரொலியை எழுப்புவார்.

வரலாறு

மொகலாயர் இந்தக் கருவிக்கு ‘நகரா’ என்று பெயரிட்டனர். இதனை ‘நகடா’, ‘நக்காரா’ என்றும் அழைப்பர். முரசு வடிவிலான இந்த நகரா, மொகலாயர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. அறிவிப்புக் கருவியாக இருந்த நகராவை இசைக்கருவியாகப் பயன்படுத்திய பெருமை மொகலாயர்க்கே உரியது. மொகலாய இசைக்கருவிகளின் தொகுப்பான ‘நவ்பத் கானா’வில், அதாவது அஷ்டாதச வாத்தியங்களுள் (18 வகையான இசைக் கருவிகள்) ஒன்றாக நகராவும் இருந்தது.

மன்னர் திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பூஜை முடிந்த செய்தி அறிய மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை ஒவ்வொரு மைல் இடைவெளியிலும் 50க்கும் மேற்பட்ட நகரா மண்டபங்களை அமைத்திருந்தார். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனுக்கு அபிஷேகம் நிறைவு பெறும் செய்தியை அறிந்துகொள்ள பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரை நகரா மண்டபங்களை அமைத்திருந்தார்.

மன்னர் திப்பு சுல்தான் ‘நக்காரா’ அல்லது ‘நகரா’வை மேலகோட்டை நரசிம்மர் கோவிலுக்குக் கொடையளித்த செய்தி அக்கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி அதிஷ்ட்டானத்தில் சரபோஜி மன்னர் காணிக்கையாக அளித்த பெரிய நகரா உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்ஹாவில் நகரா இசைக்க நகரா மண்டபம் உள்ளது. அங்குச் சற்று சிறிய அளவிலான பழமையான இரண்டு நகராக்கள் உள்ளன. இவை இரண்டும் ஒருவரால் சேர்த்து இசைக்கப்படுகின்றன. இரண்டு நகராக்களைச் சேர்த்து ஒருவரே இசைக்கும் வழக்கம் ராஜஸ்தானில் பரவலாக உள்ளது.

திருக்குடந்தை ஆராவமுதன் கோவிலிலும் பட்டுக்கோட்டை தாலுகா மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் உள்ள தெய்வ நாயக பெருமாள் கோவிலிரும் பழமையான நகரா உள்ளது.

நகரா மண்டபம்

நகரா மண்டபம்

மதுரையின் கிழக்குச் சித்திரை வீதியில் ஸ்ரீ அஷ்ட சக்தி மண்டபத்திற்கு எதிரில் முப்பதடி உயரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அதன் பெயர் ‘நகரா மண்டபம்’.

கி.பி. 1689 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1706 ஆம் ஆண்டு வரை மதுரையை ராணி மங்கம்மாள் ஆண்டார். அவரிடம் அமைச்சராகப் பணியாற்றிய காமாட்டம் அச்சுதராயன்தான் இந்த மண்டபத்தைக் கட்டினார். அவர் பெயரையே இந்த மண்டபத்திற்கு வைத்துள்ளனர். இம் மண்டபத்திலுள்ள கல்வெட்டில் இம் மண்டபம் ‘அச்சராயன் மண்டபம்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது.

இந்த மண்டபத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் சில சிற்பங்கள் உள்ளன. தென்கிழக்குத் தூணில் ராணி மங்கம்மாள் மற்றும் அவரது பேரன் (பெயரன்) விஜயரங்க சொக்கநாதரின் ஆகியோரின் நின்றநிலை உருவச் சிற்பங்கள் உள்ளன. தென்மேற்குத் தூணில் காமாட்டம் அச்சுதராயரின் நின்றநிலை உருவச் சிற்பம் உள்ளது.

இம் மண்டபத்தின் முதற்தளத்தில் 30 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட ஓர் அறை உள்ளது. அதில் ஒரு மீட்டர் உயரமுடைய இரும்பாலான, பெரிய அண்டா வடிவிலான நகராவின் வாய்ப்பகுதியை ஒரு மீட்டர் விட்டமுள்ள பசுங்கன்றுத்தோலால் போர்த்தி மூடி, இழுத்துக்கட்டி, மிகப்பெரிய மரப்பெட்டியில் வைத்துள்ளனர்.

பயன்பாடு

நகரா இசைக்கப்படுதல்

காஞ்சி அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவிலிலும் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணன் திருக்கோவிலிலும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலும் ‘நகரா’ இசைக்கப்படுகிறது. இது நாள்தோறும் இருமுறை (அதிகாலையிலும் மாலையிலும் 4.30மணிமுதல் 5.00மணி வரை) தொடர்ந்து 30 நிமிடங்கள், ஒரு வினாடிகூட நிறுத்தப்படாமல், தாள லயத்துடன் இசைக்கப்படுகிறது. சில மசூதிகளிலும் தர்ஹாக்களிலும் நகரா பயன்பாட்டில் உள்ளது.

உசாத்துணை

[[Category:Tamil Content]]