first review completed

ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி

From Tamil Wiki
Revision as of 07:39, 31 December 2022 by Madhusaml (talk | contribs)
"Mad Ridley" [நன்றி: nparks.gov.sg
'ரப்பர் தந்தை' சர் ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லியின் சிலை, மலேசிய தேசிய பொருட்காட்சியகம் (நன்றி: britishmalaya.home)
Ceylon Herring-bone System (நன்றி: ceylonplanters.lk)

ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி (Hendry Nicholas Ridley) (எச். என். ரிட்லி ;டிசம்பர் 10, 1855 – அக்டோபர் 24, 1956) மலேசியாவின் 'ரப்பர் தந்தை' என அறியப்பட்டவர்,கட்டுரையாசிரியர், இதழாசிரியர், தாவரவியலாளர். சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

எச். என். ரிட்லி டிசம்பர் 10, 1855-ல் இங்கிலாந்தில் உள்ள மேற்கு ஹார்லிங்கனில் பிறந்தார். எச். என். ரிட்லியின் தந்தை ரெவெரென்ட் ஒலிவர் மத்யூ ரிட்லி (Reverend Oliver Matthew Ridley). தாயார் லொய்சா போல் (Louisa Pole). ரிட்லி கைக் குழந்தையாக இருக்கும் போதே தாயார் இறந்து விட்டார்.

ரிட்லி ஹைலிபூரி (Haileybury) எனும் போர்டிங் பள்ளியில் இடைநிலை கல்வி வரை பயின்றார். 1877-ல் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

தொழில், திருமணம்

எச். என். ரிட்லி 1880-ல் பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலையில் தாவரவியல் துறையில் பணிபுரிந்தார். பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலைக்கு வரும் வெப்ப மண்டல தாவரவியல் மாதிரிகளை ஆராய்சி செய்து தாவரவியல் கட்டுரைகளையும் விலங்கியல் தொடர்பான கட்டுரைகளையும் எழுதினார். 1887-ல் ரிட்லிக்கு ராயல் சொசைட்டியின் உபகாரச் சம்பளம் கிடைத்தது. உபகாரசம்பளத்தில் பெர்னாண்டோ டி நோரோன்ஹா (Fernando de Noronha) எனும் பிரேசில் கடற்கரை தீவுக்குச் சென்று தாவரவியல், விலங்கியல் மற்றும் புவியியல் குறித்து ஆய்வுகள் செய்தார். 1888-ல் சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவின் முதல் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிட்லி 1905 மற்றும் 1910 க்கு இடையில் மலாயா தீபகற்பத்தில் பயணங்களை மேற்கொண்டு கிங் எட்வர்ட் VII ஸ்கூல் ஆஃப் மெடிசினில் (King Edward VII School of Medicine) தாவரவியல் விரிவுரைகளை வழங்கினார். 1912-ல் பிப்ரவரி மாதம் சிங்கப்பூர் தாவரவியல் துறையின் இயக்குனராக ஓய்வுபெற்றார்.

ரிட்லி தனது 83-ஆம் வயதில் லில்லி எலிசா டோரன் என்பவரை மணந்தார்.

ரப்பர் ஆய்வு

1888-ல் ரிட்லி சிங்கப்பூரின் தாவரவியல் தோட்டத்தின் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே 1877-ல் சில ரப்பர் மரங்கள் பரிசோதனைக்காக ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹமால் என்பவரால் கோலாகங்சாரில் நடப்பட்டிருந்தன. சிங்கப்பூரில் வேலை செய்த காலத்தில் ரப்பர் மர நடவுகள் மலாயா, சிங்கப்பூரைப் பொருளியல் ரீதியாக மேம்படுத்தும் என ரிட்லி ஆய்வு செய்து அறிந்தார்.

ரிட்லியின் ரப்பர் பிரச்சாரம்

1890 முதல் ரிட்லி போகின்ற இடங்களுக்கு எல்லாம் ரப்பர் விதைகளை எடுத்துச் சென்றார். அங்கு உள்ளவர்களிடம் அந்தக் விதைகளைக் கொடுத்து பயிர் செய்யச் சொன்னார். அவர் முன்னெடுப்பால் சிலர் ரப்பர் விதைகளை நட்டனர். தோட்டக்கலை நிகழ்ச்சிகளில் ரப்பர் மரங்களைக் காட்சிக்கு வைத்தார். ரிட்லி Agricultural Bulletin of the Straits & F.M.S எனும் ஆய்வேட்டை சுயமாகப் பதிபித்தார். அதில் ரப்பர் பற்றிய கட்டுரைகளை எழுதினார்.

‘ரப்பர் தந்தை’

மலாயாவில் ரப்பர் மரங்கள் வளர்வதற்கான வழிமுறைகளையும் அதன் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நுட்பங்களையும் ஆராய்ச்சி செய்து பங்களித்ததால் ரிட்லி மலேசியாவின் ‘ரப்பர் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

‘Mad Ridley’ சீவும் முறை

சிலோன் தாவரவியல் பூங்காவில், டாக்டர் எச் டிரிமென் ரப்பர் மர சீவும் நடைமுறைகளை மேம்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். ரிட்லி இலங்கையில் ரப்பர் மரங்களை சீவ டிரிமென் கண்டுபிடித்த ‘herring-bone’ முறையை மறுசீரமைப்பு செய்தார். ரிட்லி கண்டுபிடித்த ரப்பர் மரம் சீவும் முறை ‘Mad Ridley Method’ என்றழைக்கப்பட்டது. Mad Ridley சீவும் முறை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் ரப்பர் மரங்களை நடவு செய்யாமல் பாலை உற்பத்தி செய்ய உதவியது. அதோடு, ரப்பர் மரத்திற்கு காயம் படாமல் பாலைச் சேகரித்தது.

ரப்பர் தோட்டம்

1898-ல் தான் சேய் யான் (Tan Chay Yan) ரிட்லியை சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில் சந்தித்தார். அப்போது, ரிட்லியின் ரப்பர் ஆய்வுகள் பிறரால் பொருட்படுத்தாமல் இருந்த காலம். தான் சேய் யான் ரப்பரின் எதிர்கால சாத்திய வணிகத்தை உணர்ந்து ரிட்லியிடம் ரப்பர் விதைகளைப் பெற்றுக் கொண்டார். ரிட்லி தான் சேய் யானுடன் இனைந்து செம்பாவாங் ரப்பர் தோட்டத்தை நிறுவினார். தான் சேய் யான் ஆசியாவின் முதல் ரப்பர் தோட்ட உரிமையாளர். அதனைத் தொடர்ந்து தான் சேய் யான் புக்கிட் லிந்தாங்கில் நாற்பத்து மூன்று ஏக்கரில் ரப்பர் தோட்டத்தை நிறுவினார். ரிட்லியும் தான் சேய் யானும் கணித்தது போலவே 1906-ஐத் தொடர்ந்து மோட்டார் டயர்கள், சைக்கிள் டயர்கள் மற்றும் விளக்குகளுக்கு மின்சார கம்பிகளுக்கும் ரப்பர் உறை தயாரிக்க பெரும் தேவை இருந்தது. 1910-ல், உலகின் அனைத்து பங்குச் சந்தைகளிலும் ரப்பர் விலை ஏற்றம் இருந்தது.

ரப்பர் விவசாய முறை

ரிட்லி ரப்பர் மரங்களை விரைவில் முதிர்ச்சியடையச் செய்யும் சிறந்த விவசாய வழிமுறைகளைக் கண்டுபிடித்தார். இந்த முறையினால், ரப்பர் மரத்தின் முதிரா காலம் பத்திலிருந்து ஐந்து வருடமாக குறைந்தது.

ரிட்லியின் நூறாம் அகவை நிறைவு

ரிட்லி தனது 100-ஆவது பிறந்தநாளில் உலகின் செழித்த தோட்டங்களை மலாயாவில் தான் காண வாழ்ந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகப் பதிவு செய்துள்ளார். சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் அந்நாளில் ரிட்லியின் படைப்புகளையும் அவரின் பெயர் சூட்டப்பட்ட தாவரங்களையும் கண்காட்சிக்கு வைத்தது. மலாயா வானொலி ரிட்லியிடம் அவரது 100-ஆவது பிறந்தநாளன்று ஒரு மணி நேர நிகழ்ச்சியை நடத்தியது. மலாயாவின் தபால் துறையின் கூட்டமைப்பு சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்பட்ட ஒவ்வொரு கடிதத்திலும் ரிட்லிக்கு வாழ்த்து செலுத்தியது. மலாயா தபால் துறை ரிட்லிக்கு 'Hundredth Birthday, Henry Ridley, Rubber Pioneer' எனப் பொறித்த சிறப்பு பிறந்தநாள் கடிதத்தை அனுப்பியது.

இறுதிக் காலம்

1912-ஆம் ஆண்டு ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி இங்கிலாந்து திரும்பினார். தொடர்ந்து தாவர ஆராய்ச்சிகளைச் செய்தார். 1917, 1922 ஆகிய ஆண்டுகளில் மறுபடியும் மலாயா சிங்கப்பூர் வந்து ரப்பர் விளைச்சலைப் பார்வையிட்டார். தன் இறுதி காலத்தில் பார்க்கும், கேட்கும் திறனை இழந்தாலும் அவர் உரையாடல்கள் ரப்பர் தொடர்பாகவே இருந்தன. தனது ஓய்வுகாலத்தில் The flora of the Malay Peninsula எனும் ஐந்து பாக தாவரவியல் தகவல் களஞ்சியங்களை எழுதினார். மேலும் சுயசரிதை, நாட்குறிப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.  

மரணம்

ரிட்லி தனது 101-ஆம் வயதில் அக்டோபர் 24, 1956 அன்று கியூ (Kew), லண்டனில் தனது வீட்டில் மரணமடைந்தார்.

நினைவு சின்னங்கள்

உலகப் புகழ்பெற்ற கியூ தாவரவியல் பூங்காவில் ஒரு பகுதியை ரிட்லி பூங்கா என்றும் பெயர் சூட்டி அவருக்கு சிறப்பு செய்துள்ளனர். அவருடைய படங்கள், ஆய்வு நூல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மலேசியாவில் கோலாகங்சார், சுங்கை சிப்புட், தைப்பிங், ஈப்போ, ஜொகூர் பாரு, மலாக்கா போன்ற நகரங்களில் உள்ள பல சாலைகளுக்கு ரிட்லி சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விருதுகள்

மலாயா, சிங்கப்பூர் நிலப்பகுதிகளில் அவர் ஆற்றிய தாவரவியல் சேவைகளுக்காக 1911-ஆண்டு அவருக்கு இங்கிலாந்தின் ‘சர்’ பட்டம் கிடைத்தது.

1907-ஆம் ஆண்டு பிரித்தானிய வேந்திய அறிவியல் கழகத்தின் சக ஆய்வாளர் (Fellow of the Royal Society) எனும் கல்வி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

படைப்புகள்

  • அறிவியல் கட்டுரைகள் Journal of the Straits Branch, Royal Asiatic Society, as well as the Journal, Transactions of the Linnean Society of London.
  • தாவரவியல் கட்டுரைகள், Agricultural Bulletin of the Straits & F.M.S. (1901-1911)
  • Spices, 1912
  • The flora of Malay Peninsula (1922-1925)
  • The dispersal of Plants throughout the world (1930)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.