ருங்குஸ்
ருங்கூஸ் இனமக்கள் கடாசான் பழங்குடிப் பேரினத்தின் ஒரு பிரிவினராக வகைப்படுத்தப்படுகின்றனர். சபா மாநிலத்தின் வடக்கிழக்குப் பகுதியில் ருங்குஸ் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். மோமோகூன் ருங்குஸ் அல்லது மோமோகூன் என்றும் ருங்கூஸ் பழங்குடியின மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
இனப்பரப்பு
சபாவின் ரானாவ் மாவட்டத்தில் இருக்கும் நுநுக் ரகாங் எனப்படும் இடத்தில்தான் ருங்குஸ் இன மக்கள் தோன்றியிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் சிறிய உடல்களுடன் சீனர்களைப் போன்ற தோற்றமுடையவர்களாக ருங்குஸ் இன மக்கள் அமைந்திருப்பதால் சீனப்பெருநிலத்திலிருந்து சபா நிலத்துக்குப் பெயர்ந்திருப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது.
சமயம்/நம்பிக்கை
ருங்குஸ் இன மக்கள் ஆன்மவாத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். பிரபஞ்சம் என்பது மனிதர்கள் வாழும் உலகமும் அதீத ஆற்றல் உடைய தெய்வங்களான ஒசுண்டு மற்றும் ரோகனும் அடங்கிய உலகம் என இருவகையானது என நம்புகின்றனர். ஒசுண்டு என்பது நல்லாற்றலை வெளிப்படுத்தும் தெய்வமென்றும் ரோகோன் என்பது தீயாற்றலின் வெளிப்படுத்தும் தெய்வமென்றும் நம்புகின்றனர். உலக வாழ்வில் மனிதர்களடையும் இன்பத்துன்பத்துக்கு இவ்விரு தெய்வங்களே காரணம் என நம்புகின்றனர்.
ரோகோன் மற்றும் ஒசுண்டு தெய்வங்களை ஆற்றுப்படுத்த மோனோலிவ் (சிறு சடங்குகள்) துமோரோன் (நடுத்தரச் சடங்குகள்) மோகினும் (பெருஞ்சடங்குகள் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன. வளர்ப்புக் கோழிகள், பாக்கு, புகையிலை ஆகியவைப் படைக்கப்பட்டுச் சிறுசடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இடைப்பட்ட சடங்குகளில் இரண்டு முதல் மூன்று வரையிலான பன்றிகள் பலி கொடுக்கப்படுகின்றன. பெருஞ்சடங்குகளில் பதினான்கு பன்றிகள் வரையில் பலி கொடுக்கப்பட்டுத் தெய்வ அருள் வேண்டப்படுகிறது. ருங்குஸ் இனப் பூசகர்களான போபோலிசான்களே சடங்குகளை மேற்கொள்கின்றனர்.
வாழ்க்கை முறை
ருங்குஸ் மக்கள் தரையிலிருந்து மூன்று முதல் ஐந்தடி உயரம் கொண்டு கட்டப்பட்ட நீண்ட வீடுகளில் வசிக்கின்றனர். தாழ்வான கூரைகள் கொண்ட வீடுகளில் எழுபத்தைந்து வரையிலான சன்னல்கள் அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு குடும்பத்துக்குமான தனியான அறைகள் நீண்ட வீட்டின் மையத்திலிருக்கும் பொது முற்றத்துடன் கூடியதாக நீண்டவீடுகள் அமைந்திருக்கின்றன. பொது முற்றத்துக்கு அருகே பிளக்கப்பட்ட மூங்கில் கம்புகளை வரிசையாகக் கட்டி இறுக்கப்பட்ட அபாடியான் சாங் (apadiansang) எனப்படும் தளத்தில் குடும்பநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மொழி
டுசுன் துணைமொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாக ருங்குஸ் மொழி வகைப்படுத்தப்படுகிறது. ருங்குஸ் மொழி கூடாட், கொன்சோமோன் ஆகிய பகுதிகளில் பேசப்படுகிறது. ருங்குஸ் மொழியின் முதல் அச்சிடப்பட்ட அகராதி 1966 ஆம் ஆண்டு கிளேர் எனும் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ருங்குஸ் மொழியின் வேர்சொற்களைத் திரட்டி அவ்வகராதி வெளியீடப்பட்டது. 1966 ஆம் ஆண்டு சபா மாநில புரோடேஸ்டண்ட் சபையின் ஏற்பாட்டில் ருங்குஸ்-ஆங்கில அகராதி வெளியீடப்பட்டது.
இறப்புச்சடங்குகள்
.இறப்புச்சடங்கின் போது செய்யப்படும் பாப்பாக் தாராத் எனப்படும் சிறுசடங்கில் இறந்துபோன நபரை உலகிலிருந்து நீங்கச் செய்யவும் மற்ற மனிதர்களுடனான உறவுகளை அற்றுப்போக செய்யவும் மேற்கொள்ளப்படுகிறது. இறந்து போன ஆட்கள் மற்றவர்களுக்கு ஏதேனும் தொல்லைகளைத் தராமல் இருக்கும் பொருட்டு இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பாப்பாக் தவாசி எனப்படும் சடங்கு செய்யப்படுகிறது. இறந்து போன ஆளின் துணை மறுமணம் செய்யும் பொருட்டு இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
திருமணச்சடங்குகள்
ருங்குஸ் பழங்குடி இனத்தில் பெற்றோர்களே திருமண நிச்சயத்தைச் செய்கின்றனர். பெற்றோர்களே தங்கள் மகனுக்கான வரனைக் கண்டடைந்து திருமண நிச்சயத்தைச் செய்கின்றனர். திருமண நிச்சயத்துக்கு அடையாளமாகப் பரிசுப்பொருட்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். திருமண நாள், செலவுகள் ஆகியவற்றைக் குடித்தலைவர்களும் ஊர்த்தலைவர்களும் தலைமையில் பேசி முடிவு செய்கின்றனர். திருமணச் சீர்பொருட்களாக வெற்றிலை, பாக்கு, கிராய் இலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய பொருட்கள் அளிக்கப்படுகிறது.
ருங்குஸ் இனமக்களின் திருமணம் மூன்று முறைகளில் நிகழ்கிறது. முதல் முறையான ஒந்தோங் தோத்துவா எனப்படும் சடங்கு பேரளவிலான திருமண ஏற்பாட்டு முறை, ஒந்தோங் கோபாசான் எனப்படும் முறை நடுத்தரச் செலவிலான திருமண முறையாகக் கருதப்படுகிறது. நவீன காலத்துக்கேற்றவகையில் மாற்றியமைக்கப்பட்ட சடங்குகளுடன் ஒந்தோங் ஒம் லேய்ட் எனப்படும் சடங்கே பெருவழக்கான திருமண முறையாக அமைந்திருக்கிறது.
லுமாபுட் எனப்படும் சடங்கே திருமணச் சடங்கின் உச்சமாகக் கருதப்படுகிறது. மணமக்கள் தம் பெற்றோருக்குப் பரிசுப்பொருட்களை அளித்து ஆசி பெறுகின்றனர். மருமக்களை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாய்ப் பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொண்டு மருமக்களுக்கான சிறப்பு அழைப்புப் பெயர்களை இட்டு பெற்றோர்கள் வாழ்த்துகின்றனர்.
விழாக்கள்
சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ருங்குஸ் மக்கள் மகாஹாவ் எனப்படும் விழாவைக் கொண்டாடுகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து மகாஹாவ் விழாவைக் கொண்டாடுகின்றனர். மகாஹாவ் விழா எல்லா ஆண்டும் கொண்டாடப்படுவதில்லை. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளின் போதே இவ்விழாவைக் கொண்டாடும் முடிவைக் குடித்தலைவர்கள் எடுக்கின்றனர். தானிய விளைச்சல் அதிகமாக இருந்து மிகையான உணவு இருக்கும் பட்சத்தில் அல்லது பேரளவிலான பலிச்சடங்கு மேற்கொள்கின்ற போதே இவ்விழா கொண்டாட முடிவெடுக்கப்படுகிறது.
உசாத்துணை
ருங்குஸ் மக்கள் பண்பாடு, சபா அரசு அதிகாரப்பூர்வக் கையேடு