under review

எம்.சி.மதுரைப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:07, 19 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)
மதுரைப் பிள்ளை

To read the article in English: M.C. Madurai Pillai. ‎

எம்.சி.மதுரைப்பிள்ளை (1880 - 1935) தொடக்க கால தலித் இயக்கங்களின் புரவலர். நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.

பார்க்க பி.எம்.மதுரைப் பிள்ளை

பிறப்பு, கல்வி

எம்.சி.மதுரைப்பிள்ளை 1880-ஆம் ஆண்டு பிறந்தார்.

வைணவப் பணிகள்

எம்.சி. மதுரைப்பிள்ளை 1899-ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஏகாதசி நாளில் ரங்கநாதரை வணங்க ஸ்ரீரங்கம் சென்றபோது அருள்மாரி திருவேங்கட வரயோகி சுவாமிகள் என்கிற வைணவ அடியாரின் உரைகளைச் சில நாட்கள் தங்கிக் கேட்டார். அவரைத் தன்னுடைய குருவாக அடைய எண்ணினார். ஆனால் அதற்கு வரயோகி சுவாமிகளின் அடியார்கள் அனுமதி மறுக்கவே உண்ணாவிரதம் இருக்க முற்பட்டார். அதனை அறிந்த வரயோகி சுவாமிகள் மதுரைப் பிள்ளைக்கு 'மதுரகவி ராமாநுஜ தாசர்’ என்ற பெயரைச் சூட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடும்படிச் செய்தார். பிறகு மதுரை பிள்ளை, சுவாமிகளைத் கோலார் வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்; அவரும் வர ஒப்புக்கொண்டார்.

1990 ஆம் ஆண்டு எம்.சி. மதுரைப் பிள்ளை தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் ஸ்ரீ நம்பெருமாள் சன்னிதியைக் கட்டத் தொடங்கினார். பஜனைக் கூடம், மலர்வனம், கிணறு, வைணவத் துறவிகள் தங்கும் மடம் போன்றவை அதில் அமைந்தன. சொற்பொழிவுகள், விவாதங்கள் நடந்தன; இலவச உணவு அங்கு வழங்கப்பட்டது

1905-ஆம் ஆண்டு சன்னிதி முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஸ்ரீநம்பெருமாள் என்ற பெயரில் பள்ளியொன்றை நிறுவினார் மதுரை பிள்ளை. அங்கிருந்த தலித் குழந்தைகள் இலவசமாகக் கல்வி பெறவேண்டுமென்பது இதன் நோக்கம். தேவநேசன் என்பவரை முதல் தலைமை ஆசிரியராகக் கொண்டு முப்பது மாணவர்களுடன் இப்பள்ளி தொடங்கியது. பிறகு அது 1924-ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1926-ஆம் ஆண்டில் 320 மாணவர்களையும் ஒன்பது ஆசிரியர்களையும் கொண்டு இயங்கியது. ஸ்ரீபெரும்புதூரில் இராமாநுஜ கூடம் ஒன்றையும் கட்டினார் மதுரைப் பிள்ளை.

பணிகள்

தலித் மக்களுக்காகத் தேனாம்பேட்டையில் கல்விச் சாலை நடத்திவந்த ரெவரன்ட் ஜான் ரத்தினம் செய்துவந்த பணிகளுக்கு நிதியளித்தார். ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் முதன்மை நிதிக்கொடையாளராக மதுரைப் பிள்ளை திகழ்ந்தார். அதில் முக்கியத் தொண்டர்களாக இருந்த புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மதுரை வாசகம், ஜார்ஜ் டவுன் மகிமைதாஸ் பத்தர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். மதுரை பிள்ளை சென்னையில் மையம்கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோர் அரசியலோடு பிணைப்புக்கொண்டிருந்தார்.

1929-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சைமன் கமிஷன் வந்தபோது சென்னை மாகாணத்தின் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்களான அமைப்புகள், 'சென்னை மாகாண தாழ்த்தப்பட்டவர்கள் பெடரேஷன்’ என்ற பெயரில் ஒன்றுகூடி கமிஷனைச் சந்தித்தனர். இதனை ஒருங்கிணைத்ததிலும் சாட்சியமளித்ததிலும் மதுரைப் பிள்ளை பங்குவகித்தார்.

1932-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் கலந்துகொள்வதற்கு உந்துதலாக இருந்தார். பூனா ஒப்பந்தத்தின்போது மதுரைப் பிள்ளை அம்பேத்கருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருந்தார்.

1921-ஆம் ஆண்டு பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் ஏற்பட்டதையொட்டிப் புளியந்தோப்பில் கலவரம் நிகழ்ந்தது. கலவரத்தில் பாதிப்பைச் சந்தித்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மதுரைப் பிள்ளை உதவியாக இருந்தார் என்று ஏ.பி.வள்ளிநாயகம் குறிப்பிடுகிறார்.

மதுரைப் பிள்ளை சென்னை நகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைதாப்பேட்டை தாலுகா போர்டு அங்கத்தினரான மதுரைப்பிள்ளை, நாளடைவில் செங்கல்பட்டு ஜில்லா போர்டு உறுப்பினராகவும், கல்வித் துறை உறுப்பினராகவும் ஆனார். சென்னை நகர கவுரவ மாஜிஸ்டிரேட் பதவியை வகித்தார். அவருக்கு ஆங்கில அரசு அளிக்கும் 'ராவ்சாகேப்' பட்டம் அளிக்கப்பட்டது.

1925-ல் மதுரைப்பிள்ளை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர் ஆனார்.

மறைவு

1935-ல் மதுரைப் பிள்ளை மறைந்தார்

குறிப்பு

ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது

உசாத்துணை


✅Finalised Page